Monday, August 26, 2013

வீட்டுத்தோட்டத்தில் ஒரு வீக்-எண்ட்!

முன்னெச்சரிக்கை: பதிவின் நீளம் கொஞ்சம் அதிகம். இன்னமும் சொல்லவேண்டியவை இருந்தாலும், வாசிப்போர் நலன் கருதி:) அவற்றை அடுத்த பதிவுக்கு ஒத்தி வைத்திருக்கிறேன். அவசரமாய் ஓடிவந்து எட்டிப்பார்த்துவிட்டு கம்பி நீட்டாம, நிதானமா வந்து படிங்க என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். :) 
எல்லாருக்கும் இந்த வாரம் இனிய வாரமாகத் தொடங்கியிருக்கும் என நினைக்கிறேன். எங்க வீட்டில்  பலநாட்கள் தவணையாய் இருந்த ஒரு வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. வசந்தம் முடிந்ததுமே  பழைய செடிகளை அகற்றி புதிதாகச் செடிகள் நட்டிருக்கவேண்டும், நாட்கள் நீண்டு கோடையின் இறுதியே வந்துவிட்டது. ஆனாலும் பரவாயில்லை, Its better late than never-என்பதாக தொட்டிச்செடிகளை தொடர்ந்து சில மணி நேரங்கள் கவனித்தோம். யெஸ், யு ஆர் ரைட்! பால்கனித் தோட்டம் பற்றிய (படங்களால் நிறைந்த) பதிவிது. :)

டேலியா-வின் சீஸன் முடிந்து, பூக்கள் சிறுத்துப் போயின, கூடவே பூச்சித் தொற்றும் வந்துவிட்டது. ஆனாலும் செடிகளைப் பறிக்க மனமில்லாமல், அப்படியே விட்டிருந்தோம். மனதைத் தேற்றிக்கொண்டு நானே(!) செடிகளை மண்ணிலிருந்து சில இன்ச் உயரத்தில் நறுக்கிவிட்டேன். வறண்டுபோன அவற்றை நீக்கிவிட்டு, தொட்டியிலிருந்து கிழங்குகளை எடுத்து வைத்திருக்கிறோம். அடுத்த வசந்தத்தில் அவை மீண்டும் முளைக்குமா இல்லை வராதா என எனக்கும் என் கணவருக்கும் போட்டி! நான் கிழங்குகள் தழைக்கும் என்கிறேன், பார்க்கலாம்![நீங்க எந்தக் கட்சி?! என் கட்சியா, இல்ல எதிர்க்கட்சியா?  ;) :)]
மற்றும் சில தொட்டிகளில் பூக்கள் இல்லாமல் இருந்த செடிகளின் இலைகளை நறுக்கி, ரோஜாக்களிலும் பூத்து முடிந்த தண்டுகளை நறுக்கி..ஒழுங்கு செய்து நிமிர்ந்து பார்த்தால், ஏதோ தானே எல்லா வேலையையும் செய்து முடித்ததுபோல சோம்பல் முறித்தார் [கொலாஜில் முதல் படம்! ;) ] திருவாளர் ஜீனோ! :)))) 
டாலர் ஷாப்பில் இருந்து சில தொட்டிகள், சில பூக்கள் வாங்கி வந்திருந்தேன், அவற்றையும் நட்டு, மண் குறைந்த மற்ற தொட்டிகளில் மேலும் மண்ணிட்டு நிரப்பி(னார்)னோம்! ;) [நாந்தான் பிஸியா போட்டோ புடிச்சுகிட்டிருந்தேனே!..ஹிஹி]

புதினாவை நட்டு வருடம் ஒன்றுக்கு மேல் ஆகிவிட்டது. அதனை நீக்கிவிட்டு புதிதாக வளர்ப்போம் என நினைத்திருந்தேன். புதினாத் தொட்டியைக் கவிழ்த்து, செடியை வெளியே எடுத்தால்....
அவ்வ்வ்வ்வ்வ்வ்....மண்ணே இல்லாமல் தொட்டியின் வடிவில் வேர்விட்டு இருந்தது புதினா!! நல்லவேளை இப்போதாவது ஞானோதயம் வந்ததே நமக்கு என நினைத்துக்கொண்டு, சில தண்டுகளை பறித்து புதுத்தொட்டியில் நட்டுவிட்டு, இதனை எறிந்துவிடலாம் என என்னவரிடம் சொன்னேன். அவர் அதிர்ச்சி ஆகிவிட்டார்! ;) என்னது...ஏன் இதை வீசணும்? வேறு தொட்டியில் வைப்போம் என்றார். அப்படி வருமா என எனக்குச் சந்தேகமாக இருந்தது. இருந்தாலும் முயற்சிப்போம் என சற்றே பெரிய கருப்புத் தொட்டியில் மண் நிறைத்து இந்த புதினா மரத்தை வைத்திருக்கிறோம்! :)
ஒரு வாரம் கழிந்தபின் பார்த்தால், பச்சைத்தொட்டியை விட கருப்புத் தொட்டியில் வைத்த புதினா மரம்தான் நன்றாக துளிர்த்திருக்கிறது! ;)

அடுத்து வருபவர் கொஞ்சம் ஸ்பெஷல்!! பலநாட்கள் பழம் பறித்து வந்து விதை போட்டபோதெல்லாம் முளைக்காமல் ஏமாற்றினார். ஒரு நாள் சம்பந்தமே இல்லாமல் ஒரு தொட்டியில் தானாகவே முளைத்திருந்தார். அந்தத் தொட்டியிலிருந்த மற்ற செடிகளனைத்தும் வறண்டு போன நிலையில் இவர் மட்டும் சிறு செடியாக, பசுமையாக நின்றிருந்தார்!!  எனக்கென்னமோ சந்தேகத்தில் இருக்கட்டும் என விட்டுவைத்து காத்திருந்தேன். இந்தமுறை என்னை ஏமாற்றவில்லை, அவர் மணத்தக்காளிச் செடியேதான்! :))))
ஜெரேனியம் பூக்கள் உள்ள படத்தில் பாருங்கள், அப்போதுதான் சிறு நாற்றாக வளரத்துவங்கியிருந்தது. பிறகு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது சுக்குட்டிச் செடி! [கோவையில் இதன் பெயர் சுக்குட்டிச் செடி-சுக்குட்டிக் காய்-சுக்குட்டிப் பழம்! :)]
பூக்கள் வந்தன, பூக்கள் பிஞ்சாகிக் காயாகிப் பழமும் ஆனது. கீரையைப் பறிக்கலாம், பறித்துச் சமைத்தால் ஒரு ஸ்பூன் கீரைதான் கிடைக்கும்! ;) எனக்குள் ஒளிந்திருந்த சிறுமி, பறிக்காதே...பறிக்காதே என கட்டளையிட நானும் பார்த்து ரசித்துக்கொண்டே இருந்தேன். இறுதியாக சிறுமிக்கு அவள் வேண்டியது கிடைத்துவிட்டது. ஆமாங்க, கை நிறைய சுக்குட்டிப் பழம்! :))))
செடியில் நிறையப் பழங்கள் பழுத்தபிறகும் சின்னக் குழந்தை மாதிரி பறிக்காமல் பார்த்து ரசித்துக்கொண்டே சிலநாட்கள் விட்டுவிட்டேன். பின்னொரு சுபயோக சுபதினத்தில்(!) பழங்களைப் பறித்து கழுவி ருசித்தாயிற்று. :)  

இன்னும் காய்கள் இருக்கின்றன செடியில். ஆனால் பாருங்க, சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையாக ஹோம் டிப்போ-வில் இருந்து ஆர்கானிக் மிளகாய்ச்செடிகள் வாங்கிவந்தேன், [அவற்றில் அப்போதே பூச்சிகள் இருந்தன] அந்தச் செடிகளிலொன்றை  மணத்தக்காளித் தொட்டியில் வைக்க, அங்கிருந்து இங்கே பூச்சிகள் பரவிவிட்டன. நிறைய இலைகளைப் பறித்துப் போட்டேன். சிலவற்றில் பச்சை நிறப் புழுக்களும் தெரிகின்றன. வேப்பிலைப் பொடி கிடைத்தால் தூவிவிடவேண்டும் அல்லது சோப் தண்ணீர் தெளிக்கவேண்டும் என தெரிந்தாலும், இப்போதைக்கு அவற்றையெல்லாம் செய்யாது பூச்சி அரித்த இலைகளைக் கிள்ளியெறிந்துகொண்டிருக்கிறேன்.
ஹோம் டிப்போவில் ஒரு தக்காளியும் சில மிளகாய்ச்செடிகளும் வாங்கிவந்த வாரம் எங்க ஊர் உழவர் சந்தைக்குப் போனேன், அங்கே நர்ஸரியில் சிவப்பு குடைமிளகாய்ச் செடி கிடைத்தது. இந்த வகை நன்றாக வளரும் என முன்பதிவுகளில் கருத்துக்கள் சொல்லியிருந்தார்கள், அதனால் அதை வாங்கியாயிற்று.
ஃபார்மர்ஸ் மார்க்கட் நர்ஸரியில் இன்னுமொரு ஆச்சர்யம்...கறிவேப்பிலை மரம்! :) நல்ல ஆரோக்கியமான சிறு மரக்கன்றுகளாகவே விற்பனைக்கு வைத்திருந்தார்கள். தரையிலிருந்து சுமார் 11/2 உயரம் வளர்ந்திருந்தன கறிவேப்பிலைக் கன்றுகள். விலைதான் கொஞ்சம் அதிகம் போல தோன்றியது..$25!! வாங்கலாமா வேண்டாமா என குழம்பி அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்துவிட்டு குடைமிளகாயை மட்டிலும் வாங்கிவந்தேன்.

நர்ஸரியில் இருந்தவரிடம் பேச்சுக் கொடுத்ததில் கிடைத்த சில தகவல்கள்..கறிவேப்பிலை வளர்க்க மணல்தான் நல்லது, அல்லது உரங்கள் கலக்காத potting soil உபயோகிக்கலாம். மிராக்கிள் க்ரோ போன்ற உரமூட்டப்பட்ட மண்ணில் நடுகையில் செடி முதலில் நன்றாக வளர்ந்தாலும் ஒன்றிரண்டு வருஷங்களில் வாடிப் போகுமாம். குளிர் காலங்களில் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும், கறிவேப்பிலை குளிர் தாங்காதாம்! :) கூடவே இன்னொரு விஷயமும் சொன்னார், இப்போது நீங்கள் இந்தச் செடியை வாங்கிப் போனாலும், உடனே இதிலிருக்கும் கறிவேப்பிலையை உபயோகிக்கக் கூடாது. இலைகள் மீது சில ரசாயனங்கள் தெளித்திருக்கிறோம். அதனால், மரக்கன்றை வீட்டில் நட்டபிறகு புதிதாகத் தளிர்க்கும் கறிவேப்பிலைதான் சமையலுக்கு உகந்தது- என்றார்! அப்படி கறிவேப்பிலை நட்டு, தழைந்து, இலை முற்ற சுமார் ஒரு  வருஷமாவது ஆகுமாம்! 

எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. அதனால் வாங்காமல் வந்துவிட்டேன். என்னை விட என்னவருக்கு நிறைய்ய ஏமாற்றம்! ஏன் வாங்காமல் வந்தே என எனக்கு ஒரே அர்ச்சனை! ;) 
யு.எஸ்.-ல் தோட்டம் போட்டிருக்கும் நட்புக்கள் யாராவது கறிவேப்பிலை வளர்த்திருக்கிறீர்களா? மரக்கன்று இவ்வளவு விலைதானா?  நம்பி வாங்கி வளர்க்கலாமா என தெரிந்தவர்கள் யாரேனும் சொன்னால் வரும் வாரங்களில் வாங்கலாமா என முடிவு செய்ய உதவியாக இருக்கும். செய்வீர்களா? 
~~~
தோட்டத்தில் நிறைய வேலை செய்ததால் சமைக்க நேரமில்லை, அதனால் பழங்களை நறுக்கி மதிய உணவுக்கு வைத்தாயிற்று! 
எனக்கு பழங்களை அப்படியே சாப்பிடத்தான் விருப்பம். ஆனால்....
 சிலருக்கு உப்பு-மிளகாய்ப்பொடியெல்லாம் தூவிச் சாப்பிட விருப்பமாய் இருக்கும். :) 
ஒரு பாதி ஸ்பைஸி ஃப்ரூட்ஸ், மறு பாதி ப்ளெய்ன் ஃப்ரூட்ஸ்...ஹெல்ப் யுவர் ஸெல்ஃப்!
அந்த ஞாயிறு சமைக்காமல் டிமிக்கி கொடுத்தாலும், உங்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக...
ஒரு சிம்பிள் லஞ்ச்!
தக்காளி சாதம், தயிர் சாதம், கேரட் பொரியல், அப்பளம், மோர் மிளகாய்.

27 comments:

  1. பயனுள்ள வீக் எண்ட்/

    ReplyDelete
  2. விவசாயப் பண்ணைக்கு ஃபீல்ட் ட்ரிப் போய் வந்த மாதிரி இருக்கு.டாலர் ஷாப்பில் இருந்து தொட்டிகளும்,செடிகளுமா!!அவ்வ்வ்!இங்கெல்லாம் கிடையாது.

    ப்ளாஸ்டிக் தொட்டி நல்லாருக்கா.நான் இரண்டு தொட்டிகள் வாங்கிவந்து தக்காளி செடிகள் நட்டு வைத்தேன்.சரியாவே வரல.

    நானும் மணத்தக்காளி பழம் எடுத்து வந்து தொட்டியில் போட்டுவிட்டேன். செடிகள் நன்றாக வளர்ந்து பூ பூக்கும் சமயம் இலைகள் சுருண்டு பூச்சி வந்து விடுகிறது.அதனால் விடாமல் பிடுங்கிப் போட்டாலும் ஏகத்துக்கும் குட்டிகுட்டி செடிகள் இன்னும் வந்துகொண்டேதான் இருக்கிறது.

    ReplyDelete
  3. ஒரு நாள் சமைக்காமல் டபாய்த்து விட்டு கடைசியில் மெதுவாக சொல்கிறீர்கள் இன்று சமையலுக்கு லீவு என்று. என்ஜாய்!

    ReplyDelete
  4. கறிவேப்பிலை செடியை நம்மூர் கடைகளில் முன்னர் $ 15 க்கு பார்த்ததாக ஞாபகம்.இப்போது தெரியவில்லை.எப்போ நட்டு எப்போ சாப்பிட்டு பார்ப்பது.அதனால ஒரு lb $ 25 க்கு கிடைப்பதை கொஞ்சம் கொஞ்சமாக வாராவாரம் வாங்கிக்க வேண்டியதுதான்.

    புளிச்சகீரை பிடிக்கும் என்றால்,தொட்டி ஒன்று மீதமிருக்குமானால்,கீரையை ஆய்ந்த பிறகு கீரை குச்சிகளை அடிப்பக்கமாக ஒரு சாண் அளவிற்கு வெட்டி நட்டு வச்சு பாருங்க.எங்க வீட்டில் துளிர்த்து வந்துவிட்டது.நான் சொல்லும் பருப்புக்கீரையும் அப்படியே.பறிக்கத்தான் மனமில்லை.இதில் பூக்களே வர ஆரம்பித்துவிட்டது.

    பதிவு பெரிதானதால் பின்னூட்டத்தையும் ரெண்டாக்கிட்டோமில்ல! ப்ளெய்ன் ஃப்ரூட்ஸை லபக்கிட்டு போய் வருகிறேன்.

    ReplyDelete
  5. புதீனா , சுக்குட்டி எல்லாம் நல்லா வளர்ந்திருக்கின்றன..!

    ReplyDelete
  6. விமலன், முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~
    //டாலர் ஷாப்பில் இருந்து தொட்டிகளும்,செடிகளுமா!!// ஆமாம் சித்ராக்கா! 99c ஸ்டோரில் ப்ளாஸ்டிக் தொட்டிகள், பூச்செடிகள், சில நேரம் தக்காளி, மிளகாய் செடிகளும் கூட வருமே இங்கு! பதிவில் ரோஜாவும், ரோஜா வைத்திருக்கும் தொட்டியும் அங்கே வாங்கியதுதான். புதினாக்கள் வைத்திருப்பதில் பச்சை நிறத்தொட்டியும் அங்கே வாங்கியதுதான். நன்றாகவே இருக்கிறதே!

    // செடிகள் நன்றாக வளர்ந்து பூ பூக்கும் சமயம் இலைகள் சுருண்டு பூச்சி வந்து விடுகிறது.// ஓ!! பாத்திரம் கழுவும் சோப் அல்லது துணி துவைக்கும் சோப்பை தண்ணீரில் கலந்து தெளித்தால் (ஸ்ப்ரேயரும் டாலர் ஷாப்பில இருக்கு! :)) பூச்சிகள் போய்விடும் என்கிறாங்களே, டிரை பண்ணீப் பாருங்களேன். எனக்கு அதைவிட கத்தரியில் இலைகளை வெட்டிவிடுவது ஈஸியா இருக்கு.[ நானொரு வாழைப்பழச் சோம்பேறி! ஹிஹிஹ்ஹ்ஹி! ;)]

    //அதனால ஒரு lb $ 25 க்கு கிடைப்பதை கொஞ்சம் கொஞ்சமாக வாராவாரம் வாங்கிக்க வேண்டியதுதான்.// இது புரியலை! எங்கே வாங்கறீங்க? ஒரு பவுண்டு ப்ரெஷ் கறிவேப்பிலையா என்ன? இங்க ஒரு சின்ன பாக்கட் $1.50!!

    //புளிச்சகீரை பிடிக்கும் என்றால்// நம்பமாட்டீங்க! வாழ்க்கையில் இதுவரை நான் புளிச்சகீரை சாப்பிட்டதே இல்லை! :)))) வாங்கணும்னு கூட நினைச்சதில்லை! யாராவது சமைச்சு தந்தா ஒரு முறை சாப்பிட்டுப் பார்த்துட்டுப் பிடிச்சிருந்தா வாங்கிருவேன். நானா வாங்கி ரிஸ்க் எடுக்க கொஞ்சம் பயம்! ;) அதுமில்லாம இங்க புளிச்சகீரையை பார்க்கிறதே இல்லை!

    //பருப்புக்கீரையும் அப்படியே.பறிக்கத்தான் மனமில்லை.இதில் பூக்களே வர ஆரம்பித்துவிட்டது.// ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு- ந்னு தொட்டியில் ஒரு செடி வளர்ப்போர் கதை எல்லாமே இப்படித்தானா? ஹஹா! :)

    //பதிவு பெரிதானதால் பின்னூட்டத்தையும் ரெண்டாக்கிட்டோமில்ல!// உங்க ரெண்டு பின்னூட்டத்துக்கும் ஒண்ணா பதில் குடுத்துட்டேனே! நன்றி சித்ராக்கா! :)

    ~~
    ராஜி மேடம், //ஒரு நாள் சமைக்காமல் டபாய்த்து விட்டு கடைசியில் மெதுவாக சொல்கிறீர்கள் இன்று சமையலுக்கு லீவு என்று.// ஹாஹா! கரெக்ட்டா பாயிண்ட்டை நோட் பண்ணீருக்கீங்க! டின்னர் நாலு மணிக்கே சமைச்சிட்டமில்ல! அத கணக்கில சேத்துக்குங்க! :)
    நன்றி!
    ~~
    இராஜராஜேஸ்வரி மேடம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!
    ~~

    ReplyDelete
  7. நீங்க இப்பொழுதே வேலைஆரம்பித்தாச்சா மகி.நான் ஆரம்பிக்கவில்லை.எனக்கு டேலியா இன்னும் பூக்கின்றது. நான் உங்க கட்சிதான். நீங்க பயப்பிடாமல் டேலியாகிழங்கினை எடுத்து பாதுகாப்பாக,இருட்டான இடத்தில்தான் வைக்கவேண்டும்.பின் அதனை உபயோகிக்கலாம். நான் இப்படித்தான் செய்துவருகிறேன் டுலீப், டேலியா , ஈஸ்டர்டைமில் பூக்கும் ஒரு பூ.இவையனைத்தும் கிழங்கு வகைதான்.இவைகளைதான் சேர்த்துவைப்பேன்.
    புதினா, நீங்க அதனை எறியத்தேவையில்லை.நன்றாக வளரும்.நான் நட்டு நன்றாக வந்திருக்கின்றது.
    மணத்தக்காளியும் வைத்திருக்கிறீங்களாஆஆ.நல்லதொரு கீரை ஆயிற்றே.
    இந்த மிளகாய்தான் நான் படத்தில் போட்டிருக்கிறேன்.ஆனால் எனக்கு நீளமாக‌
    காய்த்துவிட்டிருந்தது. உங்க படங்களைப்பார்க்க நன்றாக இருக்கு மகி.

    ReplyDelete
  8. கறிவேப்பிலை சம்பந்தமான கேள்விக்கு "வின்சென்ட்பால்ராஜ்" என்பவர் தந்த பதில்
    ""பொதுவாக கறிவேப்பிலை குளிர் பிரதேசங்களில் வருவது சுற்று கடினம். அதுபோன்ற தருணங்களில் பிளாஸ்டிக் பை கொண்டு மூடி அதனை அதிக குளிரிலிருந்து காப்பாற்றுங்கள்.புளித்தமோர் இருந்தால் ஊற்றுங்கள். அது கறிவேப்பிலையின் வளர்ச்சியைத் தூண்டும்.""
    அதனை நீங்க வாங்கினால் கவனமாக பாதுகாக்கவேண்டும்.எனக்கு வரவில்லை. ஆனால் எங்கள் நண்பர் வீட்டில் கொஞ்சம் உயர்ந்த மரமாகவே வளர்ந்துவிட்டிருக்கு. அடுத்தமுறை கமரா கொண்டுவந்து போட்டோ எடுக்கச் சொல்லியிருக்கி றார்கள்.எங்களுக்கும் சிறுசெடி வளருது.யு.எஸ் இல் இருக்கோ,இல்லியோ ஆனா ஜேர்மனியில் வளர்க்கிறார்கள்.
    வீக்கென்ட்டை நன்றாக கழித்திருக்கிறீங்க நீங்கதான். போட்டோ எடுத்து.நன்றி மகி

    ReplyDelete
  9. மகி... அருமை! உங்க வீட்டுத்தோட்டம் பார்க்கையில் நமக்கும் இப்பிடியெல்லாம் செடிகள் வளர்க்கணுமின்னு ஆவலா இருக்கு.

    இங்கே குளிர் காலம் இதோ இன்னும் கொஞ்ச நாட்களில் ஆரம்பிக்கப் போகுது. அப்புறம் முளைச்ச செடி எல்லாவற்றையும் வீட்டுக்குள்ளாறதானே கொண்டுவந்து வைக்கணும்.
    ம்ஹூம்... அது சரிப்படாது எங்களுக்கு. அதில் வரும் சில சிறு பூச்சிகளால் இங்கே ஹச்சும் ஹச்சும்ன்னு ஆரம்பிச்சிடும்.
    உங்க தோட்டத்தைப் பார்த்து இப்பிடியே சந்தோஷப் பட்டுக்க வேண்டியடதுதான்...:)

    அருமை! கண்ணு பட்டுக்கப் போறது உங்க கார்டனிங்...:)

    ReplyDelete
  10. //அவசரமாய் ஓடிவந்து எட்டிப்பார்த்துவிட்டு கம்பி நீட்டாம, நிதானமா வந்து படிங்க என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். :) //

    haa..haa..haa.. இதனால்தான் நான் பல நேரங்களில் பின்னூட்டமிட தாமதமாகிறது.. படித்துவிட்டுப் போட ரைம் எடுக்குமோன்னோ?:)

    ReplyDelete
  11. புதினா வேரிலிருந்துதானே முளைப்பது.. அதனால வேர்தானே முக்கியம். மணத்தக்காழி சாடியில் வருகிறதா? அவ்வ்வ்வ்வ்வ்... எனக்குப் புகையேல்லை:).

    // நம்பி வாங்கி வளர்க்கலாமா என தெரிந்தவர்கள் யாரேனும் சொன்னால் வரும் வாரங்களில் வாங்கலாமா என முடிவு செய்ய உதவியாக இருக்கும். செய்வீர்களா? /// இல்ல என்னைப் பொறுத்து அது வெளிநாட்டு வளர்ப்புக்கு ஒத்துவராது, பெரிதாக வந்தால்தான் இலைகள் பிடுங்கலாம்ம் ஆனா சாடியில் அப்படி வருமா? அடுத்து வீட்டுக்குள்தான் வைக்க முடியுமென நினைக்கிறேன்.

    அதைவிட கடையில் வாங்கி பாவிக்கலாம்..

    ReplyDelete
  12. ஆவ்வ்வ் நைஸ்.. ஐ வாண்ட் தயிர்ச் சாதம்:)..

    ReplyDelete
  13. ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் வாங்கிவந்த தக்காளிப் பழத்தில் இருந்து கொஞ்சம் விதைகளை சும்மா ஒரு தொட்டியில் போட்டேன்.அதிலிருந்து குபுக்குபுக் என ஏகத்துக்கும் செடிகள் முளைத்தன,இன்னும் முளைத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதுக்காகத்தான் ரெண்டு ப்ளாஸ்டிக் தொட்டி வாங்கி நிறைய செடிகள் நட்டு வைத்தேன்.ஒரு வாரத்திலேயே செடிகள் காலி.மண் தொட்டியில் உள்ள செடிகள் சூப்பரா இருக்கு.

    வேர் பூச்சியா இருக்குமோ.மனசேயில்லாம, மண்ணையெல்லாம் ட்ரேஷ்ல கொட்டிட்டு மீண்டும் 10 கேலன் மண்ணு வாங்கி நட்டு வச்சிருக்கேன். செடிக்கு ஏதாவது ஆச்சுன்னா சோப் தண்ணிதான். ஆனாலும் இதால ஏதும் ஆகிடாம இருக்கணும்.

    ReplyDelete
  14. முன்னெல்லாம் சின்ன வெங்காயம்,கறிவேப்பிலை எல்லாம் கிடைப்பது அரிதாக இருக்கும்.இப்போ சின்ன வெங்காயம் நிறைய கிடைக்கிறது. அதேபோல் கறிவேப்பிலையும் ஃப்ரெஷ்ஷா கிடைக்குது.இண்டியன் ஸ்டோரில் ஒரு சின்ன பாக்கெட் $ 1 அல்லது $2 க்கு கிடைக்கும். இங்குதான் வாங்குவேன்.

    போன வருடம் இந்த ஊர் கடை ஒன்றில் இரண்டுமூன்று கேஸ் கறிவேப்பிலை பார்த்தேன். ஒரு lb $ 15 க்கு. இந்த வாரம் வேறொரு கடையில் அதே மாதிரி பார்த்தேன். ஒரு lb $ 25 க்கு.

    பருப்பு கீரை நிறைய வந்திருக்கு.ஆனாலும் தரையிலன்னா வேர்விட்டு நன்றாக வரும். தொட்டிக்குள்ளயே எவ்வளவுதான் வளர முடியும். பிறகு உங்க வீட்டு புதினா மாதிரிதான் ஆகும்.எங்க வீட்டு புதினாவையும் எடுத்துப் பார்க்க‌ வேண்டும்.

    ReplyDelete
  15. வத்தல் பொரிக்க பிடிக்கல,புளிச்ச கீரை சாப்பிட்டதில்ல____ இப்படியான பல 'இல்லை'களை நோட் பண்ணிட்டேதான் வரேன். ஊரிலிருந்து ஆள் வந்ததும் முதல் வேலையா போட்டுக்கொடுத்திட வேண்டியதுதான்.

    ReplyDelete
  16. Thanks for the lunch. Much needed after going around your wonderful big garden, Mahi.

    Good to see manaithakkali there. Bein gin India, i could not get them in my place.

    No space to grow plants too. So satisfying my love for plants by keeping few indoor plants at home.

    Good that Geno is also plant friendly. Happy gardening.

    ReplyDelete
  17. Manathakkali US la valarutha, nice garden Mahi..

    ReplyDelete
  18. அம்முலு, இங்கே டேலியா சீஸன் ஸ்ப்ரிங் முதல் ஸம்மர் வரைதான்! அதன்பிறகு பூக்கள் சிறிதாகி, பூச்சியும் பிடிக்கிறது.
    //டேலியாகிழங்கினை எடுத்து பாதுகாப்பாக,இருட்டான இடத்தில்தான் வைக்கவேண்டும்.// ம்ம்...என்னவர் பேடியோவில் ஏதோ பெட்டிக்குள் வைச்சிருக்கேன் என்றார்! பார்த்து உள்ளே எடுத்து வைகக்ணும். வெயில் கொளுத்துது இங்கே!

    // மிளகாய்தான் நான் படத்தில் போட்டிருக்கிறேன்.ஆனால் எனக்கு நீளமாக‌
    காய்த்துவிட்டிருந்தது. // அம்முலு, நான் போட்டிருப்பது குடைமிளகாயும், செரானோ பெப்பரும். உங்க வீட்டு மிளகாய் ஹாலப்பினோ போலத் தெரிந்ததே எனக்கு? :)

    மணத்தக்காளி தானே வருகிறது. புதினாவும் ஓகே! கறிவேப்பிலை பற்றிய தகவலுக்கு நன்றி அம்முலு! அதிரா மற்றும் சித்ராக்காவின் கருத்தும் பார்க்கையில் நிதானமாக யோசித்து வாங்கலாம் என நினைக்கிறேன்.

    விளக்கமான கருத்துக்களுக்கு நன்றிகள்!
    ~~
    இளமதி, குளிர் பிரதேசங்களில் தோட்டம் கொஞ்சம் கடினம்தான் அல்லவா! அதிரா-அம்முலு எல்லாம் வளர்க்கிறாங்களே,,நீங்களும் கொஞ்சமா டிரை பண்ணிப் பாருங்கோ. ஆனால் அலர்ஜி என்றால் எதுவும் செய்ய முடியாதுதான்.
    வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி இளமதி!
    ~~
    அதிராவ், //. படித்துவிட்டுப் போட ரைம் எடுக்குமோன்னோ?:)// ஆமாம்! சில நேரம் சில பேர்கள் (நாலு காலில் மியாவ் மியாவ் என கத்திட்டு வந்து) படிக்காம படம் பார்த்து கருத்துச் சொல்லிப்புட்டும் போயிடறாங்க, அதான் உஷாரா முன்னெச்சரிக்கை குடுத்துட்டேன்! ;) :)

    //புதினா வேரிலிருந்துதானே முளைப்பது.. // என்ன மியாவ் சொல்றீங்க? புதினா முற்றிய தண்டை உடைத்து வைத்தாலே வேர் பிடிச்சுக்குமே! :) எப்படியோ...என்னவர் வைத்த புதினாதான் சூப்பரா வருது. நான் புதிதாக நட்டவை வெயில் தாங்காமல் வாடிப் போயின! அவ்வ்வ்வ்வ்வ்வ்!
    //அதைவிட கடையில் வாங்கி பாவிக்கலாம்..// அத்வும் சரிதான் அதிரா. சொந்த வீடா இருந்தா வாங்கி வளர்க்கலாம், இங்கே வேணாம் எனத்தான் எனக்கும் தோணுது.

    //ஆவ்வ்வ் நைஸ்.. ஐ வாண்ட் தயிர்ச் சாதம்:)..//எடுத்துக்குங்க. முழுதும் உங்களுக்கே! :)

    வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி அதிரா!
    ~~

    ReplyDelete
  19. சித்ராக்கா, //அதுக்காகத்தான் ரெண்டு ப்ளாஸ்டிக் தொட்டி வாங்கி நிறைய செடிகள் நட்டு வைத்தேன்.ஒரு வாரத்திலேயே செடிகள் காலி.மண் தொட்டியில் உள்ள செடிகள் சூப்பரா இருக்கு.// நம்ப மாட்டீங்க, என்னிடம் இருப்பது எல்லாமே ப்ளாஸ்டிக் தொட்டிதான்! :) செடி காலியானதுக்கு வேற ஏதும் காரணமா இருக்குமோ! இங்கே ப்ளாஸ்டிக் தொட்டியில் செடிகள் நல்லா வருதே.

    //வேர் பூச்சியா இருக்குமோ.மனசேயில்லாம, மண்ணையெல்லாம் ட்ரேஷ்ல கொட்டிட்டு மீண்டும் 10 கேலன் மண்ணு வாங்கி நட்டு வச்சிருக்கேன். // இருக்கலாம், அல்லது பாட்டிங் சாயில்ல ஏதும் பிரச்சனையா இருக்குமோ! என்னன்னு தெரியலையே! இந்த முறை எல்லாம் சரியாக வளரணும் என நானும் வேண்டிக்கறேன்.

    பை த வே, நீங்க செடிக்கு தண்ணி ஊத்தும்போதெல்லாம் அவங்களோட(செடிங்களோடதான்!:)) பேசுவீங்களா? பேசுங்க..இட் வொர்க்ஸ்!! அவங்க நம்ம சொல்றதை எல்லாம் கேப்பாங்க! :)) செடிகளுக்கு தண்ணீர் விட்டதும் கடைசியா இலைகள் மேலெல்லாம் மழை தூவற மாதிரி தண்ணீர் ஸ்பிரே பண்ண மறக்காதீங்க! இலையில் பூச்சிகள் வ்ந்தாலும் தண்ணீர் ஸ்ப்ரே செய்து கழுவிட்டா போயிரும்.
    ஆல் த பெஸ்ட்!

    //இப்போ சின்ன வெங்காயம் நிறைய கிடைக்கிறது.// இங்கயும் கிடைக்குது, ஆனா 200கிராம் $3!! டூ மச் இல்ல? ;)

    //இரண்டுமூன்று கேஸ் கறிவேப்பிலை பார்த்தேன். ஒரு lb $ 15 க்கு. இந்த வாரம் வேறொரு கடையில் அதே மாதிரி பார்த்தேன். ஒரு lb $ 25 க்கு.// ம்ம்..மொத்தமா வாங்கி காயவைச்சு வைச்சுப்பாங்களோ நம்ம மக்கள்? அல்லது ஹோட்டல் காரங்க வாங்குவாங்களா இருக்குமோ? அதான் முனியாண்டி விலாஸ்ல இருந்து சரவணபவான்;) வரை எல்ல்ல்ல்லா ரெஸ்டாரன்ஸும் இருக்கே உங்க ஊர்ல!! ஹஹஹாஹா! :)

    //தரையிலன்னா வேர்விட்டு நன்றாக வரும். தொட்டிக்குள்ளயே எவ்வளவுதான் வளர முடியும்.// வளர வளர கிள்ளிருங்க. பிறகு சில மாதங்கள் கழித்து ஃப்ரெஷ்ஷா வேற தொட்டில வளருங்கோ! :)

    //இப்படியான பல 'இல்லை'களை நோட் பண்ணிட்டேதான் வரேன். ஊரிலிருந்து ஆள் வந்ததும் முதல் வேலையா போட்டுக்கொடுத்திட வேண்டியதுதான்.// ஆத்தாடீ!! இப்பவே ரெடியாகிட்டீங்களா!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! :))))

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சித்ராக்கா! விரிவான கருத்துக்களைப் படிப்பதும், பதிலளிப்பதும் ஒரு சந்தோஷம். அதை தந்தமைக்கு நன்றி!
    ~~
    மீரா, காமெடி கீமடி பண்ணலயே நீங்க!! பெரிய கார்டன் எல்லாம் இல்லீங்க..சும்மா குட்டி பால்கனிதான்! :)
    மணத்தக்காளி இங்கே தானாகவே முளைச்சு கிடக்குது, அதிசயம்தான்! :) சென்னைல இருந்து விதை கொண்டு வந்து வளர்த்து பார்க்கலாமே நீங்க! இடமில்லைனா அதுவும் கடினம்தான்.

    ஜீனோ??? ப்ளான்ட் ஃப்ரெண்ட்லி??! ம்ம்ம்..அப்படியும் சொல்லிக்கலாம்! ஹி இஸ் ஜஸ்ட் லைக் எ பேபி..வாய்க்கெட்டினதை எல்லாம் விளையாட்டா கடிச்சு துப்புவார்! ;) வெந்தயக்கீரையை கடிச்சு போட்டு வைச்சார். இடம் மாத்தி வைச்சேன். இப்ப மிளகாய்ச் செடியில் இருக்க மிளகாயை டச் பண்ண டிரை பண்றார் மீரா! :) செடிகளை அப்படி கட் பண்ணி போடுவது ஐயாவுக்கு ஒரு விளையாட்டு! :)))
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    ஹேமா, ஆச்சரியம் ஆனால் உண்மை! அது மணத்தக்காளியேதான்! :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
    ~~

    ReplyDelete
  20. //கறிவேப்பிலைக் கன்று// looks well established & healthy. Will survive winter well.

    ReplyDelete
  21. மகி,
    உங்க பதிவை படிச்சிட்டு தான் எங்க பால்கனில ஒரு டேலியாவும், ரோஜா செடியும் வச்சிருக்கேன். இப்ப, புதினா, வெந்தயக்கீரை போட ஆசையா இருக்கு. ஆனா, குளிர்காலம் வரப்போகுது, வச்சாலும் வராதுன்னு பயமா இருக்கு. இப்ப போட்டா வருமா? நான் லண்டன்ல இருக்கேன்.

    அனிதா

    ReplyDelete
  22. இமா, நேற்று ஃபார்மர்ஸ் மார்க்கெட் போயிருந்(தேன்)தோம். கன்றுகள் ஆரோக்கியமாகத்தான் இருக்கு, ஆனால் அருண் வேண்டாம் என சொல்லிவிட்டார். பேக் யார்ட் இருக்க வீட்டுக்குப் போனபிறகு தோட்டம் போட்டுக்கலாம், இப்போ தொட்டியில் ஏன் வளர்த்து ரிஸ்க் எடுப்பானேன் என விட்டுவிட்டோம்! ;) :)
    நன்றி இமா!
    ~~
    அனிதா, லண்டன் வின்டர் பற்றி எனக்குத் தெரியலையேங்க!

    வெந்தயக் கீரை குளிர்காலத்தில் நன்றாக வரும் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நான் சொல்லும் குளிர், இந்தியக் குளிர் மற்றும் டிராபிகல் குளிர்! ஸ்னோ வரும் இடங்களில் எப்படி என தெரியலை. வெந்தயம் போலவே புதினாவும் இன் டோர் ப்ளான்ட்-ஆக வரலாம் என நினைக்கிறேன். நான் இதுவரை அப்படி செய்யலை, அதனால் உங்களுக்கு உறுதியான பதிலைச் சொல்ல முடியலை.

    உங்களுக்கு வீட்டுக்குள் நன்றாக வெயில் வரும் எனும் பட்சத்தில் கொஞ்சமா முயற்சித்துப் பாருங்க. வெயில் படும் இடங்களில் தொட்டிகளை அசங்காம நகர்த்தி வைச்சு, கவனமாப் பார்த்துக்குங்க. அதிகமாத் தண்ணீர் விடாம அளவாத் தண்ணீர் விடுங்க. ஆல் த பெஸ்ட்! :)

    ReplyDelete
  23. நன்றி மகி. எங்க வீடு Fully Carpeted. நான் செடி வளர்க்க கிளம்பினால் அதே கையோடு இந்தியாவிற்கு கிளம்ப வேண்டியது தான். அடுத்த கோடையில் முயற்தி பண்ணி பார்க்கிறேன்.

    அனிதா

    ReplyDelete
  24. இப்போதுதான் இந்தப் பதிவைப் பார்த்தேன்! தொட்டித்தோட்டம் போடுவதில் என் தங்கையாக இருக்கிறீர்கள்! யூஎஸ்ஸில் கறிவேப்பிலை வளர்ப்பது பற்றி எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். பிற இடங்களில் எப்படியோ தெரியாது; ஆனால் வட கலிஃபோர்னியாவில் (சான்ஃபிரான்ஸ்சிஸ்கோவைச் சுற்றிய Bay Area-வில்) கறிவேப்பிலை வளர்க்க முடியும். நான் தொட்டியில்தான் வளர்க்கிறேன். உங்கள் ஊரிலிருந்துதான் (ஆரஞ்சு county) ஒரு சின்னச் செடி கிடைத்தது பல ஆண்டுகளுக்கு முன். அது தொட்டியிலிருந்து தரைக்கு மாறிப் பிறகு தொட்டிக்கே போய்க் குட்டிக் குட்டிக் கன்றுகள் கொடுத்து ... இதுவரைக்கும் சுமார் 100 கன்றுகளாவது நண்பர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். உங்கள் ஊரில் வெயில் நல்லா இருக்குமே; அங்கே கறிவேப்பிலை வளர்க்கலாம். தொட்டியிலேயே வளர்க்கலாம். Whole Foods கடையில் கிடைக்கும் potting soil + compost போட்டு ஆரம்பியுங்கள். பிறகு வாராவாரம் டீத்தண்ணி ஊற்றினால் போதும், வேறு உரம் வேண்டாம். SFO பக்கம் வந்தீர்களென்றால் என் தொட்டிகளிலிருந்து ஒரு சின்ன கறிவேப்பிலைக் கன்று (சும்மா, விலைக்கில்லை) எடுத்துக்கொண்டு போகலாம். தனிமடலில் தொடர்புகொள்ளவும்.

    அரசமரத்தைச் சுற்றினவுடனே அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்துக் கொள்கிற மாதிரி, செடி வாங்கி வைத்தவுடனே இலை பறிக்கக் கூடாது! ;-)

    கறிவேப்பிலையைக் குழந்தைகளுக்கு உவமை சொல்லுவார்கள். இரண்டுமே நல்ல பராமரிப்பில் நல்லா வளரும். பொறுமை வேண்டும்! இன்னொன்று ... கறிவேப்பிலைச் செடி குளிரில் வாடும், ஆனால் சாகவே சாவாது. ஒடித்துவைத்த குச்சிகள் துளிர் விட்டு வர நாளாகும், ஆனாலும் வளர்ந்துவிடும். நம்பிக்கையோடு கறிவேப்பிலை வளர்க்கத் தொடங்கவும்!

    ReplyDelete
  25. ரசிகை, முதல் வருகைக்கும் கருத்துக்கு மிக்க நன்றிங்க! இவ்வளவு நாள் கழித்து இப்படி ஒரு தெளிவான விளக்கம் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை..இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்றே சொல்லலாம்! :)

    இங்கே எப்பொழுதாவது கோயிலில் கறிவேப்பிலைக் கன்றுகள் கொடுக்கிறார்கள் எனவும் கேள்விப்பட்டேன். (ஃபார்மர்ஸ் மார்க்கட்டில் ஒரு கன்று $25, வாரவாரம் நர்சரிக்காரர்கள் வந்துகொண்டுதான் இருக்கிறார்கள்! :)) மேலும் வீடும் அபார்ட்மெண்ட் ஆக இருப்பதால் யோசனையில் இருக்கிறோம்.

    Bay area பக்கம் இப்போது வருவோமா என்பது சந்தேகம்தான்! வந்தால் கட்டாயம் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். கரும்பு தின்ன கூலி வேறு வேண்டுமா என்ன? :)))

    //கறிவேப்பிலையைக் குழந்தைகளுக்கு உவமை சொல்லுவார்கள். இரண்டுமே நல்ல பராமரிப்பில் நல்லா வளரும். பொறுமை வேண்டும்!// ஆஹா!! :) நல்ல உவமைதான் போங்க! எனக்கு கொஞ்சம் பொறுமை உண்டு என்றே நினைக்கிறேன், விரைவில் அதை சோதித்துப் பார்த்துவிடுகிறேன். ஹஹா!

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மீண்டும் நன்றிங்க!

    ReplyDelete
  26. இந்த பதிவெல்லாம் எப்படி மிஸ் பண்ணிருக்கேன் பாருங்க! கன்சாஸ் ஸ்டேட்-ல வீட்டுக்கு பின்னாடியே சிலர் கறிவேப்பிலை மரம் வச்சிருப்பாங்களாம் !!! ச லக்கி -ல..... ஹே கறிவேப்பிலை காய் நட்டு வச்சா செடி வருமா?

    எங்க அம்மா-க்கு தோட்டம் வைக்க ரொம்ப ஆசை. வீட்ல சும்மா பிரண்டை, தூதுவளை, சுகர்-பிளான்ட் இந்த மாதிரி சின்ன சின்ன செடிஸ் இருக்கு.

    ReplyDelete
  27. //கறிவேப்பிலை காய் நட்டு வச்சா செடி வருமா? // :) என்னையப் பாத்து இப்புடி டெக்னிகல் கொஸ்டின் எல்லாம் கேட்டா எப்புடி? ;) வரலாம், ஆனா அது ரொம்ப ரேர் கேஸா இருக்கும்னு நினைக்கிறேன் மீனாக்‌ஷி! ஏனா கறிவேப்பிலைக் கன்று வாங்கி வளர்த்தறதே குழந்தைய வளர்த்தற மாதிரின்னு ஒரு அக்கா மேலே கமெண்ட்டில சொல்லிருக்காங்க பாருங்க, இதில விதைபோட்டு முளைக்க வைக்கிறது கொஞ்சம் கஷ்டம்னுதான் தோணுது!

    ஊரில எங்க வீட்டிலும் சில செடிகள் வைச்சிருந்தோம், இப்ப கொஞ்சம் தோட்டம் போட இடமிருக்க மாதிரி வீட்டுக்கு மாறீருக்காங்க. நெக்ஸ்ட் டைம் ஊருக்கு போறப்ப ஒரு வழி பண்ணிட்டு வரப்போறேன் அம்மா வீட்ட! ;)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மீனாக்‌ஷி!

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails