Wednesday, February 29, 2012

அலை ஓசை..




ஏகாந்தமான இயற்கையின் ஓசையை என் எழுத்துக்களால் சிதிலப்படுத்தாமல் ஒரு பதிவு!
நான்கு வருடங்களுக்கொருமுறை வரும் பிப்ரவரி 29ஆம் தேதிக்காக இந்த அலைஓசை...

Monday, February 27, 2012

பூரி,கிழங்கு & சட்னி

பூரி என்றால் அதற்கு உருளை கிழங்கு மசாலா-தேங்காய் சட்னி காம்பினேஷன் தான் எங்க வீட்டில என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அதை தனி ரெசிப்பியாக போஸ்ட் பண்ண இப்பதான் நேரம் கூடி வந்திருக்கிறது. :)

உருளைகிழங்கு மசால் -தேவையான பொருட்கள்
வேகவைத்த உருளைக்கிழங்கு -2
பொடியாக நறுக்கிய கேரட் - 3 டேபிள்ஸ்பூன்
வெங்காயம்(மீடியம் சைஸ்)-1
பச்சைமிளகாய்-2 (காரத்துக்கேற்ப)
வரமிளகாய்-1
தக்காளி-1
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை- கொஞ்சம்
சர்க்கரை-1/4டீஸ்பூன்
தண்ணீர்- 3/4கப்
உப்பு
எண்ணெய்

செய்முறை
வெந்த உருளைக்கிழங்கை தோலுரித்து உதிர்த்து வைக்கவும்.
வெங்காயம்,மிளகாய்,தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவிட்டு கடுகு-சீரகம்-கறிவேப்பிலை தாளிக்கவும்.
வெங்காயம்,பச்சைமிளகாய்,கிள்ளிய வரமிளகாய்,கேரட்,தக்காளி,மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும்.
உதிர்த்த கிழங்கு,தேவையான உப்பு சேர்த்து கிளறிவிட்டு தேவையான தண்ணீர் (1/2கப் to 3/4கப் சேர்த்திருப்பேன்) விட்டு கொதிக்கவிடவும்.
மசால் வெகுநேரம் கொதிக்கத் தேவையில்லை, ஒரு கொதி வந்ததும், சர்க்கரை சேர்த்து, நறுக்கிய மல்லி இலை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான உருளைகிழங்கு மசால் ரெடி. சப்பாத்தி-பூரிக்கு நல்லா மேட்ச் ஆகும்.

பூரி -தேவையான பொருட்கள்
கோதுமை மாவு/ஆட்டா மாவு -11/2கப்
தண்ணீர் -1/2 கப்
உப்பு-1/4டீஸ்பூன்

செய்முறை
பொதுவாக சப்பாத்திக்கு மாவின் அளவில் பாதி தண்ணீர் ஊற்றி பிசைந்தால் சரியாக இருக்கும், ஆனால் பூரிக்கு மாவு கொஞ்சம் கெட்டியாக இருக்கவேண்டும்,அதனால் தண்ணீர் கொஞ்சம் குறைவாக ஊற்றினாலே சரியாக இருக்கும்.

மாவுடன் உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பிசைந்து, காற்றுப்புகாத பாத்திரத்தில் அரைமணி நேரம் வைக்கவும்.

பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.

பூரி புஸ் என்று வருவது உருண்டைகளை சீராக தேய்ப்பதில் ( திரட்டுவது
/பரத்துவது..அவிங்கவிங்க ஊர்ல என்ன சொல்லுவீங்களோ, அந்த வார்த்தையைப் போட்டுக்குங்கப்பா! எங்க வீட்டுல தேய்ப்பதுன்னுதான் சொல்லுவோம். :) ) அதனால் பூரிக்கு உருண்டையே சின்னதாக பிடித்துக்கொண்டால் சிறு பூரிகளை தேய்ப்பதும் சுலபமாக இருக்கும். பொரிப்பதற்கும் அதிகம் எண்ணெய் தேவையில்லை,கொஞ்சம் எண்ணெயிலே சுட்டு எடுத்துவிடலாம்.

மைதா அல்லது அரிசிமாவு அல்லது எண்ணெய் தொட்டுக்கொண்டு பூரிகளை வட்டமாகத் தேய்த்து வைத்துக்கொள்ளவும்.

மிதமான சூட்டில் எண்ணெய் காயவைத்து பூரிகளை ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும். எண்ணெயில் போட்டதும் கரண்டியால் பூரியை லைட்டாக அழுத்திவிட்டால் புஸ்ஸென்று உப்பி வரும். அதன்பிறகு திருப்பி விட்டு இரண்டுபுறமும் பொன்னிறமானதும் எடுத்து பேப்பர் டவலில் எண்ணெய் வடியவிட்டு சூடாக மசால் மற்றும் தேங்காய் சட்னியுடன் பரிமாறவும். தேங்காய் சட்னி ரெசிப்பி பலகாலம் முன்பே குடுத்திருக்கிறேன். அதற்கான லிங்க் இங்கே.

இது விடுமுறை நாட்களில் ப்ரேக்ஃபாஸ்டுக்கு செய்யலாம், சாப்புட்டதும் சூடா ஒரு கப் காஃபி/டீ குடிக்க மறந்துராதீங்க!:)

Thursday, February 23, 2012

தொடுவானம்...

காரில் போகப்போக என்னுடன் துணைக்கு வந்த மேகங்களும் நீலவானமும்..

சூரியன் மேற்கில் புதையும் தருணம்..காற்று மேகங்களின் தலையைக் கலைத்து விளையாடிய ஒரு கணம்..
பஞ்சு மிட்டாயைக் கிள்ளிப்போட்டது போல வானமெங்கும் குட்டிக்குட்டியாய்க் கிள்ளிப்போட்ட மேகங்கள்..யார் சாப்பிடுவதற்கோ? :)

இந்தப் படத்தில் இடது மூலையில் செடிகளுக்கு சற்று மேலே இருந்த மேகக்கூட்டம் என் கண்ணைக் கவர்ந்தது..கார் கண்ணாடிக்குள் இருந்து படமெடுக்கையில் அவ்வளவாத் தெரியலையோ??
தூரத்தில் மழை பொழிகிறது..

மலையுச்சியைத் தட்டிக்கொடுக்கும் மேகம்...

பாலையும், பாலையின் வானமும், வானத்தில் மேகமும்.. இதுவும் ஒரு அழகுதான்!

திரும்பி வந்த பாதை..

பனியுடன் ஒரு சூரிய அஸ்தமனம்..

இனியும் யாரும் கேட்பீங்க..எங்கே இந்த மகியைக் காணோம்னு?? போட்டோவாப் போட்டே ஒரு வழி பண்ணிருமே,வராம இருக்கவரை நல்லதுன்னுதானே நினைக்கறீங்க?? :D :D

என்னைக் காணவில்லை என்றதும் அக்கறையாய் விசாரித்த வலையுலகின் நட்புக்களுக்கும் போனிலும் நேரிலும் கேட்டவர்களுக்கும்.. a small note of thanks with a loooo..ng stem rose! :)

Thanks For Your Concern!

Monday, February 13, 2012

மிளகாய் குழம்பு / Mirchi ka Salan

இந்த குழம்பில் மிளகாய்க்கு பதிலா கத்தரிக்காய், குடைமிளகாய் இப்படி ஏதாவது காயும் போட்டுக்கலாம். :) இது ஆந்திரா ஸ்பெஷல் குழம்பு, பிரியாணிக்கு சைட் டிஷாக செய்யப்படுவது.

தேவையான பொருட்கள்
(காரமில்லாத) பெரிய மிளகாய்-3
வெங்காயம்-1
புளிக்கரைசல்-1/4கப்
மிளகாய்த்தூள்-11/2டீஸ்பூன்(மிளகாயின் காரத்துக்கேற்ப குறைத்துக்கொள்ளவும்)
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்

அரைக்க
தேங்காய்-2டேபிள்ஸ்பூன்
எள்ளு-1டேபிள்ஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை-2டேபிள்ஸ்பூன்


செய்முறை
1.கடாயில் எண்ணெய் காயவைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியதும், விதைகளை எடுத்து பெரிய துண்டுகளாக நறுக்கிய மிளகாய் சேர்த்து வதக்கவும். (நான் பஜ்ஜி மிளகாயை உபயோகித்ததால் நான்காக கீறிவிட்டு முழுதாக சேர்த்திருக்கேன்.)

2.அரைக்க வேண்டிய பொருட்களை தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.

3.மிளகாய் வதங்கியதும் அரைத்த விழுது +மஞ்சள்தூள் +மிளகாய்த்தூள் + உப்பு சேர்க்கவும்.

4.புளிக்கரைசல் சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்துமல்லி இலைதூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

5.காரசாரமான மிர்ச்சி கா சலன் ரெடி. பிரியாணியுடன் சாப்பிட பர்ஃபெக்ட் சைட் டிஷ்.

Wednesday, February 8, 2012

தவா புலாவ்/ Tawa Pulao

தேவையான பொருட்கள்
உதிரியாக வடித்த சாதம் -11/2கப்
நறுக்கிய காய்கறிகள் -1கப்
(1 கேரட், 5 பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டாணி, கலர் குடைமிளகாய்)
தக்காளி -1
மஞ்சள்தூள்-1/4கப்
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்
பாவ்பாஜி மசாலா- 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு -1டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லி இலை கொஞ்சம்
சீரகம்-1டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு

செய்முறை
காய்களை கழுவி நடுத்தர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.

கேரட்-பீன்ஸ்-பட்டாணியை சிறிது தண்ணீர் தெளித்து மைக்ரோவேவில் 2 நிமிடங்கள் வேகவிட்டு எடுத்துவைக்கவும்.

கடாயில் எண்ணெய் காயவைத்து காலிஃப்ளவரை லேசாக வறுத்து, வேக வைத்த காய்களையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கி எடுத்துவைக்கவும். (குடைமிளகாயை வதக்கத் தேவையில்லை)

அதே கடாயில் இன்னும் சிறிது எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் தேவையான உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள்,பாவ் பாஜி மசாலா சேர்த்து காய்களையும் சேர்க்கவும். 2-3 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு வதக்கவும். தீயை ஹை ஃப்ளேமில் வைத்து செய்யவும். காய்கள் முழுவதும் வேகாமல் கொஞ்சம் crunchy-ஆக இருந்தால் நல்லா இருக்கும்.

சில நிமிடங்கள் கழித்து சாதம் சேர்த்து கிளறி..
சாதம் காய்கறி கலவையுடன் கலந்து சூடானவுடன், கொத்துமல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்.
சுவையான தவா புலாவ் தயார். தயிர் - வெள்ளரி பச்சடியுடன் சாப்பிட அருமையாய் இருக்கும். மீதமான சாதத்தை காலி செய்ய இது ஒரு இன்ட்ரஸ்டிங் ரெசிப்பி! :) அதுக்காக பழைய சாதத்திலயேதான் செய்யோணும்னு இல்லீங்க..நீங்க புதுசா சாதம் செய்தும் செய்யலாம். பாஸ்மதி அரிசியில் செய்தால் படத்தில் இன்னும்அழகா(!) வந்திருக்கும். இது (எங்க ரெகுலர்) புழுங்கல் அரிசி சாதத்தில் செய்தது. ;)
~~~
தவா புலாவ் மும்பையிலே மிகவும் பிரபலமான உணவுவகை..சாலையோரக் கடைகளில் தவா புலாவ் சூடாக செய்து தருவாங்களாம்..இந்த முறை ஊருக்கு போயிட்டு வரும்போது மும்பை வழியாக வந்தோம், அப்பொழுது சில(பல) மணி நேரம் ட்ரான்ஸிட் டைம் இருந்தது. விமான நிலைய பணியாளர்களுக்கான கேன்டீன் என்று நினைக்கிறேன், எங்க ஏர்லைன் கேட்டைத் தேடியதில் அந்த கேன்டீனைக் கண்டுபிடித்து மதிய உணவு முடித்துவிட்டு மூட்டை முடிச்சுக்களுடன் வெயிட்டிங் ரூமில் உட்கார்ந்திருந்தோம்.

இரவு உணவுக்கு மறுபடியும் பெட்டிகளை எடுத்துக்கொண்டு போகமுடியாது..ஓரொருவராகத்தான் போய் சாப்பிட்டுவரவேண்டும் என்று நினைத்து மண்டை காய்ந்துகொண்டிருந்தப்ப ஒரு ஆள் ரூமில் தேநீர் விற்றுக்கொண்டு வந்தார். டீ வாங்கிய பொழுது இரவு உணவு வேண்டுமானால் நானே கேன்டீனில் இருந்து வாங்கிவந்து தருகிறேன், என்ன வேண்டும் என்று ஆர்டர் பண்ணுங்க..உணவைக் கொடுத்துவிட்டு பணம் வாங்கிக்கொள்கிறேன் என்றார். ஆஹான்னு ஒரு தவா புலாவ், பனீர் கறி மற்றும் நான் ஆர்டர் செய்தோம், வாங்கிவந்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
பனீர் கறி, தவா புலாவ் அழகா பேக் பண்ணி, சுட்ட அப்பளம் தனியே ஒரு கவரில்..இன்னொரு கவரில் வெங்காயத்துண்டுகள், எலுமிச்சைத் துண்டுகள், Naan தனியா ஒரு கவரில்,பேப்பர் ப்ளேட்,ஸ்பூன் தனியே என்று நீட்டாக கொண்டுவந்து தந்தார். சாப்பாட்டை குடுத்த உடனே பணம் தர பர்ஸை எடுக்க, "அவசரமில்லை, சாப்பிட்டு முடிங்க..நான் வந்து வாங்கிக்கறேன்" என்று சொல்லிப்போனவர் பின்னிரவில் வந்து வாங்கிக்கொண்டார். காசும் ரொம்பவெல்லாம் இல்லை..ரீஸனபிளாதான் இருந்தது.

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம்...ரொம்ப சுத்த்தமாக இருந்தது என்று சொல்ல முடியவில்லை..ஆனா இந்த சர்வீஸ்(!) சூப்பர்! Mumbaikar rocks! :) :)

மும்பை ஸ்பெஷல் தவா புலாவை வீட்டில் செய்து ருசித்ததும் கொஞ்சம் கொசுவர்த்தியும் சுத்தியாச்சு. Hopefully you guys enjoyed as usual! ;))))))))

Thursday, February 2, 2012

கதம்பம்..

ஏழு காய் சாம்பார் குறிப்பை எழுதுகையில் "கதம்ப சாம்பார்" என்ற பெயர் நினைவு வரவே இல்லை..கருத்தினைத் தெரிவித்த நட்பூக்கள் சொன்னதிலிருந்து இந்த கதம்பம் என்ற வார்த்தை அடிக்கடி மனசில் அலைந்துகொண்டே இருக்கிறது. அடுத்து என்ன...மலரும் நினைவுகள்தான்!! :)

கதம்பம்..மல்லிகை(அ)முல்லை, கோழிக்கொண்டை, மரிக்கொழுந்து,மருகு, என்று வெள்ளை,சிவப்பு,பச்சை என்று மூன்று வண்ணப்பூக்களைத் தொடுத்த சரத்தைச் சொல்வோம் எங்க ஊரில்..சிலநேரங்களில் வெள்ளைநிறத்துக்கு ஒரு பூ சேர்த்திருப்பார்கள். (பெயர் நினைவு வரல..வெள்ளைவெளேர்னு முல்லை போலவே இருக்கும்,ஆனா வாசனையே சுத்த்த்த்தமா இருக்காது. என்று சொல்லிருந்தேன், பிறகு நினைவு வந்தது.. ;), "காக்கடா" என்று சொல்லுவோம். எடிட் பண்ணலாம்னு வந்தா, குறிஞ்சியும் சொல்லிருக்காங்க.. :)). கலர்ஃபுல்லாக அழகாக இருக்கும்.

பொதுவாகவே எனக்கு செடிகளில் இருந்து மல்லி,முல்லை,ஜாதிமுல்லை பூக்களை பறிப்பதும் பிடிக்கும், நெருக்கமாக சரம் தொடுக்கவும் மிகவும் பிடிக்கும். ஊரில் இருக்கையில் கட்டிய சரம் வாங்குவதை விட விடுபூ(உதிரிப்பூ) வாங்கி கட்டி(சரம் தொடுத்து) வைப்பதே வழக்கம்.

பூக்காரர் மாலை நேரங்களில் விடுபூவை பெரிய கூடைகளில் வைத்துக்கொண்டு சைக்கிளில் வருவார். சிறு தராசில், எடைக்கல் இல்லாமல் ஒரு ரூபாய் நாணயங்களைப் போட்டு "2 எடை(2 நாணயங்கள்) ஐந்து ரூபாய்--3 எடை பத்து ரூபாய்" இப்படி விற்பார்கள். காலை நேரம் பூச்சரங்களும், ஊட்டி(!) ரோஸ் பூக்களும் வரும்.

ஸ்கூல்/காலேஜ்/வேலைக்குக் கிளம்பும் அவசரத்திலும் அப்படியே போற போக்கில பூ வாங்கி வைத்துக்கொண்டு போனதுண்டு. பஸ்ஸ்டாப் பூக்காரம்மாக்கள் பூவைத் தலையில் வைக்க ஹேர்பின்( to be more precise in our slang, பூ குத்தற(!) சைடூசி! :)) ) கூட விற்பாங்க. வீடுகளில் செடிவைத்து விற்பனை(!) செய்வோர் டம்ளர் கணக்கில் விற்பாங்க.அங்கே சீக்கிரமாப் போனால்தான் பூ கிடைக்கும், இல்லன்னா அக்கம் பக்கம் இருக்கும் போட்டிக்காரிகள்(!) வாங்கிட்டுப் போயிருவாங்க. ;)

கோவையில் காந்திபுரம்-க்ராஸ்கட் ரோடு கார்னரிலும், உள்ளே லக்ஷ்மி காம்ப்ளக்ஸ்,கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர் அருகிலும் நெருக்கமாகத் தொடுத்த மல்லிகைச் சரங்களை விற்பார்கள். மாலை மாதிரி அவ்வளவு நெருக்கமாகத் தொடுக்கப்பட்டிருக்கும். மல்லிகையின் இடையிடையே ப்ளாஸ்டிக்கில் வண்ணவண்ணமாக குட்டிகுட்டிப் பூக்கள் சேர்த்து கோர்க்கப்பட்ட மல்லிகைச் செண்டுகளும் கல்யாண சீஸன்ல படுவேகமா விற்பனையாகும். பட்டுச்சேலைக்கு மேட்சான கலரில் பூ கோர்த்த மல்லிகைச் செண்டு சூப்பரா இருக்கும்ல?;)

பூவை நெருக்கமாகத் தொடுத்து தண்ணீர் தெளித்து (எவர்)சில்வர் டப்பாவில் போட்டு மூடிவைத்தால், அடுத்தநாள் காலையில் சூப்பரா வைச்சுட்டுப் போலாம்..ம்ம்ம்...அது ஒரு அழகிய கனாக்காலம்!
இது இந்த முறை ஊருக்குப் போயிருந்த போது தொடுத்த முல்லைச்சரம்..பூவைக் கட்டி எடுத்து ஃப்ரிட்ஜில் வைச்சு வீட்டிலிருந்த எல்லாருக்கும் எடுத்தும் கொடுத்தேன்,ஆனா நான் மட்டும் வைக்க மறந்துட்டேன். இங்கே வந்து படங்களைப் பார்க்கையில்தான் நினைவுவந்தது. :)

***அப்டேட்***
யு.எஸ். மற்றும் கனடா வாழ் தமிழ்த்திருமக்களே, உங்களுக்கு மல்லிகை,முல்லைப்பூ எவ்வளவு விலையா இருந்தாலும் பரவால்லை, வாங்கியே ஆகணும்னு ஆசைப்பட்டீங்கன்னா, இதோ இங்கே க்ளிக்குங்க. இந்த பேன்ஸி ஃப்ளோரிஸ்ட்ஸ் மல்லி, முல்லை இப்படி பூக்கள் எல்லாமே விற்பனை செய்யறாங்க. கல்யாணம் கச்சேரி எல்லாத்துக்கும் பூ அலங்காரமும் செஞ்சு குடுக்கறாங்களாம்.....(பூ விக்கற தகவல் சரி,,,அடுத்தது எதுக்குன்றீங்களா??? ஜஸ்ட் இன் கேஸ்...ஹிஹிஹி! :))))))

~~~
புற்றுநோய் விழிப்புணர்வை எல்லாரிடமும் பரப்பும் வகையில் நேசம் அமைப்பினரும் யுடான்ஸ் திரட்டியும் இணைந்து பல்வேறு போட்டிகள் நடத்துகிறார்கள்.

இதிலே பங்குபெறுவதற்காக நம் தோழமைகள் பலரும் படைப்புக்களை அனுப்பியிருக்காங்க... வானதி- விடியல் , ஆசியா அக்கா- வலி ,சந்தனா-அனைவரும் நலமா? , ஜலீலா அக்கா -ஆயிஷாமாவின் தன்னம்பிக்கை, அப்பாவி தங்கமணி -- ஆசீர்வாதம், ஹுஸைனம்மா - வருமுன்காப்போம் இப்படி...ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள், வருமுன் காக்கும் முயற்சிகள், வந்தபின்னர் செய்யவேண்டிய வழிமுறைகள் என்று ஒவ்வொருவரும் தத்தம் பாணியில் பல தகவல்ககளைப் பகிர்ந்திருக்கிறார்கள். இணைப்புகள் கொடுத்திருக்கிறேன். படித்துப் பாருங்கள். உங்களுக்குத் தெரிந்த தகவல்களை எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
~~
மீராஸ் டேலன்ட் கேலரி யில் இருந்து என் வலைப்பூவுக்கு ஒரு விருது கொடுத்திருக்காங்க.. மீராவின் வலைப்பூவில் பல்வேறு கைவேலைகளில் இருந்து வட இந்திய உணவுவகைகள் வரை பல ஸ்வாரசியமான விஷயங்கள் உண்டு.கவிதை,ஓவியம், சமையல், கைவேலை என்று பலதுறைகளில் பிரகாசிக்கும் மீராவிடம் இருந்து இந்த விருதைப் பெற்றது சந்தோஷமாக இருக்கிறது.மிக்க நன்றி மீரா!! :)

இந்த விருதினை
1.வானதி -- "வானதி'ஸ்"
2.ப்ரியா ராம் -- "ரசிக்க ருசிக்க"
3.அதிரா -- "என் பக்கம்"
4.ஏஞ்சலின் -- "காகிதப்பூக்கள்"
5.விஜி -- "விஜி'ஸ் க்ராஃப்ட்ஸ்"
இவர்களுக்கு வழங்குகிறேன். விருது பெற்ற ஐவருக்கும் வாழ்த்துக்கள்! 200க்கு குறைவான பின்தொடர்வோர்( followers) இருக்கும் உங்களுக்கு விருப்பமான வலைப்பூ தோழமைகளுடன் இந்த விருதினைப் பகிர்ந்துகொள்ளுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

விருதை மட்டும் குடுத்தா நல்லாருக்காதில்ல..இந்தாங்க, பீன்ஸ் கேஸரோல் & கோக்கனட் கேக்! கேஸரோல் சுத்த சைவம்..கேக்ல முட்டை சேர்த்திருக்கு. பார்த்து சாப்பிடுங்க. :)

~~
அடுத்து எங்க வீட்டுப்பக்கம் இருக்கும் ஒரு கடற்கரை..வீட்டிலிருந்து 20 நிமிட பயணதூரத்தில் இருக்கு..ஒரு புறம் மலைக்குன்றுகள், மறுபுறம் பஸிஃபிக் கடல் என்று அழகாக இருக்கும் சிறிய கடற்கரை..பலமுறை போயிருக்கிறோம்..ஒரு முறை சென்ற பொழுது கடலோரம் இருந்த உணவகம் ஒன்றில் லன்சுக்குப் போலாம் என்று நினைத்து மாலை 4 மணிக்கு சாப்பிட்டுக்கொண்டே சூரியன் கடலில் மூழ்கிய காட்சியை ரசித்தோம்..அதே நேரம் கடலோரம் நடந்துகொண்டிருந்த ஒரு போட்டோஷூட் கண்ணில் பட்டது. :)

நம்மள்லாம் கல்யாணம்னா மண்டபம் புடிச்சு,ஸ்டேஜ் டெகரேஷனுக்கு தனியா ஒரு செலவு செய்து போட்டோ எடுப்போம், இங்கே கல்யாணத்தை முடித்துவிட்டு சன்ஸெட் சமயத்தில் கடற்கரைக்கு வந்து கடலன்னையும் வானமும் இயற்கையாக சிருஷ்டித்திருந்த எழில்பொங்கும் செஞ்சாந்து நிறப் பிண்ணணியில் மணமக்கள் புகைப்படம் எடுத்துகிட்டு இருந்தாங்க...எந்த ஊர் கல்யாணமா இருந்தாலும் எப்பவுமே கல்யாணக்கூட்டத்தைப் பார்த்தாலே ஒரு சந்தோஷம்தான், இல்லீங்களா? :)
சாப்பாடு(!) முடிந்தபிறகு டிஸர்ட் ஒன்று சாப்பிட்டோம்,சூப்பரா இருந்தது..சின்னமன் ப்ரெட் புடிங்..ரொட்டித்துண்டுகளை எண்ணெயில் பொரிச்சு எடுத்து சர்க்கரை+சின்னமன் பவுடர் சேர்த்து கலந்து தருகிறார்கள். சுடச்சுட சாப்பிட சூப்பரா இருந்தது. ஆனால் கொஞ்சம் சாப்பிட்டதுமே, புடிங் ஆறியும் போகவும் திகட்ட ஆரம்பிச்சது!;) அதனால் என்ன..எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத சூரிய அஸ்தமனம் இருக்கே...அதை அனுதினமும் ரசித்தாலும் சலிக்காது எங்களுக்கு..உங்களுக்கு எப்படி? :)))))

LinkWithin

Related Posts with Thumbnails