Friday, August 9, 2013

தொட்டியில் கேரட் வளர்ப்பு-How to Grow carrots in pots?

கேரட் விதைத்து, வளர்த்து, பறித்து சமைத்துச் சாப்பிட்டு மாதமொன்றும் ஆகிவிட்டது, இன்னும் சில நாட்கள் விட்டால் எனக்கே கேரட் அறுவடை பற்றி எழுத ஆர்வம் குறைந்துவிடும் என்று அச்சம் ஏற்படுவதால், கையோடு கேரட்டை கொண்டுவந்துட்டேன். நீங்களும் முயல் போல:) ஆர்வமாக தாவிவந்து பதிவைப் படிப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு ஆரம்பிக்கிறேன். :)))

ஒருமுறை இணையத்தில் உலவுகையில் "growing carrots in pots" என்ற ஒரு வீடியோவைப் பார்த்தேன். பொதுவாக கேரட் மண்ணில்தானே வளர்ப்பார்கள், இது இன்ட்ரஸ்டிங்-ஆக இருக்கிறதே என்று பார்த்துவிட்டு, கடைக்குப் போனபோது மறக்காமல் ஒரு பேக்கட் கேரட் விதைகள் வாங்கிவந்தேன்.  
கடுகு அளவிற்கு சிறிய விதைகளாகத்தான் இருந்தன கேரட் விதைகள். தொட்டியில் கேரட் வளர இடம் வேண்டும் என்று அளவாக 5 இடத்தில் இரண்டு-மூன்று விதைகளாகத் தூவி விட்டேன். பார்த்துப் பார்த்து தண்ணீர் விட்டாலும் இரண்டு வாரங்கள் தொட்டி அமைதியாகவே இருந்தது. சரி, நம் கேரட் கனவு அவ்வளவுதான் என மனதைத் தேற்றிக் கொண்ட வேளையில், கேரட் விதைகள் முளைக்க ஆரம்பித்தன. :)

இது மே கடைசியில் எடுத்த படம்..
இது ஜூன் மாதம் இரண்டாவது வாரம் போல எடுத்த படம்..
முளைத்த விதைகள் எல்லாம் ஓரளவு உயிர் பிடித்து வளர ஆரம்பித்திருந்தன. ஒரு செடி மட்டும் நல்ல செழிப்பாகவும் மற்றவை கொஞ்சம் சுமாராகவும் வளர்ந்துகொண்டிருந்தன. பேக்கட்டில் கேரட் விதைத்து 68 நாட்களில் அறுவடை செய்யலாம் என சொல்லியிருந்தார்கள். நானும் நாட்களை எண்ணிக்கொண்டு காத்திருந்தேன். 68 நாட்களும் ஆனது, அப்போது மனக்குரங்கு கொஞ்சம் மக்கர் பண்ணி, இன்னும் சில நாட்கள் விடுவோமே, கேரட் நல்லா முற்றி வரும் என்று சொல்ல...இன்னுமொருவாரம் விட்டேன். :) 
75நாட்கள் ஆயின. அதற்குமேல் பொறுமை இல்லாமல் கேரட் அறுவைடையை ஒரு ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் தொடங்கினேன். தொட்டியில் மண் ஈரமாகவே இருந்ததால் கேரட்டை பறிப்பது மிகச் சுலபமாகவே இருந்தது. ஒரு செடி என நினைத்த செடிகளில் எல்லாம் 2-3 கேரட் விதைகள் விழுந்து விளைந்திருந்தன. :) 
ஒருவழியாக எல்லாக் கேரட்டையும் பறித்தாயிற்று. எனது உதவியாளர் ஆர்வமாக வந்து இது என்னது? என்று எட்டிப் பார்க்கிறார்.  ஜீனோவுக்கு பேபி கேரட்ஸ் பிடிக்கும். ஆர்வமாக சாப்பிடுவார். ;) 
எப்படிங்க எங்க வீட்டு கேரட் விளைச்சல்? 
முதலுக்கு மோசமில்லை எனும் அளவிற்கு கேரட்டுகள் விளைந்திருந்தன. இன்னும் கொஞ்சம் பெரிய தொட்டியில் கவனமாக நட்டிருந்தால் இன்னும் பெரியவையாக வந்திருக்கும் என நினைக்கிறேன். பறித்த கேரட்டுகளை மண் போக அலசி, ஆசை தீர படமும் பிடிச்சுட்டு, ஊட்டியில் கேரட் செடியுடன் வாங்கி சாப்பிடும் ஃபீலிங்கோடு ஒரு கேரட்டை எடுத்து கடித்தேன். ஆனால், இந்த கேரட் அவ்வளவாக  இனிப்பில்லை!!  விதைகள் வாங்கும்போது இருந்த பலவகை பேக்கட்களில் கைக்கு சிக்கிய ஒரு பேக்கட்டை எடுத்திருக்கிறேன், இந்த வகை கேரட்டில் இனிப்பு இருக்காது போலும். அல்லது தொட்டியில் வளர்த்ததால் இனிப்பில்லையா? தெரியவில்லை!!

சரி போகட்டும் என கேரட்டை சமையலுக்கு உபயோகிப்போம் என சேமியா உப்மாவில் ஒரு கேரட்டை நறுக்கி சேர்த்தேன்.

கேரட் வெந்ததும்  ஆரஞ்ச் நிறமில்லாமல் மஞ்சள் நிறமாக ஆகியிருந்தது!! ;))))  ஆச்சரியமான அனுபவம்தான்!! :) 



ஒன்றாக இருந்த செடிகளில் இருந்த பேபி கேரட் ஒன்று!!
அடுத்த முறை மீதமிருந்த எல்லா கேரட்களையும் துருவி கேரட் சாதம் செய்வோம் என செய்தேன். அருமையாக இருந்தது. 
ஆகமொத்தம் இந்தப் பதிவின் நோக்கம், தொட்டியிலும் வெற்றிகரமாக கேரட் வளர்க்கலாம் என தமிழ் கூறும் நல்லுலகிற்கு தெரிவிப்பதே! தரமான, இனிப்பான கேரட் விதைகளை வாங்குங்கள், ஆழமான, அகலமான தொட்டிகளில் விதைத்தால் தாராளமாக நம்ம வீட்டில் வளர்ந்த கேரட்டைச் சுவைக்கலாம்! அதுக்கு நான் கேரண்டி!
:) 

19 comments:

  1. நல்ல பகிர்வு,கேரட் சாதம் அருமையா இருக்கு.

    ReplyDelete
  2. அட நல்லாயிருக்கே !

    ReplyDelete
  3. it is a amazing feeling when we grow vegetables in our garden.i enjoyed this post.thanks for sharing.

    ReplyDelete
  4. "நீங்களும் முயல் போல:) ஆர்வமாக தாவிவந்து" _____வந்தாச்சு, ஆனால் இதுல கேரட் எது?, விரல் எது?னு ஒரே குழப்பமா இருக்கு.

    "ஊட்டியில் கேரட் செடியுடன் வாங்கி சாப்பிடும் ஃபீலிங்கோடு ஒரு கேரட்டை எடுத்து கடித்தேன்" ________ நான் ஊட்டிப் பக்கமெல்லாம் போனதில்லை. இங்கு வந்துதான் செடியுடனான கேரட்டை முதலில் பார்த்தேன்.

    மண்ணின் தன்மைக்கேற்பவும் காய்களின் சுவை மாறுபடும். உங்க உதவியாளார் நோட்டமிடும் மண்ணுடன் உள்ள ஃப்ரெஷ் கேரட் சூப்பர். என்னக்காச்சும் கேரட் வளர்ப்ப‌தாக இருந்தால் இந்தப் பக்கம் வருவேன்.

    ReplyDelete
  5. ஆஹா.. என்ன அழகு.. எத்தனை அழகு... மீ ஜீனோவைச் சொல்லவில்லையாக்கும்:)).. பிறகு அவர் ஷை ஆகி முகம் காட்டாமல் விட்டிடுவார்:)).

    மகி நானும் கார் டயர் வாங்கி அதனுள் மண் போட்டு கரட், பீட்ரூட் செய்தேன்.. உதேபோலவே மெல்லிய வெள்ளைப் பொம்பிளையாகத்தான் எனக்கும் வந்துது.. இம்முறை ஏதும் செய்யவில்லை.. இதெல்லாம் கடந்தகால நினைவுகள்...

    ReplyDelete
  6. கரட் விதைகளை நேரடியாக போடாமல். முதலில் ஜனவரியிலயே வீட்டுக்குள் குட்டிக் குட்டிப் பொட்ஸ் விக்குதே பதிவிட என. அவை வாங்கி அவற்றில் போட்டு கன்றுகளாக்குப் போட்டு.. பின்பு மார்ச்சுக்கு வெளியே நடலாம்.. அப்படித்தான் மீ செய்தேன்.

    இன்னுமொன்று கரட் இலைகளை.. குட்டியாக அரிந்து,வறை செய்யுங்கள் சூப்பரோ சூப்பர்.

    ReplyDelete
  7. காரட் வலர்ப்பு பர்ரி அரிந்து கொண்டென். காரட் சாதம் செய்திருக்கிறீர்களே, தித்திக்காதோ.....

    ReplyDelete
  8. Super. Thanks for the info. My husband too watched your photos and telling me that we should grow carrots too. I will definitely buy sweet carrot seeds.

    ReplyDelete
  9. தொட்டியிலும் வெற்றிகரமாக கேரட் வளர்க்கலாம்
    என அருமையான பதிவாக்கியதற்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  10. மகி ம்ம்ம்ம் கலக்கிறீங்க ..... கேரட் மிகவும் அருமையாக விளைந்துள்ளது....நல்ல பதிவு .....

    ReplyDelete
  11. very nice.. and they have grown nicely... so fresh...

    ReplyDelete
  12. காரட் அருமையா வளர்ந்திருக்கு. நல்ல விளைச்சல் இருந்தா அல்வா செஞ்சு அனுப்புங்க :-)

    ReplyDelete
  13. @மேனகா, நன்றி!
    ~~
    @கே.பி.ஜனா சார், நன்றிங்க!
    ~~
    @மீனா, ஆமாங்க, விதை போட்டு செடியாக்கி, காயும் பறிக்கையில் அலாதி சந்தோஷம்தான்! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    @//ஆனால் இதுல கேரட் எது?, விரல் எது?னு ஒரே குழப்பமா இருக்கு.//ஆஹா!! அப்படியே இமயமலையவே அலேக்கா தூக்கி என் தலைல வைச்ச மாதிரி இருக்கு! ஹிஹ்ஹிஹி! :) தேங்க்யூ!

    //நான் ஊட்டிப் பக்கமெல்லாம் போனதில்லை. இங்கு வந்துதான் செடியுடனான கேரட்டை முதலில் பார்த்தேன். //ஓ!! ஊட்டி-கொடைக்கானல் போகும் வழியிலேயே இப்படி ஃப்ரெஷ் கேரட்ஸ், சுட்ட மக்காச்சோளம் எல்லாம் விற்பாங்க. சூப்பரா இருக்கும்.

    //மண்ணின் தன்மைக்கேற்பவும் காய்களின் சுவை மாறுபடும்.//இருக்கலாம், அதான் நெக்ஸ்ட் பாட்ச் கேரட் போடலை, ப்ரேக் விட்டுட்டேன். :) நீங்களும் விரைவில் தோட்டம் போட வாழ்த்துக்கள்!
    நன்றி அக்கா!
    ~~
    @அதிராவ், வெல்கம் பக்!!!!! :))
    //மீ ஜீனோவைச் சொல்லவில்லையாக்கும்:)).. பிறகு அவர் ஷை ஆகி முகம் காட்டாமல் விட்டிடுவார்:)).// நீங்க ஓராள்தான் ஜீனோவை கரெக்டா புரிஞ்சு வைச்சிருக்கேள்! :)

    //உதேபோலவே மெல்லிய வெள்ளைப் பொம்பிளையாகத்தான் எனக்கும் வந்துது.. //ஓ! அப்ப க்ளைமேட், மண் இவை எல்லாமே க்ரூஷியல் ஃபேக்டர்ஸா இருக்கும் போலிருக்கு. நானும் ஆசைக்கு ஒரு முறை வளர்த்தேன் அதிரா. இனி அடுத்த முறை...ம்ம், பார்ப்போம்!

    //கரட் விதைகளை நேரடியாக போடாமல். முதலில் ஜனவரியிலயே வீட்டுக்குள் குட்டிக் குட்டிப் பொட்ஸ் //இதெல்லாம் ப்ளான் பண்ணி கார்டனிங் பண்ணுவோருக்கு! நான் போறபோக்கில கேரட் விதைச்சு வளர்த்தேன் அதிரா! பொதுவா காய்கறி வளர்ப்பதை விட பூக்கள் வளர்க்கவே எனக்கு விருப்பம். அதனால் குட்டி பொட்ஸ் எல்லாம் வாங்கறதில்லை! மோர் ஓவர், நாற்றுக்களாக வாங்கி வளர்ப்பது விதையில் இருந்து வளர்ப்பதை விட சுலபமாக தெரிகிறது! :)

    //கரட் இலைகளை.. குட்டியாக அரிந்து,வறை செய்யுங்கள் சூப்பரோ சூப்பர்.// அடடே..மிஸ் பண்ணிட்டேனே! அவ்வ்வ்வ்வ்!

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி மிஸ்.மியாவ்!
    ~~
    @ராஜி மேடம், //காரட் சாதம் செய்திருக்கிறீர்களே, தித்திக்காதோ....// நீங்க பதிவை சரியாப் படிக்கலை என நினைக்கீறேன், நான் வளர்த்த கேரட் இனிப்பில்லாமதான் வந்திருந்தது. :)

    வெ.கீரை கசக்கதா என்கிறீங்க, கேரட் தித்திக்காதா என்கிறீங்க, நிஜமாவே நீங்க இதெல்லாம் சமைத்ததில்லையா? இல்ல என்னை கலாய்க்கறீங்களா? :) கேரட் இனித்தாலும் நாம் சேர்க்கும் மற்ற பொருட்கள் தித்திப்பை பேலன்ஸ் செய்துரும். டிரை பண்ணீப் பாருங்களேன்!
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்!
    ~~
    @வானதி, சீக்கிரம் கேரட் வளர்த்து பதிவு போடுங்க. உங்க தோட்டத்தைப் பார்த்து பலநாளாச்சு. லான் சவுக்கியமா இருக்கா? :)
    நன்றி வானதி, ஸ்பெஷல் தேங்க்ஸ் டு ரவி சார்! :)
    ~~
    @இராஜேஸ்வரி மேடம், நன்றிங்க!
    ~~
    @விஜி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
    ~~
    @அகிலா, இன்னும் பெரிய தொட்டில வைச்சிருக்கணுமோ என யோசிக்கிறேன். இருந்தாலும் ஏமாற்றமில்லாமல் வந்திருக்குங்க. :)
    நன்றி!
    ~~
    @சாந்தி அக்கா, எல்லாருக்கும் ஹல்வா குடுக்கச் சொல்றீங்களா? இதுக்காகவே அடுத்த பட்டம் கேரட் விதைச்சிருவேன். ஹஹாஆ! :)
    வருகைக்கும் கருத்துக்கும்நன்றி!
    ~~

    ReplyDelete
  14. m.. ஆமை போல ;) வந்திருக்கிறேன்.
    இலையை மிஸ் பண்ணீட்டீங்கள் மகி. ;(

    ReplyDelete
  15. // ஆமை போல ;) வந்திருக்கிறேன். // நீங்க முயல் போல வராம முயன்று ஆமை போல வந்தாலும் சந்தோஷமே! அடுத்து இலை பறிப்பதற்கும், எல்லாருக்கும் அல்வா குடுப்பதற்குமாகவே கேரட் வளர்க்கலாமான்னு சீரியஸா திங்க் பண்ணிட்டு இருக்கேன், ஷெராட்டன்ல ரூம் போட்டு! ;))))

    நன்றி இமா!

    ReplyDelete
  16. மகி நீங்க வளர்த்த புதினாவைப்பார்த்துதான் நானும் வளர்த்தேன்.இப்ப நன்றாக பிரயோசனப்படுது.அதேமாதிரி மல்லி.ஆனா வெந்தயம் சொதப்பிட்டுது.உங்க காரட் பார்க்க நன்றாக இருக்கு.சூப்பர் விளைச்சல். ஜீனோவும் மிக ஆர்வமா பார்க்கிறார்.காரட் அல்வா செய்முறையும் தருவீங்களா. லேட்டா வந்ததற்கு மன்னிக்க. இப்பதான் ஹொலிடே முடிந்து(டூர்) வந்தோம்.நன்றி.

    ReplyDelete
  17. http://blogintamil.blogspot.co.uk/2014/05/blog-post.html
    உங்களுடைய இந்த பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கேன்

    ReplyDelete
  18. அம்முலு, இப்பதான் உங்க கருத்தைப் பார்க்கீறேன்.தாமதமான நன்றிகள்! :)
    ~~
    ஏஞ்சல் அக்கா, பகிர்வுக்கு மிக்க மிக்க நன்றிகள்!

    ReplyDelete
  19. I have planted round carrots this time. Just for leaves for my bunnies. :-) It I get lots of leaves I will make 'vaRai'.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails