Wednesday, December 31, 2014

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பிறக்கும் 2015 அனைவருக்கும் நன்மை பயப்பதாக அமைய வாழ்த்துக்கள்! 


தத்தித் தத்தித் தளர்நடை போடும் தங்கப்பாப்பாவுடன் எங்கள் வாழ்க்கையும் இந்த வருடம் வேகம் எடுக்கிறது! :) 
புத்தாண்டைக் கொண்டாடுங்கள்..மீண்டும் சந்திப்போம், நன்றி!


Sunday, December 28, 2014

பூனையாரே, பூனையாரே.. போவதெங்கே.. சொல்லுவீர்!!




பூனையாரே பூனையாரே போவதெங்கு சொல்லுவீர்
கோலி குண்டு கண்களால் கூர்ந்து ஏனோ பார்க்கிறீர்
பஞ்சுக் கால்களாலே நீர் பையப்பையச் சென்றுமே என்ன செய்யப் போகிறீர்?
எலி பிடித்துத் தின்னவா?
அங்கே இங்கே போகிறீர்..அடுப்பங்கரையை நோக்கியா?
சட்டிப்பாலைக் குடிக்கவா சாது போல செல்கிறீர்?
சட்டிப்பாலும் ஐயைய்யோ ஜாஸ்தியாய் கொதிக்குதே
தொட்டால் நாக்கை சுட்டிடும், தூர ஓடிப் போய்விடும்!
~~~
லயாவிற்காக பார்க்க ஆரம்பித்த பாடல்கள், இப்பொழுது வரிகள் அனைத்தும் வெகு பரிச்சயமாகிப் போய்விட்டன! :) குழந்தைகளுக்கான வீடியோக்கள் என்றாலும் ஒவ்வொரு சின்னச் சின்ன டீடெய்லும் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள் இந்தப் பாடல்களில். தமிழ்ப்பாடல்கள் அர்த்தமுள்ள, தெளிவான பாடல்களாகவும் இருக்கின்றன.

3 little kittens
they lost their mittens
...
தமிழுக்கு சற்றும் இளைப்பில்லை காண் என்று போட்டி போடும் ஆங்கிலப்பாடல்கள்! எண்ணற்றவை இணையத்தில் கொட்டிக் கிடந்தாலும் எங்களுக்குப் பரிச்சயமான, பிடித்த பாடல்கள் இவை. 

இந்தப் பாடலில் வரும் மூன்று பூனைக்குட்டிகள், பூனையம்மா, அவர்களின் வீடு - சமையலறை -பாத்திரங்கள்- மைக்ரோவேவ் அவன் - ட்யூலிப் பூங்கொத்துக்களால்  அலங்காரம் என்று என்னைக் கவர்ந்த விஷயங்கள் ஏராளம். ஆக மொத்தம் லயா பார்ப்பதை விடவும் நான் பார்ப்பது அதிகம். ஹிஹ்ஹி!



எலியம்மா எலியம்மா எட்டி பாரம்மா
இனிமையான பண்டம் இங்கே இருக்குதே அம்மா..
....
இந்தப் பாட்டில் பூனையார் வில்லனாகவும், எலியம்மா புத்திசாலியாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பார்கள். பூனை ஏதேதோ காரணங்கள் சொல்லி எலியை வளையை விட்டு வெளியே இழுக்கப்பார்த்தாலும் சாமர்த்தியமான எலியம்மா தப்பிவிடுவார்! :)

5 little speckled frogs
Sat on a speckled log..
Eating some most delicious bugs..yum, yum!!
...
5 தவளைகள் குளத்தில் மிதக்கும் மரக்கட்டை மீது அமர்ந்திருப்பதாகவும், பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அவை ஒவ்வொன்றாக குளத்தில் குதிப்பதாகவும் பாடல்.

குளத்தில் குதிக்கும் தவளைகள் ஈஸி சேரில் சாய்ந்தவாறு பேப்பர் படிப்பதும், கூல் டிரிங்க்ஸ் குடிப்பதுமாக அதகளம் செய்கின்றன! க்யூட்! :)

அன்னை மொழி எத்துணை முக்கியமானது, அன்னை சொல்வதைக் கேட்பது எவ்வளவு இன்றியமையாதது என்பதைச் சொல்லும் அடுத்துவரும் இந்தப் பாடல்..

குருவி ஒன்று மரத்திலே...
கூடு ஒன்றை கட்டியே
அருமைக் குஞ்சு மூன்றினை அதில் வளர்த்து வந்தது
நித்தம் நித்தம் குருவியும்
நீண்டதூரம் சென்றிடும்..
கொத்தி வந்து இரைதனை குஞ்சு தின்ன கொடுத்திடும்..
...
அழகழகான குருவிகள், பூக்கள், கருத்து என்று அழகான பாட்டு இது. இவை மட்டுமல்ல, இந்தத் தமிழ் மற்றும் ஆங்கிலப்பாடல்கள் பல உள்ளன. ஒரு மணி நேரம் ஓடும் ப்ளே லிஸ்ட்டுகளைப் பார்த்தால் நேரம் போவதே தெரியாது. நேரமிருப்பவர்கள் ரசியுங்களேன். நன்றி! :) 

Wednesday, December 24, 2014

ஹேப்பி ஹாலிடேஸ்!

கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைவருக்கும் எங்கள் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்!!
பெரும்பாலான நாட்களில் இப்படிப் பளிச்சென, நீலப்புடவையில் வெள்ளை மேக டிஸைனுடன் :) :) மின்னும் எங்களூர் வானம்..
கடந்த சில பல நாட்களாக அழுக்குச் சேலை போல சாம்பல் நிறத்தில் அழுது வடிந்தது. 
வானிலை அறிவிப்பில் என்ன சொல்கிறார்கள் என்று பக்க்க்க்கத்தில் நின்று பார்க்கும் எங்க வீட்டு வெண்மேகம்! ;) 
அறிவிப்பில் சொன்னபடி வானம் சில நாட்கள் பொத்துக்கொண்டு ஊற்றியது..
பெரும் மழை இங்கு- என்று சொல்ல முடியாவிட்டாலும்..

சூரியனின் முகம் பார்க்காமலே கழிந்தன தினங்கள்..
வான் ஒழுகியதில், என் மகளின் மூக்கிலும் அருவி கொட்ட, எங்கள் தினங்கள் இன்னும் சுவாரசியமாகக் கழிந்தன. கிறிஸ்மஸும் வந்துவிட்டது. :)
அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்..ஹேப்பி ஹாலிடேஸ்! புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்ல நேரம் அனுமதிக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறோம். நன்றி!!



Tuesday, December 9, 2014

ஓட்ஸ் கஞ்சி

தேவையான பொருட்கள்
ரோல்ட் ஓட்ஸ் (Rolled oats/Old fashioned Oats)-1/2கப்
கேரட்- சிறியதாக 1
பீன்ஸ் - 2
பச்சைப் பட்டாணி - 1கைப்பிடி
நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 1
கறிவேப்பிலை
சாம்பார் பொடி-1/2டீஸ்பூன் (காரத்துக்கேற்ப)
சீரகம்-1/2டீஸ்பூன்
கடுகு-1/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
தண்ணீர் - 21/2கப்
செய்முறை
வெங்காயம், பச்சைமிளகாய், கேரட்-பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, கேரட்-பீன்ஸ் -பச்சைப்பட்டாணி, சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து 21/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்கு கொதி வந்ததும் ஓட்ஸை கொட்டி கிளறிவிடவும்.
மிதமான தீயில் சுமார் 5 நிமிடங்களில் ஓட்ஸ் வெந்துவிடும்.
கஞ்சியை அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து இளம் சூட்டில் (அதாங்க..serve warm!! :)) பரிமாறவும்.
குறிப்பு
கஞ்சி அடுப்பிலிருந்து இறக்கும் போது கொஞ்சம் தண்ணீர் போல தெரிந்தாலும் ஆறும்போது கெட்டியாகி கஞ்சி பதம் வந்துவிடும். மிகவும் ஆறவிட்டால் கஞ்சி "களி" ஆகும் அபாயம் உள்ளது, அதனால பாத்து பதமான சூட்டில பரிமாறுங்கோ! :)
quick cooking oats என்றால் தண்ணீர் அளவு குறைத்துக்கொள்ளவும். விரைவாகவும் வெந்துவிடும்.

Saturday, December 6, 2014

கார்த்திகை தீபம் & கோலங்கள்

அனைவருக்கும் திருக்கார்த்திகை தீப வாழ்த்துக்கள்! 

தீபங்களால் அலங்கரிக்கத் தயாராய்க் கோலங்கள்..
~~~ 
பொதுவாக எங்க வீடுகளில் பொரி உருண்டை செய்யும் வழக்கம் இல்லை. தீபத்துக்கு வீடெல்லாம் சுத்தம் செய்து மெழுகிவிட்டு, மாலையில் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று இரண்டு விளக்குகளை ஏற்றிவைத்து சாமி கும்பிட்டுவிட்டு வந்து வீட்டில் கோலமிட்டு விளக்குகள் வைத்து அலங்கரிப்போம். வாசல் கோலத்தில், வாசற்படிகளில், திண்ணையில், அம்மிக் கல், ஆட்டுக்கல், உரல், கிணறு இப்படி எல்லா இடங்களிலும் விளக்குகள் வைப்போம்.
இந்தப் பொரி உருண்டை  தோழி ப்ரியா ராம்  வீட்டிலிருந்து அனுப்பியது. எல்லோரும் எடுத்துக்கோங்க.. :)
~~~~
இந்தக் மாக்கோலங்கள் அம்மா வீட்டிலிருந்து...
 11 புள்ளி, இடைப்புள்ளி 6 வரை..
15 புள்ளி, இடைப்புள்ளி 8 வரை..
வெளி வாசலில் உள்ள கோலம், 15 புள்ளி-இடைப்புள்ளி 8 வரை..
 15புள்ளி, நேர் புள்ளி 1 வரை..
5 புள்ளி, நேர் புள்ளி 1 வரை.. 
கோலம் போட்டு முடித்த பின்  அக்கா இடைப்புள்ளிகள் வைத்திருக்கிறார். அதனால் புதிதாகப் பார்ப்பவர்களுக்குக் கொஞ்சம் குழம்பும். முடிந்தால் நாளை இடைப்புள்ளிகள் இல்லாமல் (பேப்பரில் வரைந்து) இணைக்கப்பார்க்கிறேன். 
இந்தக் கோலம் 5, 7,9,11 என ஒற்றைப்படை எண்களில் விரிவாக்கிக்கொண்டே போகலாம். :) 
7 புள்ளி-3 வரிசை, நேர் புள்ளி 1 வரை.  
ஏழு வரிசைப் புள்ளிகளில் இரண்டாம் வரிசையில் இரண்டு புறமும் ஒரு புள்ளி மட்டும் வைத்துக்கொள்ளவும். இந்தக்கோலமும் ஒற்றைப்படை எண்களில் விரிவாக்கிக்கொண்டே போகலாம்.  இக்கோலம் சேலை முந்தானை போல வடிவம் எனத்தோன்றும் எனக்கு! :) 
என் அக்கா சிவில் எஞ்சினியர், வெகு அழகாக எழுதுவார், அழகாக வரைவார், கோலங்களும் அழகாகப்  போடுவார், அதற்கு சான்று இந்தக் கோலங்களே! இந்தப் பூக்கள் இலைகள் கொண்ட பார்டர் எனக்கு ரொம்பப் பிடித்தது. :) 
~~~
கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? இன்றைய பதிவு அதே தான்..!! :) 
அம்மா வீட்டிலும், மாமியார் வீட்டிலும் இருந்து வந்த படங்களின் உபயத்தால் இன்று இன்னொரு பதிவு.. இந்தப் படங்கள் யாவும் (எனது) காலையில் வாட்ஸ்ஸப்பில் வந்தவை. ஹி..ஹி..ஹி! ;)
 ~~~
ஏற்கனவே ஒரு முறை இந்தப் பாடலைப் பகிர்ந்திருந்தாலும்...இன்றைய பதிவுக்குப் பொருத்தமானதாலும், எனக்குப் பிடித்த பாடல் என்பதாலும் மீண்டுமொருமுறை...
தீபங்கள் பேசுகின்றன.. :) :) :) 


Sunday, November 30, 2014

வெங்காயத்தாள் பருப்பு & வெங்காயத்தாள்-முட்டை பொரியல்

சிலபல மாதங்கள் முன் கடையில் வாங்கிவந்த ஸ்ப்ரிங் ஆனியனின் வேர்களைத் தொட்டியில் நட்டு வளர்ப்பதைப் பற்றி இங்கே எழுதியிருந்தேன். அந்த வெங்காயத்தாள்களை ஒரு முறை (வேரை விட்டுவிட்டு) நறுக்கி சமைத்தேன். பிறகு நேரமில்லாமல் அப்படியே விட்டிருந்தேன். 
இப்போது ஊருக்குப் போய்விட்டு வந்த போது ஒரு தொட்டியில் இருந்த வெ.தாள்கள் ரொம்பவே போஷாக்காக:) வளரத்துவங்கின.
 பறித்து சமைப்போம் என பசுமையான தாள்களை மட்டிலும் (வேரை விட்டுவிட்டு) நறுக்கி எடுத்தேன்..
நறுக்கும்போது தெரியவில்லை, உள்ளே கொணர்ந்து கழுவி எடுத்ததும் ஒரே முறையில் சமைத்து தீர்க்க முடியாது எனத்தோன்றியதால் இரண்டு ரெசிப்பிகள்  உருவெடுத்து உங்களைக் காண வருகின்றன.

வெங்காயத்தாள் பருப்பு ( step-by-step படங்களுடன் ஆங்கிலத்தில் ரெசிப்பி இங்கே)
தேவையான பொருட்கள்
வேகவைத்த பாசிப்பருப்பு (1/4 கப் பாசிப்பருப்பை தேவையான தண்ணீர் விட்டு குழைய வேகவைத்துக்கொள்ளவும்)
நறுக்கிய வெங்காயத்தாள்-1/2கப்
சீரகம்-1டீஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
வர மிளகாய்-3
பச்சைமிளகாய்-1
எண்ணெய்
உப்பு
நெய்-1டீஸ்பூன்

செய்முறை
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து சீரகம் தாளித்து, பச்சைமிளகாய்-வரமிளகாய் சேர்க்கவும். சில விநாடிகளின் பின்னர் நறுக்கிய வெங்காயத்தாளைச் சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து குறைந்த தீயில் ஓரிரு நிமிடம் வதக்கவும்.
வெந்து மசித்த பருப்பினைச் சேர்த்து ஒரு கொதி விடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி நெய்யை மேலாகச் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
~~~
வெ.தாள்-முட்டை பொரியல் (இந்தப் பொரியலில் முட்டைக்கு பதிலாக தேங்காய்த் துருவல் சேர்த்தும் செய்யலாம். அதற்கான குறிப்பு ஆங்கிலத்தில் இங்கே)
தேவையான பொருட்கள்
நறுக்கிய வெங்காயம் -1டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்-4 (காரத்துக்கேற்ப)
சுத்தம் செய்து நறுக்கிய வெ.தாள்-1கப்
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு- தலா 1/2டீஸ்பூன்
முட்டை -1
உப்பு
எண்ணெய்

செய்முறை
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, நறுக்கிய வெங்காயத்தாளைச் சேர்க்கவும்.
வெங்காயத்தாள் சில நிமிடங்களிலேயே வதங்கிவிடும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறிவிடவும்.
முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
சுடுசாதத்தில் அப்படியே பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். பொரியலாகவும், சப்பாத்திக்குத் தொட்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும். 

Monday, November 24, 2014

இது என்ன?...- "ஆப்பிள்" கூடை

ஆப்பிள் கூடை
இது என்ன?
கண்டுபிடிங்களேன்...
பதில்களைப் பார்த்தபிறகு இது என்னவென்று அப்டேட் பண்ணுகிறேன்!
நன்றி, வணக்கம்!
~~~
முதலில் தாமதமான அப்டேட்டிற்கு ஒரு சாரி...கண்டுபிடியுங்கள் பதிவைப் போட்ட மறுநாளே பழக்கூடையை வெளியிடவேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் லயாவின் அம்மாவால் நினைத்ததை எல்லாம் நினைத்த நேரத்தில் செய்ய முடிவதில்லை..ஹிஹி! ;)

கருத்துப்பெட்டியில் பலர் சரியான விடையைக் கூறியிருந்தீங்க..அனானி ஒருவர் இமேஜ் சர்ச் செய்து படங்களின் லிங்கையே இணைத்திருந்தார். பாராட்டுக்கள்! :)
கோவையில் ராஜஸ்தானி எக்ஸிபிஷனில் வாங்கிவந்தது இந்த ஆப்பிள் வடிவிலான ஆப்பிள் பழக்கூடை இது. முதலில் நான் பார்த்தது கட்டிங் போர்ட் மாதிரியான வடிவில்தான், கூடையில் கைப்பிடியைப் பிடித்து ஒரு உதறு உதறினால் அழகான பழக்கூடையாகிவிடுகின்றது. :)

மரத்தாலான அழகழகான கைவினைப்பொருட்கள் அங்கே இருந்தன. என்னவர் இங்கே வரும் நாளன்று அவசரமாகச் சென்று வாங்கிவந்த பொருட்களில் சில இவை..இன்னும் சில எழிலான விநாயகர் சிலைகளை இங்கே நண்பர்களுக்குக் கொடுத்தோம்.
 உப்பு-மிளகு தூவிகள், சந்தனம்-குங்கும கிண்ணங்கள்..
 காந்தித் தாத்தா பொம்மைகள் மற்றும் விநாயகர் சிலைகள்!

நன்றி, மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்! 

Saturday, November 15, 2014

இந்த நாள், இனிய நாள்...!!

இன்றைக்குச் சரியாக 365 நாட்களுக்கு முன்பாக..
எங்கள் வாழ்க்கைத் தோட்டத்தில் வசந்தம் வீச..
 கை-கால் முளைத்த ரோஜாப்பூச்செடி ஒன்று கையில் கிடைத்தது!

இளஞ்சிவப்பு நிறத்தில், தலைகொள்ளா முடியோடு, பவள நிற உதடுகளோடு 
எங்கள் தேவதை காலை 9.45 மணிக்கு எங்களை ஆசீர்வதிக்க முதல் குரலெழுப்பினாள்! :)
இன்னொரு அப்பாவும் அம்மாவும் இந்த உலகத்தில் பிறந்தனர்! :) :) 

நொடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணிகளாகி, மணிகள் நாட்களாகி
நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் பன்னிரண்டும் கடந்துவிட்டன இன்று!
கைக்குள் அடங்கிக் கிடந்த முல்லைப்பூ இன்று வீடெங்கும் தவழ்ந்து வாசம் வீசுகிறது!

எங்கள் வாழ்விற்கு அனுதினமும் புதுப்புது அர்த்தங்களைப் புரியவைக்க வந்த என் மகளே, 
பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு பல்லாயிரத்தாண்டு நீ நலம் வாழ்கவே! 


இந்த வலைப்பூவுக்கு வருகைதரும் அன்புள்ளங்கள் தம் அன்பான ஆசிகளை, வாழ்த்துகளை லயாவிற்கும் லயாவின் குடும்பத்தினருக்கும் தருவீர்கள் என்றுணர்ந்து எங்கள் உள்ளத்தினின்றும் இப்பொழுதே நன்றிகள் நவில்கிறோம் அனைவருக்கும்!  
பிறந்தநாள் விழாவிலிருந்து ஐஸ்க்ரீம் கேக்...ருசியுங்கள்! 
:)
நன்றி! 

Monday, November 10, 2014

ரோஜா..ரோஜா..ரோஜாப்பூ!!

எங்கள் தொட்டித் தோட்ட ரோஜாக்கள்...ஊருக்குப் போய்வந்த பின்னர் என் கவனிப்பில் உவகை கொண்டு..
குட்டிக் குட்டிப் பூக்கள் பூத்து..
எங்களை மகிழ்விக்கின்றன. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல ரோசாக்கள் சிறியவை எனினும் எழிலுக்குக் குறைவில்லை! :)
மேலே உள்ள பூக்களின் வண்ணம் எனக்கு மிகப்பிடித்த வண்ணம்.

அடுத்து வருபவை செந்நிற ரோஜாக்கள்..2010-ஆம் ஆண்டு 99 காசுக்கு ஒரு செடி என இரு செடிகள் வாங்கிவந்தேன்..
ஆண்டுகள் நான்கு கடந்த பின்னரும் பொலிவு குறையாமல் புன்னகை புரியும் பூக்களிவை!

கதிரவனின் ஒளியில் குளித்தவாறே என் படங்களுக்கு மென்னகை புரிந்த பூக்கள்..
கடேசிப் பன்ச்..!! :))))) என் ஆல்டைம் ஃபேவரிட் மஞ்ச ரோசாஆஆஆ!
பூக்களை ரசித்துப் புன்னகைப் பூக்கள் சிந்தப்போகும் அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்! :)

Friday, October 17, 2014

மலர்களே..மலர்களே!

 ஆரஞ்சு நிறத்தில் பூத்திருக்கும் இந்த
அழகுப்பூக்களை "இட்லிப் பூ" எனச் சொல்வோம் எங்களூரில்! :)
 இது அரளிப்பூ..பட்டிப்பூ என்று பண்ருட்டிப் பக்கம் சொல்வதாக அறிந்தேன்! :)
மல்லி, முல்லை, ஜாதிமுல்லை...
இவையெல்லாமே என் அம்மா வீட்டிலிருந்து..
மல்லியும் ஜாதிமல்லியும் ஏற்கனவே வைத்திருந்தார்கள்..முல்லைக்கொடி மட்டும் இல்லாதிருந்தது. இந்த முறை வாங்கி வைத்துவிட்டு வந்திருக்கிறோம், அடுத்த முறை ஊருக்குப் போகையில் முல்லைச்சரம் தொடுத்துவிடலாம்! 
 பூச்சரத்தைக் கையில் கட்டுவது வழக்கமாய்ச் செய்வது..மாற்றாக, நீளமான காம்புள்ள பூக்களை காலிலும் கட்டலாம். கையால் தொடுப்பதை விடச் சுலபமானது இம்முறை..வண்ணமயமான எம்ப்ராய்டரி நூல்களிலோ, பட்டு நூல்களிலோ கட்டும்போது பூச்சரத்தின் அழகு கூடும். இந்த முறை கொஞ்சம் நேரப்பற்றாக்குறை இருந்ததால் சும்மா 2 படங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலேயுள்ள படம் பூச்சரத்தின் முன்பகுதி..அடுத்துள்ள படம் சரத்தின் மறுபக்கம்.
 இங்கே வீட்டில் ஜாதிமல்லி பூக்கையில் வீடியோ எடுத்து இணைக்க முயல்கிறேன். இப்போதைக்கு இப்படங்கள் மட்டுமே!

வீட்டில் தோட்டம் போடுகையிலேயே பவளமல்லி வைக்கவேண்டும் எனச் சொல்லி, அவர்களும் வைத்து பவளமல்லி சிறு மரமாக வளர்ந்திருக்கிறது. பூக்களும் நிறையப் பூக்கின்றன.
கிண்ணம் நிறையப் பூவைப் பறித்து..
ஒரு பூக்குட்டியின் கையில் கொடுத்தால் என்னாகும்??...
இதுதான் ஆகும்! :) ;) 
லயாவிற்கு பவளமல்லிப் பூக்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்ப்பதும், நசுக்கிப் பார்ப்பதும், பிய்த்து எறிவதும் பிடித்தமான பொழுதுபோக்காக இருந்தது!
~~~
கோவையின் வண்ண மலர்களை ரசித்தமைக்கு நன்றிகள்! முதலிரு படங்களும் திருப்பூர்ப் பூக்கள், படமெடுத்ததும் நானில்லை..லயாவின் அப்பா! :) மீண்டும் மற்றுமொரு பதிவில் சந்திப்போம், நன்றி!

LinkWithin

Related Posts with Thumbnails