Sunday, February 24, 2019

அறுந்த வாலு..குறும்பு தேளு..!!

 ஆனாலும் அவ ஏஞ்சலு!!! :) :D

ஆமாங்க..எங்க வீட்டு குட்டி தேவதை ஒரு அறுந்தவாலு, குறும்புத்தேளு..விஷமக்காரக் குட்டி!! அப்பாவை தன் சுண்டுவிரலில் கட்டிச் சிறை வைப்பதிலாகட்டும்...
அம்மாவை அரை நொடி அக்கடான்னு அமர விடாமல் படுத்துவதிலாகட்டும்..
அக்காவை பார்த்துப்பார்த்து அவள் செய்யும் எல்லா வேலைகளையும் செய்வதாகட்டும்..
ஜீனோவை "அட்ட்ட்ட்டி (அடி!!)..." என்று செல்ல மிரட்டல் செய்வதாகட்டும்...
அப்பாவோ அம்மாவோ கோபக்குரல் கொடுத்தால் கழுத்தைக்கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சி சமாதானப்படுத்துவதாகட்டும்..
லயாவுடன் சண்டை போட்டு அடி பின்னுவதாகட்டும்...
ஸ்வராக்குட்டியை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது எங்க சின்ன சாம்ராஜ்யத்தில்!!

இப்பத்தான் சின்னூண்டு விரல்களைப் படம் பிடித்த நினைவாக இருக்கிறது..அதற்குள் இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டன..அம்மணி இப்ப எங்களையெல்லாம் மிரட்டியது போதாதென்று வருண பகவானையும் மிரட்ட ஆரம்பித்துவிட்டார். மழை வரும்போதெல்லாம் "ரெய்ன் ரெய்ன் கோ அவே.." பாடிப்பாடி போரடித்தபின் ஒருநாள் வெளியே பெய்து கொண்டிருந்த மழைக்கு ஒரே மிரட்டல்..."ரெய்ன்...ஸ்டாப்!! அக்கா அண்ட் பாப்ப வான்ட்ஸ் டு ப்ளே..ஸ்டாப்!" என்று கத்த ஆரம்பித்தார்..ஆனாலும் மழை விடலைங்கறது வேற கதை..ஹிஹி..!! 

இரண்டாம் பிறந்தநாளுக்கு முதல்நாள் கொட்டிய மழையில் தானே குடையைப் பிடித்துக்கொண்டு நடப்பதாய் அடம்பிடித்து அக்காவும் தங்கையும் மழையில் கொட்டமடித்து கும்மாளம் போட்டார்கள்..
கூடவே அக்காவுக்கு ஒரு வாரமாய் இருந்த ஜலதோஷமும் தங்கைக்கு ஒட்டிக்கொள்ள பிறந்தநாளன்று நல்ல சளி.. வாங்கிவந்த கேக்கை கட் செய்யவில்லை..எதுவுமே செய்யவில்லை..வாடிப்போன கீரைத்தண்டாய் வதங்கிக்கிடந்தவளைத் தோளில் போட்டுக்கொண்டே பிறந்தநாள் ஓடிவிட்டது.. ஒரு வாரம் படுத்தி எடுத்த ஜலதோஷம் கொஞ்சம் கொஞ்சமாய் விடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இங்கே இந்த வருடம் குளிரும் மழையும் கொஞ்சம் அதிகபட்சமாகவே இருப்பதால் சளித்தொந்தரவும் விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது. 

சரி, அவையெல்லாம் போகட்டும்..பதிவில் இறுதியாக ஒரு புது ரெசிப்பி..டிரையல்!! கொஞ்சம் சொதப்பிவிட்டது என நான் முடிவேகட்டி குளிர்சாதனப்பெட்டியில் பூட்டி வைத்த மறுநாள் சில உணவுகள் பழசானாத்தான் ருசி என்பதை நினைவூட்டிய ஆப்பிள் க்ரம்ப் பை ( Apple Crumb Pie)
ரெசிப்பி விரைவில் எங்க குட்டி வாலுங்க, குறும்புத்தேளுங்க ரெண்டு பேரும் அனுமதிக்கையில் வெளியிடப்படும். வழக்கம் போல என் ஸ்வராக்குட்டி-க்கு நீங்கள் வழங்கும் ஆசீர்வாதங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.


Thursday, February 7, 2019

புளிக்காய்ச்சல் & புளி சாதம்

தேவையான பொருட்கள் 
புளி - பெரிய ஆரஞ்சுபழம் அளவு 
 வறுத்த வேர்க்கடலை - 1/4கப் 
கடுகு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை 
கடலைப்பருப்பு -1டேபிள்ஸ்பூன்
உளுந்துபருப்பு -1 டேபிள்ஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1/2டீஸ்பூன் 
வரமிளகாய் -2 
நல்லெண்ணெய் 
வெல்லம் - சிறுதுண்டு
உப்பு 
வறுத்து பொடிக்க
கொத்துமல்லி விதை/தனியா - 1டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் -3 (காரத்துக்கேற்ப) 
வெந்தயம் - 1டீஸ்பூன்

செய்முறை 
கடாயில் கொஞ்சமாக எண்ணெய் காயவைத்து கொத்துமல்லி விதை, மிளகாய், வெந்தயம் இவற்றை தனித்தனியே (கருகாமல்) வறுத்து ஆறவைத்து கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.
புளியை ஒண்ணரை கப் தண்ணீர் விட்டு குக்கரில் ஒரு விசில் விட்டு ஆறவைத்து கெட்டியான புளிக்கரைசல் (சுமார் 2 கப்) எடுத்துக்கொள்ளவும். 

அகலமான வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காயவைக்கவும். (புளிக்காய்ச்சல் நாள்பட வைத்து உபயோகிக்க நிறைய எண்ணெய் விட்டால் நன்றாக இருக்கும். உங்க விருப்பப்படி எண்ணெய் ஊற்றிக்கலாம், மினிமம் ஒரு 4 டேபிள்ஸ்பூனாவது உபயோகித்தால் நன்று)

எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்து,  கறிவேப்பிலை சேர்த்து வரமிளகாய்களை ஒடித்துப்போட்டு வறுக்கவும். பிறகு க.பருப்பு, உ.பருப்பு, வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

கெட்டியான புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வருகையில் கொஞ்சம் வெல்லம் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். (புளி ஏற்கனவே குக்கரில்  வேகவத்ததால் சீக்கிரம் கொதித்து எண்ணெய் பிரிந்துவிடும்.)

நன்றாக ஆறியதும் காற்று புகாத டப்பாவில் எடுத்து வைத்தால் வாரம், பத்துநாட்களுக்கு மேலாகவே நன்றாக இருக்கும். அல்லது குளிர்சாதனப்பெட்டியில் வைத்தும் உபயோகிக்கலாம்.
உதிரியாக வடித்த சாதத்துடன் தேவையான அளவு புளிக்காய்ச்சலை கலந்தால் சுவையான புளிசாதம் தயார். சிம்பிளா ஒரு உருளை வறுவல், அல்லது தேங்காய்த்துண்டுகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும். 

பின்குறிப்பு 
பொதுவாக எங்க வீடுகளில் புளி சாதம் வெங்காயம் போட்டுதாந் செய்வோம். எங்காவது பயணம் போகையில் முதல் நாள் இரவே இப்படி புளிக்காய்ச்சல் செய்து சாதமும் செய்து கலந்து வைத்துவிடுவோம். காலையில் நேரத்தில் கிளம்பி இதை எடுத்துப்போக சுலபமாக இருக்கும். மற்றபடி புளிக்காய்ச்சலை செய்து சில நாட்கள் வைத்து அவ்வப்போது புளி சாதம் கலப்பதெல்லாம் இல்லை..சில நேரங்களில் மீதமாகும் சாதத்துக்கு புளிக்கரைசலைப் பிரட்டி வைத்து அடுத்த நாள் காலையில் வெங்காயம் மிளகாய் மற்றும் இன்ன பிற வகைகளுடன் தாளித்து சூடாகச் சாப்பிடுவதும் உண்டு. சில நாட்கள் முன்பு தோழிகளுடன் பேசுகையில்(வாட்ஸாப்-புகையில் என்று படிக்கவும் ;)) இந்த புளிசாதம் விவகாரம் வந்தது...எல்லாரும் " என்ன...புளி சாதத்தில் வெங்காயமா? " என்று மூக்கில் விரலை வைத்தார்கள். சரி..ஒரு முறை வெங்காயம் இல்லாமல் செய்து பார்ப்போம் என்று முயற்சித்தது இது. தோழி ஒருவர் யூடியூப் லிங்க் கொடுத்தார்..அந்த லிங்க் பார்த்து செய்ததுதான் இந்த புளிக்காய்ச்சல் & புளிச்சாதம். தேங்க்யூ காயத்ரி!! :)) 
புளியை குக்கரில் வேகவிடுவதும் யுடியூபில் இன்னொரு வீடியோவில் பார்த்ததுதான். 

என்னிடம் இருக்கும் வரமிளகாய் கொஞ்சம் டூமச் காரம்..மொத்தமாகவே 5 மிளகாய் (பொடிக்க 3, தாளிக்க 2) மட்டுமே சேர்த்தும் காரம் கொஞ்சம் தூக்கலாக இருந்தது. உப்புமா, தோசை, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிடவும் ரொம்ப சூப்பராக இருந்தது. நீங்களும் செய்து பாருங்க.  நன்றி! 

LinkWithin

Related Posts with Thumbnails