
எங்க வீட்டில் இருந்து ஜஸ்ட் 10 மைல் தொலைவில் இருக்கும் ஒரு சனீஸ்..ச்சீ,வாய் குழறுதே, சைனீஸ் மார்க்கெட் போனதும், அங்கே வாங்கிய பொருட்களும், அதை வைச்சு நான் சமைச்ச ரெசிப்பிகளும் பற்றிய ஒரு முன்னோட்டம் தாங்க இந்தப் பதிவு.
இந்த 99 Ranch Market என்னவரின் அலுவலகம் போகும் வழியிலேதான் இருக்கிறது. வாரம் 5 நாட்கள் அதே டைரக்ஷனில் போவதாலோ என்னவோ, வீகென்ட் ஆனால் அங்கே ஷாப்பிங் என்றால் எதையாவது சொல்லி தட்டிக் கழிச்சிருவார். கூடவே அங்கே இருக்கும் பிரத்யேகமான வாசனை(!)யும் அந்தக் கடையை அவாய்ட் பண்ண வலு சேர்க்கும் காரணமாகிவிடும். இந்தக் கோடையில் ஒரு முறையாவது போய் பலாப் பழம் வாங்கிவரவேண்டும் என்று பலநாள் திட்டமிட்டு(!) ஒரு நாள் வெற்றிகரமா போயிட்டு வந்துட்டோம். அந்தக் கொலாஜ் தான் முதல் படத்தில் நீங்க பார்ப்பது.

~~~~~~
இன்றைய பதிவில், "ஸ்டார் ஆஃப் தி போஸ்ட்"! :)
பழங்களின் அரசன் பலா!
பழங்களின் அரசன் பலா!

உடனடியாக என்னவரிடம் இருந்து ஐ-ஃபோனைப் புடுங்கி ஆசைதீர படம் பிடித்தபிறகு மெதுவா பக்கத்தால போய்ப் பார்த்தேன். ரெண்டு துண்டு நறுக்கி வைச்சிருந்தாங்க, மத்த பழம்லாம் முழுசு! நறுக்கிய 2 துண்டுமே அழுகிப் போயிருந்தது! பொக்குன்னு போச்சு எனக்கு. அப்புறம் அங்க இங்க தேடி, மார்க்கட்டில் வேலை செய்யும் ஆளை தேடிப் பிடித்து, புதுசா பலாபழம் வெட்டிக் குடுங்க என்று கூட்டிவந்தேன், அதற்குள் அங்கே புதிதாய் வெட்டிய பழத்துண்டுகள் ரெண்டு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டியது! நான் அங்கிட்டுப் போய் இந்த ஆளைக் கூட்டிட்டு வரதுக்குள்ள புதுசா கட் பண்ணி வைச்சிருக்காங்க... கர்ர்ர்ர்ர்ர்! என் பேச்சைக் கேட்டு, கைவேலையை விட்டுட்டு, பலாப்பழம் நறுக்கித்தர வந்த ஆளிடம் கொஞ்சம் அசடு வழிஞ்சுட்டு, பழத்தை எடுத்து கார்ட்-ல வைச்சுகிட்டு நடையக் கட்டினேன்! :)))
பலாச்சுளைகள் நிறையஇருந்தால் வெல்லம் சேர்த்து வதக்கி வைப்பது/ பாயசம் செய்வதும் எப்பவாவது நடக்கும். பலாக்கொட்டையை விறகடுப்பில் வேகப்போட்டு சாப்பிட்டா ஜூப்பரா இருக்கும்! பலா சீசனில் கடைகளில்/சந்தையில் கொட்டைகள் மட்டுமே கூட தனியா விற்பாங்க..50, 100 என்று எண்ணிக் குடுப்பாங்க. இங்கே பலாப் பழம் எப்படி இருக்குமோ என்று டவுட்டிலயே வாங்கினோம், ஆனா சும்மா சொல்லக்கூடாதுங்க..தேன் போல சுவைம்பாங்களே,அப்படி ஒரு இனிப்பு! :P
இந்த முறை பழத்தைப் பிரித்து எடுக்கையில் என்னவர் சொன்னார், "என்ன மாதிரி ஒரு பாதுக்காப்பான பெட்டகத்துக்குள்ளே இவ்வளவு இனிப்பான பழத்தை வைத்திருக்கு இந்த இயற்கை..முள்ளு முள்ளா இருக்கும் பழத்தைப் பிரிக்கணும், அதிலும் பிசின் போலே ஒட்டும் பாலுடன் போராடி! சுளைகளை எடுத்தாலும் உடனே சாப்பிட முடியாது..உள்ளே இருக்கும் கொட்டை, அதைச் சுற்றி இருக்கும் மாசு ..இதையெல்லாம் பொறுமையா எடுக்கணும்! அப்புறம்தான் சாப்பிடமுடியும்! மனிதர்களைத் தவிர வேறு யாருமே இந்தப் பழத்தை ருசிக்க முடியாது"என்று! இல்லையே, நம்ம முன்னோர்கள் ருசித்திருக்காங்க என்று சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறார். நீங்க நம்புறீங்களா?
எதுவுமே சுலபமாக் கிடைச்சுட்டா அதன் அருமை தெரியாது இல்லையா? அதனாலதான் கஷ்டப்பட்டு சாப்பிடணும் என்று இப்படி ஒரு பழமும் படைக்கப்பட்டிருக்கிறது போலும்! சரிவிடுங்க, ரொம்ப பேசிப்போட்டன், 2 பலாச்சுளை சாப்டுட்டுப் போங்க! :)))