
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்! பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட ஆதவன் அருள் புரியட்டும்! அறுவடைத் திருநாள்-மாட்டுப் பொங்கல்-காணும் பொங்கல் என எல்லா நாட்களும் மகிழ்ச்சி நிலவ வாழ்த்துக்கள்!
வீடெல்லாம் ஒட்டடை அடித்து, பூசி (ஒயிட் வாஷ்..வெள்ளை அடிக்கிறதுங்க..),
வளித்து(சாணமிட்டு மெழுகுவது),முறுக்கு சுட்டு,லட்டு பிடித்து, மைசூர்பா கிளறி..அப்பாடின்னு ஓய்ந்து ஒரு நிமிஷம் உட்கார நேரமில்லாம பொங்கலன்னிக்கு காலங்காத்தால எழுந்து வாசல் தெளித்து,கோலமிட்டு,கோலத்தில வண்ணப்பொடிகள் இட்டு, புத்தரிசியில் பொங்கல் வைக்கப்போகும் எல்லாருக்கும் "பொங்கலோ பொங்கல்!!" வாழ்த்துக்கள்!
எல்லார் வீட்டிலும்(ப்ளாகிலதானுங்க!:) ) சர்க்கரைப்பொங்கலையே பார்த்திருப்பீங்க, ஃபார் எ சேஞ்ச்..எங்க வீட்டிலிருந்து எல்லாருக்கும் '
பனானா-வால்நட் கேக்' குடுக்கிறோம்! :)
தேவையான பொருட்கள்ஆல் பர்ப்பஸ் மாவு/மைதா -11/4கப்
சர்க்கரை-1/2கப்
ஒன்றிரண்டாக உடைத்த வால்நட்-1/2கப்
கனிந்த வாழைப்பழம்-2
பேக்கிங் பவுடர்-1/2டீஸ்பூன்
பேக்கிங் சோடா-1/2டீஸ்பூன்
முட்டை(அறை வெப்பநிலையில்)-2
வெண்ணை(அறை வெப்பநிலையில்)-4டேபிள்ஸ்பூன்
பால்(அறை வெப்பநிலையில்)-1/4கப்
வெனிலா எஸன்ஸ்-1டீஸ்பூன்
பட்டை தூள்(சின்னமன் பவுடர்)-1/4டீஸ்பூன்
செய்முறைமைதாவுடன் பேக்கிங் சோடா,பேக்கிங் பவுடர்,சின்னமன் பவுடர் சேர்த்து 2-3 முறை சலித்து வைக்கவும்.
முட்டையில் வெள்ளைக்கரு-மஞ்சள்கரு தனித்தனியாகப் பிரித்து வைக்கவும்.
வெண்ணையுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். அதனுடன் முட்டையின் மஞ்சள் கருக்கள்,வெனிலா எஸென்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
சலித்து வைத்த மாவு மற்றும் பாலை, வெண்ணை-சர்க்கரை கலவையுடன் சிறிதுசிறிதாக சேர்த்து மெதுவாக கலக்கவும். மாவு-பால்-மாவு-பால் என்ற வரிசையில் கலக்கவும்.
வாழைப்பழங்களை பீட்டரால் நன்றாக மசித்து மாவுக்கலவையுடன் சேர்க்கவும்.
முட்டையின் வெள்ளை கருக்களையும் நன்கு நுரை பொங்க கலந்து மாவுடன் சேர்த்து எல்லாம் ஒன்று சேரும்படி நன்றாக கலந்துவிடவும்.
இறுதியாக உடைத்த வால்நட்-டை சேர்த்து கலக்கவும்.

வெண்ணை தடவிய பேக்கிங் பாத்திரத்தில் கேக் கலவையை ஊற்றி..

350F ப்ரீஹீட் செய்யப்பட்ட அவன்-ல் 45 முதல் 50 நிமிடங்கள் பேக் செய்யவும்.

பனானா-வால்நட் கேக் ரெடியாகிடுச்சு..2 மணிநேரம் ஆறவைத்த பின்னர், பேக்கிங் பான்-லிருந்து கேக்கை எடுத்து வைச்சிருங்க. இனி என்ன,கேக்கை வெட்ட வேண்டியதுதான்!
ரெடி,ஒன்...டூ...த்ரீ..

யாரோ 'ஹேப்பி பர்த்டே டு யூ!' பாடறீங்க போல இருக்குது?!! தேங்க் யூ,தேங்க் யூ வெரிமச்! போனவருஷம் இதே நாளில்தான்
இந்த வலைப்பூ உதயமாச்சு!! ஆமாங்க,இன்று என் வலைப்பூவுக்கு முதல் பிறந்தநாள்! :) :)

என்னவர் கேக்-ஐ வெட்டிகிட்டு இருக்காரு..காலைல எல்லாரும் கேக் பரிமாறப்படும். அதுவரைக்கும் அன்பா காத்திருக்கும் உங்களனைவரின் பொறுமைக்கும் நன்றி! ஹிஹிஹிஹி!
"தமிழர் திருநாளுக்கு பனாஆஆஆஆனா வால்(!!)நட் கேக் குடுக்கும்போதே தெரியுது உன் லொள்ளு"ன்னு ஒரு குரல் தொலைவில் கேக்குது..குரல் நெருங்கிவருமுன் நான் எஸ்கேப் ஆகிக்கறேன்,நன்றி,வணக்கம்!
~~~
என் வலைப்பூவைத் தொடங்கி இன்றுடன் 365 நாட்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டன என்பதைக் கொஞ்சம் பெருமிதத்துடனும்,நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த ஒருவருடத்தில் என் மனத்தோட்டத்தில் பல புதிய நட்புப் பூக்கள் பூக்க இந்த வலைப்பூ ஒரு காரணமாக இருக்கிறது. இதுவரையிலும் நீங்களனைவரும் தந்த/தரும்/தரப்போகும் ஊக்கத்திற்கும்,ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றி! :) :) :)
~~~