Monday, December 31, 2012

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

புதிதாய் மலரும் 2013 எல்லா வளங்களுடனும் நலங்களுடனும் மலர நல்வாழ்த்துக்கள்!

தேங்காய் பிஸ்கட் / Eggless Coconut Biscuit

தேவையான பொருட்கள்
ஆல் பர்ப்பஸ் மாவு/ மைதா மாவு - 11/4 கப்
சர்க்கரை - 3/4 கப்
வெண்ணெய்-115கிராம்
பேக்கிங் பவுடர்-1/2டீஸ்பூன்
ஸ்வீட்டன்ட் கோக்கனட் ஃப்ளேக்ஸ் - 1/2கப்

செய்முறை
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

வெண்ணெய் அறை வெப்பநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
மைதா + பேக்கிங் பவுடர் சேர்த்து 2-3முறை சலித்து வைக்கவும்.

இனிப்பு தேங்காய்த் துருவல் இங்கே கடைகளில் ரெடிமேடாக கிடைக்கிறது. ஒரு அவன் ப்ரூஃப் தட்டில் அலுமினியம் ஃபாயில் விரித்து, கோக்கனட் ஃப்ளேக்ஸை அதில் வைக்கவும்.
Oven-ஐ 300F ப்ரீஹீட் செய்து தேங்காய்த்துருவல் தட்டை  வைத்து 10-15 நிமிடங்கள் (நல்ல பொன்னிறமானால் போதும், பத்து நிமிடங்களுக்குப் பின் அவ்வப்பொழுது பார்த்து கவனமாக எடுக்கவும். தே.துருவல் சீக்கிரம் கருகிவிடும், ஜாக்கிரதை! :)) bake செய்யவும்.

வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் எடுத்து எலக்ட்ரிக் பீட்டர் அல்லது விஸ்க்-ஆல் சில நிமிடங்கள் கலக்கவும். பிறகு அதனுடன் சர்க்கரை  சேர்த்து கலக்கவும்.

வெண்ணெய்+ சர்க்கரை கலவை க்ரீமியாக வரும்வரை நன்றாக கலக்கவேண்டும். கிட்டத்தட்ட உளுந்துமாவு போல fluffy-ஆக ஆகும்வரை கலக்கவும்.

பிறகு அதனுடன் சலித்துவைத்த மாவு+பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்து விரல்களால் மிருதுவாக கலந்துவிடவும்.(அழுத்திப் பிசையவேண்டாம்).
தேங்காய்த் துருவலையும் மாவுக்கலவையுடன் சேர்த்துப் பிசிறிவிடவும்.

இப்பொழுது மாவு கிட்டத்தட்ட புட்டுமாவு போல, உருட்டினால் உருண்டை சேரும், உதிரி-உதிரியாகவும் இருக்கும்
பேக்கிங் ட்ரேயில் ஃபாயில் பேப்பர் விரித்துக் கொண்டு, மாவுக் கலவையை விருப்பமான வடிவில் பிடித்து வைக்கவும். (இந்த ஷேப் எனக்கு ஈஸியாக வருவதால் "கொழுக்கட்டை" போல பிடித்திருக்கிறேன், உங்க வசதிக்கேற்ப உருண்டையாகவோ, சதுரமாகவோ,செவ்வகமாகவோ, கனசதுரமாகவோ செய்துக்கலாம். :))))

எல்லா பிஸ்கட்டுகளையும்  செய்து அடுக்கியபிறகு பேக்கிங் ட்ரேயை 15நிமிடங்கள் ஃப்ரீஸரில் வைக்கவும்.
Oven-ஐ 350F ப்ரீஹீட் செய்து கொள்ளவும்.
பிஸ்கட் ட்ரேயை oven-ல் வைத்து 15 நிமிடங்கள் bake  செய்யவும்.

பிஸ்கட்டுகள் வெந்து இப்படி நிறம் மாறி இருக்கும், oven-ல் இருந்து எடுத்து நன்றாக ஆறவைக்கவும். சுவையான கோக்கனட் பிஸ்கட் தயார். காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்தால் ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.   

என்னைப் பொறுத்தவரை இந்த பிஸ்கட் ஒரு fool proof ரெசிப்பி. பலமுறைகள் செய்திருக்கிறேன். போனவருஷத்தில் ஒரு முறை செய்தபொழுது மிகவும் அழகான வடிவம் & texture கிடைத்தது. என்னவரின் ஆஃபீஸுக்கு கொடுத்தனுப்பினேன், எல்லாரின் பாராட்டுக்களும் கிடைத்தது. :) 

விரும்பினால் முந்திரி-பாதாம்-வால்நட் போன்ற nuts-ஐ பொடித்து தேங்காய் கலவையுடன் சேர்த்தும் bake  செய்யலாம். தேங்காய் சுவை மட்டுமே போதும் என்றால் ப்ளெய்னாகவும் செய்யலாம். இனிப்பு தேங்காய்த் துருவல் இல்லையென்றால் சும்மா dry coconut flakes சேர்க்கலாம், ஆனால் சர்க்கரையின் அளவை சரிபார்த்து, தேவையென்றால் அதிகம் சேர்க்கவேண்டும்.

Saturday, December 29, 2012

திருவாதிரைக் களி

தேவையான பொருட்கள்
பச்சரிசி-1/2கப்
பாசிப்பருப்பு-2 டேபிள்ஸ்பூன்
வெல்லம்- 1/2 கப்
தேங்காய்த்துருவல்-2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்-1
முந்திரி-7
நெய்-2டேபிள்ஸ்பூன்
உப்பு-1/4டீஸ்பூன்

செய்முறை 
அரிசி-பாசிப்பருப்பை வெறும் கடாயில் லேசாக வறுத்துக்கொள்ளவும். அரிசி-பருப்பு ஆறியதும் மிக்ஸியில் ரவை  போல பொடித்துக்கொள்ளவும்.
வெல்லத்தை கொஞ்சமாக தண்ணீர் விட்டு சூடாக்கி, கரைந்ததும் வடிகட்டிக் கொள்ளவும். (வெல்லத்தண்ணீர் ஒரு கப் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.) குக்கரில் அரை கப் தண்ணீர் + வெல்லத்தண்ணீர் சூடாக்கவும். தண்ணீர் கொதிவந்ததும் உப்பு சேர்த்து தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.
உடைத்த அரிசி-பருப்பை சேர்க்கவும். குக்கரை மூடி 2 விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
நெய் காயவைத்து முந்திரியைப் பொன்னிறமாக வறுத்து களியில் சேர்க்கவும், ஏலக்காய் பொடித்து சேர்த்து கலந்துவிடவும்.
  திருவாதிரைக் களி தயார்.

Thursday, December 27, 2012

Christmas 2012

ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸுக்கு முன்பு ஒருவாரம் அருகில் இருக்கும் ஒரு கடற்கரையில் boat parade இருக்கும். வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகுகள் இரவு நேரத்தில் அணிவகுத்துச் செல்வது கண்களுக்கு விருந்து!
கடந்த ஞாயிறன்று இந்த படகுப் பரேடின் கடைசிநாள். நல்ல குளிர், நல்ல ஜலதோஷம், இருந்தாலும் போட் பரேடைப் பார்த்துவிட்டோம்.

இருள், காமெராவைக் கையாளப் போதுமான உடல்நலமின்மை இவற்றால் படங்கள் சரியாக வரவில்லை. சுமாராக வந்த படங்கள் உங்கள் பார்வைக்கு..
ஒரு சில படகுகளில் சான்டா க்ளாஸ் மைக்கில் பேசியவாறும், Merry Christmas என்று வாழ்த்துச் சொல்லியவாறும் சென்றார்(கள்).
வீடியோ எடுத்தேன் என்றாலும் அது அவ்வளவு தெளிவாக வராத காரணத்தால் யுட்யூபின் உதவியை நாடினேன். தெளிவான வீடியோக்கள் பல கிடைத்தன. அவற்றில் ஒன்று இங்கே.. நாங்கள் ரசித்தது, நீங்களும் ரசிக்க!


க்றிஸ்மஸூக்கு ஒரு இனிப்பும்...
காரமும்...
 இனிப்பு- தேங்காய் பிஸ்கட், காரம்- ரசவடை...தேங்கா பிஸ்கட் ரெசிப்பி விரைவில் வெளியிடப்படும். ரசம் + வடை = இதற்கு ரெசிப்பி உங்களுக்கே தெரியும் என நினைக்கிறேன். ;) :)

Wednesday, December 19, 2012

மல்லி, முல்லை, ஜாதி முல்லை..

குளிர்காலம் துவங்கியதில் இருந்து ஆரம்பித்த ஹைபர்நேஷன் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. அல்லது பொறுமையா உட்கார்ந்து எழுத நேரமில்லை/பொறுமையில்லை/ வசதிப்படவில்லை?? இப்படி பல்வேறு விதமா யோசிச்சுப் பார்த்தாலும் எந்த பதி(வு)லும் தோன்றாமல் வெறுமையாக இருந்தது..அதனால் "மணக்க மணக்க" ஒரு பதிவை இன்று எழுதிரணும்னு முடிவோட தட்டிகிட்டு:) இருக்கேன், கீ போர்டை! :))) 

மல்லி,முல்லை, ஜாதிமல்லி இவை மூன்றும்  மூணு விதமான மலர்கள். அது எங்களுக்குத் தெரியாதா என்று படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கேப்பீங்க! எனக்குத் தெரியும், ஆனாலும்...நான் ஊருக்குப் போனப்ப பொழப்புக் கெட்டு;) எடுத்த போட்டோஸ், வீடியோஸ், உதிரிப் பூ கிடைக்காம வாங்கிய மல்லிகைச் சரம் இதையெல்லாம் உங்கள்ட்ட காட்டலன்னா என்ன அர்த்தம் சொல்லுங்க?!! ;))) 

எனவே, அன்பார்ந்த வாசகப் பெருங்குடி மக்களே, இந்தப் படத்தில் இருப்பது மல்லிகை! ஒவ்வொரு வீட்டின் மன்னர்களும் மயங்கும் பொன்னான மலர்! ;) :) கோவையில் க்ராஸ்கட் ரோடில் மாலை போல நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட மல்லிகைச் சரம் கிடைக்கும்னு ஏற்கனவே சொல்லிருக்கேன். மற்றபடி பூக்காரர்களிடம் கிடைக்கும் சரம் அவ்வளவு நெருக்கமாக இராது. உதிரிப் பூ விற்கும் ஆட்களிடம் நான் தேடுகையில் மல்லிகை கிடைக்கவில்லை. கிளம்பும் நாள் வந்துவிடவும், ஒருநாள் பஸ்ஸ்டாப் பூக்காரரிடம் வாங்கிய மல்லிகைச் சரமே படத்தில் இருப்பது. நன்றாக நெருக்கமாகவே தொடுக்கப்பட்டிருந்த சரம். ஆசை  தீர போட்டோவும் எடுத்துகிட்டு தலையிலும் வைச்சுகிட்டாச்சு! 
 ~~~
ஜாதி முல்லை? ஜாதி மல்லி? இந்த மலர் ஏறத்தாழ முல்லைப் பூவின் வடிவில் இருக்கும், ஆனால் கொஞ்சம் அளவில் பெரியது, மணமும் வேறு! மல்லிகையின் சாயலை விட முல்லையை அதிகம் ஒத்திருப்பதால் என்னைப் பொறுத்தவரை  இது ஜாதி முல்லைதான்! :)
ஊரில் எங்க வீடு இருக்கும் ஏரியாவில் கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் தவறாமல்  இந்தக் கொடி வளர்த்திருக்காங்க. ஜாதிப்பூ மணம் அபாரமாய் இருக்கும், சிலருக்கு ஒவ்வாமல் தலைவலி கூட வரும் என்பார்கள். மாலையில் மலரும், மல்லி-முல்லை போல மாலைநேரம் மொக்குகளைப் பறித்து தொடுத்து (அறை வெப்பநிலையில்) வைத்தால் காலையில் வெள்ளைவெளேரேன்று விரிந்திருக்காது, புளியம்பூ போல நிறம் மாறிவிடும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் மட்டுமே சமர்த்தாய் மேலே படத்தில் இருப்பது போல இருக்கும். :)
 
பலர் ஜாதி முல்லையையும்,  முல்லைப் பூவையும் குழப்பிக் கொள்கிறார்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம்! எங்க வீட்டுச் செடியில் இருந்த அரும்பு, மொக்கு, மலர் என படமெடுத்து தள்ளிவிட்டேன்! ஹிஹிஹி... செடி இன்னும் சிறு செடியாய் என்பதால் அதிகம் பூக்கள் இல்லை. ஆனாலும் தினமும் பூப்பறிப்பது எனக்கு மிகப் பிடித்த ஒரு வேலை. :) 

 ஜாதி முல்லையை சரமாகத் தொடுப்பது மிக எளிது. அதுவே மல்லி என்றால் நெருக்கமாகத் தொடுக்க கொஞ்சம் ப்ராக்டீஸ் இருக்கவேண்டும். படத்தில் இருப்பது போல ஒரே புறமாய்த் தொடுத்து, இரண்டு நுனியிலுள்ள நூல்களையும் இணைத்தால் ஊசியில் கோர்த்த பூப்பந்து போல அழகாய் இருக்கும்.  ட்ரை பண்ணிப் பாருங்க! :)
 ~~~


முல்லை..என் மனம் கவர்ந்த மலர்! :) ஏற்கனவே தொடுத்த முல்லைச்சரம் இங்கேயும் இருக்கிறது. இந்த முறை ஊருக்குப் போகையிலேயே ஒரு நட்பூ:) எனக்கு பூத்தொடுப்பது எப்படி என்று வீடியோ எடுத்து வரவேண்டும் என்று அன்புக் கட்டளை:) இட்டிருந்தார். அதனால் சந்தைக்குப் போனபோது காப்படி:) பூ  வாங்கிவந்து கட்டி, வீடியோவும் எடுத்து யூ ட்யூபில் அப்லோட் செய்திருந்தேன். கோரிக்கை வைத்த நட்பூ:) அக்கம் பக்கம் வேலியில் இருந்த பூவைக் கொழுவி;) தொடுத்து சூட்டி, படமெடுத்து, பதிவும் போட்டு...ஓக்கே, ஓக்கே! அது யாருன்னு நீங்களே கண்டு புடிச்சிக்கோங்க. :)))

2-3 பகுதிகளாக எடுக்கப்பட்ட வீடியோ..வீடியோ கிராபருக்கு கேமரா கொஞ்சம் புதிது என்பதால் ஆங்காங்கே zoom-in & zoom-out  செய்து பயமுறுத்துவார்! பத்திரம்! :) இருந்தாலும் சித்திக்காக வீடியோ எடுத்துக் கொடுத்த என் (அக்கா) பையனுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி! :) 





பகுதி-2 

பகுதி-3

 நறுமலர்க் கூட்டத்துடன் வெள்ளை செம்பருத்தி, ரோஜா வண்ண செம்பருத்தி. அடுக்கு மல்லி பற்றி கருத்துக்களில் ப்ரியாராம் சொல்லிருக்காங்க, பாருங்கோ! :)

Wednesday, December 12, 2012

கேரட் கொத்து சப்பாத்தி

தேவையான பொருட்கள்
சப்பாத்தி -3
கேரட் (சிறியதாக) - 1
முட்டை -1
நறுக்கிய வெங்காயம்-3 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய பச்சைமிளகாய்-1
வரமிளகாய்-1
சக்தி கறி மசாலாபொடி- 2டீஸ்பூன்
எண்ணெய்
கடுகு-1/2டீஸ்பூன்
சோம்பு(பெருஞ்சீரகம்)-1/2டீஸ்பூன்
உப்பு

செய்முறை
கேரட்டை கழுவிவிட்டு காய் துருவியில் துருவி வைக்கவும்.
சப்பாத்தியை மெல்லிய துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் காயவிட்டு, கடுகு - சோம்பு சேர்த்து பொரியவிடவும். பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கிள்ளிய  வரமிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கேரட்டை  சேர்த்து ஒரு நிமிஷம் வதக்கி, முட்டையை உடைத்து ஊற்றவும்.
முட்டையை ஊற்றியதும் நன்றாக கிளறிவிடவும், ஒரு நிமிடத்தில் முட்டை வெந்துவிடும். பின்னர் உப்பு - மசாலாபொடி போட்டு கிளறவும்.
மசாலா வாசம் போனதும் (ரொம்ப நேரமாகாது, ஒரு நிமிஷம் வதக்கினால் போதுமானது.) நறுக்கிய சப்பாத்தி துண்டுகளைச் சேர்த்து கலந்துவிடவும்.

அவ்ளோதாங்க, கேரட் கொத்து சப்பாத்தி ரெடியாகிருச்சு! Maggi hot n sweet tomato chilli sauce உடன் சூடாக சாப்பிட சூப்பராக இருக்கும்.
முன்பே செய்து வைத்த சப்பாத்தி (அ) ரெடிமேட் சப்பாத்தி இருந்தால் சட்டென்று செய்துவிடலாம். சப்பாத்திக்கு செய்த குருமா ஏதாவது மீதம் இருந்தால் ஒரு கரண்டி குருமாவும் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும். இதனுடன் கலர் குடைமிளகாய் சேர்த்தாலும் நன்றாக இருக்கும். இவை  இரண்டுமே கைவசம் இல்லாததால் நான் சேர்க்கவில்லை.

Sending this recipe to Bachelor's Feast event happening at Jaleelaa akkaa's Samaiyal attakaasam

Wednesday, December 5, 2012

நான் ரசித்தவை, நீங்களும் ரசிக்க!

சிலநாட்களுக்கொருமுறை  ப்ளாகில் என்ன எழுதுவது என்று மூளையில் பல்பூ:) எரியாது..அப்படியாப்பட்ட நாட்களில் அமைதியாக இருந்துவிடுவேன், திடீரென்று ஒரு ஐடியா உதயமாகும். அப்படியான ஒரு நாள்தான் இன்று! :) [நீங்க சகுனமெல்லாம் பார்ப்பீங்க? அப்படின்னா இன்னிக்கு நரிமுகத்திலதான் முளி;)ச்சிருக்கீங்க, தகிரியமா படிக்கோணும், வெசனப்படக்குடாது! :)))))]

பழைய புகைப்படக் கோப்புகளில் இலக்கில்லாமல் உலவுகையில் என் விழித் தூண்டிலில் மாட்டிய புகைப்பட மீன்கள்:) இன்று  உங்கள் பார்வைக்கும்!

படம்: 1
எவ்வளவு அழகு இந்த வானம் என்று பலநேரங்களில் தோன்றும், அந்த அழகை அப்படியே புகைப்படத்தில் பதுக்கி வைத்துக்கொள்ள நினைக்கையில் கையில் காமரா இருக்காது. அதிர்ஷ்டவசமாகக் கையில் காமராவுடன் ஒரு பகல் நேரத்தில் அண்ணாந்து பார்த்தபோது விரிந்து கிடக்கும் நீலவானம்!

படம்: 2
  இலையுதிர் கால வண்ணங்களை ரசிக்கும் நோக்கில் கிளம்பிய ஒரு நாளில் வெள்ளையும் ஒரு வண்ணம்தான், எங்களைப் பார்க்கமாட்டாயா என்று தலையாட்டிய ஒரு ரோஜாக் குடும்பம்!  அடுக்கடுக்கடுக்கடுக்காய் புதைந்துகிடக்கும் இயற்கை, மொட்டவிழும் ரோஜாவில்! :)

படம்: 3
வழமையான மிரட்டலை விடுத்து, அப்பாவிக் கண்கள், அழகு மூக்கு  என சாந்தமாய் இருக்கும் வரிப்புலி..பலநாட்களாய் என் கருத்தைக் கவர்ந்த புலிக்குட்டியை ஒரு நாள் வெற்றிகரமாகப் படமெடுத்தே  விட்டேன்!
பி.கு. அடிக்கவராதீங்க, இது கீழ்வீட்டுக் குப்பைத் தொட்டி! ஹிஹி! ;):)

படம்: 4
வீட்டுத்தொட்டியில் மலர்ந்த மலர்கள்..தண்ணீரில் போட்டு அலங்காரமாய் வைக்கலாம் என்று பறித்த ஒரு நாளில் க்ளிக்கியது! :)

படம்: 5
 
 டேக் எ ப்ரேக்! ஹேவ் திஸ் ஸ்னாக்!  :)
எங்கூர் ஸ்வீட் ஸ்டாலில் வாங்கிவந்த கலகலா/மைதா பிஸ்கட்..
 ஆக்ச்சுவலி, இதுக்கு சரியான பெயரென்ன என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. காலகாலமாகக் கடைக்குப் போனால்  "அது"-ஒரு பேக்கட் குடுங்க!-- என்றே கேட்டு வாங்கியிருக்கிறோம்/வாங்குகிறோம். :) ;) :0)

 படம்: 6
 முன்னிரவிலேயே  உதித்துப் பளீரென்று மிரட்டிய ஜூலை மாதப் பௌர்ணமி நிலா! சற்றே இருட்டிய பின்னர் படமெடுக்க வசதிப்படவில்லை, எடுத்த படங்களில் நிலவின் பிரம்மாண்டம் புலப்படவுமில்லை!

படம்: 7
 எறும்புகளின் தொல்லையால் சுவரிலிருந்து கூரைக்கு இடம்பெயர்ந்த ஹம்மிங் பர்ட் ஃபீடரும், பிஸியாக தேன்குடிக்கும் தேன்சிட்டும்! :) 
போனவாரத்தில் 2-3 தேன்சிட்டுக்கள் தொடர்ந்து வந்தவண்ணமிருந்தன, அவற்றில் ஒருவர்  மற்றவர்களைத் தேன்குடிக்கவிடாமல் துரத்தியவண்ணமே இருந்தார். எல்லாரும் ஒரே போல தெரிவதால், துரத்துவது யார், துரத்தப்படுவது யார் என்று கண்டுபிடிக்க முடிவதில்லை! ;) இப்பவும் துரத்தல் அவ்வப்பொழுது தொடர்கிறது.

படம்: 8
தீபங்கள் பேசும், இது கார்த்திகை மாசம்! 
முல்லையாத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய..
கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் கலையக் கலைய! :)



படம்: 9
ஆரஞ்சு வானத்தில் மரங்களின் பின்னே கண்ணாமூச்சி விளையாடியபடி வீடு திரும்பும் சூரியக் குழந்தை! :)
~~~

 
நான் போட்ட ரம்பத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை  வெற்றிகரமாக, of course, பொறுமையாகப் படித்த அனைவருக்கும் ஒரு சிம்பிள் மீல்.. 
ஹெல்ப் யுவர் ஸெல்ஃப்! 
:))))

LinkWithin

Related Posts with Thumbnails