Tuesday, April 30, 2019

தோட்டம் 2019

இந்த வருடம் எங்க வீட்டு குட்டி தோட்டத்தின் விளைச்சல்! 

கடந்த வருட இறுதியில் பேக்யார்ட் -ஐ கொஞ்சம் செப்பனிட்டோம்..அப்போது காய்கறிகள் வளர்க்க என்று ஒரு இடத்தில் Raised bed மாதிரி ஒன்றை உருவாக்கினோம். கிறிஸ்மஸ் பயணம் கிளம்புமுன் நர்சரியில் இருந்து வாங்கி வந்த நாற்றுகளை நட்டுவிட்டோம். 

ஜனவரி 30ஆம் தேதி மஞ்சள் நிற காலிஃப்ளவரும், ரொமனஸ்கோ காலிஃப்ளவரும் மொட்டுக்கட்டி வளர ஆரம்பித்தன. 
மடமடவென ஒரு மாதத்தில் இரண்டு காய்களுமே வளர்ந்துவிட்டன. :) 

அந்த காய்களைப் பறித்துச் சிலநாட்கள் கழித்து ப்ரோக்கலி பூக்கள் வளர ஆரம்பித்தன. 

ப்ரோக்கலி இரண்டே வாரங்களில் வெகு வேகமாக வளர்ந்துவிட்டது. அதனுடன் நட்ட காலிஃப்ளவர் தான் கொஞ்சம் ஏமாற்றம்.. ஒரு பூவைத்தவிர மற்றவை சரியாக வளரவில்லை..பிறகு இணையத்தில்  இருந்து காலிஃப்ளவர் வளர ஒரே சீரான சீதோஷ்ணம் தேவை எனத் தெரிந்தது. எல்லாம் ஒரு அனுபவம்தான்! 
நூல்கோல் (knol kohl, kohlrabi) நாற்றுகளும் டிசம்பரிலேயே நட்டு வைத்ததுதான்..6 செடிகளில் சில காய் பெருக்காமல் முழுத்தண்டுமே பெருத்து வளர்ந்தன..ஒழுங்காய் வளர்ந்த ஒரு காயையும் பூப்பூக்கும் வரை விட்டு வைத்துவிட்டேன். அறுவடை எப்பொழுது செய்ய வேண்டும் என்ற அறியாமை..முதல் முறை வளர்க்கையில் பல பாடங்கள்!! இருப்பினும் கிடைத்த ஓரிரு காய்கள் சுவை அலாதியாய் இருந்தன.

அடுத்து வருவது Fava Beans / Broad beans செடி..நான் இதுவரை பார்த்திராத வண்ணம் இலைகளுடன் தளதளவென இருந்ததால் 2 நாற்றுகள் வாங்கிவந்தேன். அமைதியாக அழகாக வளர்ந்து பூக்கள் மலர ஆரம்பித்தன..பிறகு பார்த்தால் செடி பாட்டுக்கு மடமடவென வளர்ந்துவிட்டது. காய்கள் ஒன்றுமே வரக்காணோம்..திடீரென ஒரு நாள் பார்க்கையில் காய்கள் தட்டுப்பட்டன..தண்டின் ஓரத்திலேயே ஒவ்வொரு காயாய், வெண்டைக்காய் போல காய்கள் வளர்கின்றன. நூல்கோல் பறிக்க ஏமாந்துபோனதில் முதல் முறை ஃபாவா பீன்ஸை கொஞ்சம் இளசாகவே பறித்துவிட்டேன். கொஞ்சமாக இருந்ததினால் பிரியாணியில் போட்டு செலவழித்தாயிற்று. 


இரண்டாம் முறை பீன்ஸ் காய்களை பறித்தாயிற்று. கூடவே புழுக்கள் தொந்தரவு நிறைய இருக்கிறதால் பார்த்து பார்த்து அவற்றை பிடித்து நீக்கிக்கொண்டும், புழு தின்ற இலைகளை நறுக்கி வீசிக்கொண்டும் நாட்கள் நகர்கின்றன. 

டர்னிப் - குளிர்கால காய்கறி என்று அதுவும் போட்டிருந்தோம். தப்பிப்போய் தள்ளி விழுந்த ஒரு விதை மட்டும் நல்ல முற்றிய காயாய் விளைய, ஓரே இடத்தில் போடப்பட்ட மற்ற விதைகள் நெருக்கியடித்துக்கொண்டு வளர்ந்தன.
டர்னிப்பும் பூப்பூக்கத் தொடங்கவே சுதாரித்துக்கொண்டு இந்த வாரம் அவற்றையும் பறித்தாயிற்று.
அதிகம் எழுத நேரமில்லாததால் படங்களை நிறையச் சேர்த்து ஒரு பதிவு. இந்தக் காய்கறிகள் வளர்ப்பதைப் பற்றி ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கருத்துப்பெட்டியில் கேளுங்கள்..தெரிந்ததைப் பகிர்கிறேன். நன்றி!! :))) 


9 comments:

  1. வா..வ் சூப்பர் மகி. நாம் வளர்த்த செடிகளில் பறித்த காய்களில் சமைத்தால் ருசியே தனி. அனுபவமே பாடம் மகி. அடுத்த தடவை இப்போ விட்ட தவறுகளை சரி செய்யலாம். எனக்கும் வளர்க்க ஆசை. ஆனா இங்கு காலநிலை மாறிமாறி வருவதால் கஷ்டமா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா...ஆமாம், இந்த முறை ஆர்வக்கோளாறில் சில தவறுகள்..அனுபவத்தில் சில தவறுகள். அடுத்த முறை சரி செய்ய முடிகிறதா பார்ப்போம். :)

      Delete
  2. Keep this going please, great job!

    ReplyDelete
  3. சூப்பரா இருக்கு மகி ....

    ReplyDelete
  4. தோட்டத்திலிருந்து சமையலறை வரை காய்கறிகளின் அருமையான பயணம். காலிஃப்ளவர், ப்ரோக்கோலி வளர்க்கும் ஆசையைத் தூண்டிவிட்டுட்டீங்க. அடுத்த முறை முயற்சி செய்து பார்க்கிறேன். :))

    ReplyDelete
    Replies
    1. :) உங்களைப் போலதான் நானும்!! ப்ரோக்கலி முயற்சி செய்யுங்க..காலிஃப்ளவர் கொஞ்சம் டெலிகேட்..நான் இனி வளர்க்கப்போவதில்லை..ஆல் த பெஸ்ட் டு யூ!! :)

      Delete
  5. I keep getting comments like this often now a days...are they for real?? Thanks anyways.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails