Thursday, February 7, 2019

புளிக்காய்ச்சல் & புளி சாதம்

தேவையான பொருட்கள் 
புளி - பெரிய ஆரஞ்சுபழம் அளவு 
 வறுத்த வேர்க்கடலை - 1/4கப் 
கடுகு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை 
கடலைப்பருப்பு -1டேபிள்ஸ்பூன்
உளுந்துபருப்பு -1 டேபிள்ஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1/2டீஸ்பூன் 
வரமிளகாய் -2 
நல்லெண்ணெய் 
வெல்லம் - சிறுதுண்டு
உப்பு 
வறுத்து பொடிக்க
கொத்துமல்லி விதை/தனியா - 1டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் -3 (காரத்துக்கேற்ப) 
வெந்தயம் - 1டீஸ்பூன்

செய்முறை 
கடாயில் கொஞ்சமாக எண்ணெய் காயவைத்து கொத்துமல்லி விதை, மிளகாய், வெந்தயம் இவற்றை தனித்தனியே (கருகாமல்) வறுத்து ஆறவைத்து கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.
புளியை ஒண்ணரை கப் தண்ணீர் விட்டு குக்கரில் ஒரு விசில் விட்டு ஆறவைத்து கெட்டியான புளிக்கரைசல் (சுமார் 2 கப்) எடுத்துக்கொள்ளவும். 

அகலமான வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காயவைக்கவும். (புளிக்காய்ச்சல் நாள்பட வைத்து உபயோகிக்க நிறைய எண்ணெய் விட்டால் நன்றாக இருக்கும். உங்க விருப்பப்படி எண்ணெய் ஊற்றிக்கலாம், மினிமம் ஒரு 4 டேபிள்ஸ்பூனாவது உபயோகித்தால் நன்று)

எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்து,  கறிவேப்பிலை சேர்த்து வரமிளகாய்களை ஒடித்துப்போட்டு வறுக்கவும். பிறகு க.பருப்பு, உ.பருப்பு, வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

கெட்டியான புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வருகையில் கொஞ்சம் வெல்லம் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். (புளி ஏற்கனவே குக்கரில்  வேகவத்ததால் சீக்கிரம் கொதித்து எண்ணெய் பிரிந்துவிடும்.)

நன்றாக ஆறியதும் காற்று புகாத டப்பாவில் எடுத்து வைத்தால் வாரம், பத்துநாட்களுக்கு மேலாகவே நன்றாக இருக்கும். அல்லது குளிர்சாதனப்பெட்டியில் வைத்தும் உபயோகிக்கலாம்.
உதிரியாக வடித்த சாதத்துடன் தேவையான அளவு புளிக்காய்ச்சலை கலந்தால் சுவையான புளிசாதம் தயார். சிம்பிளா ஒரு உருளை வறுவல், அல்லது தேங்காய்த்துண்டுகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும். 

பின்குறிப்பு 
பொதுவாக எங்க வீடுகளில் புளி சாதம் வெங்காயம் போட்டுதாந் செய்வோம். எங்காவது பயணம் போகையில் முதல் நாள் இரவே இப்படி புளிக்காய்ச்சல் செய்து சாதமும் செய்து கலந்து வைத்துவிடுவோம். காலையில் நேரத்தில் கிளம்பி இதை எடுத்துப்போக சுலபமாக இருக்கும். மற்றபடி புளிக்காய்ச்சலை செய்து சில நாட்கள் வைத்து அவ்வப்போது புளி சாதம் கலப்பதெல்லாம் இல்லை..சில நேரங்களில் மீதமாகும் சாதத்துக்கு புளிக்கரைசலைப் பிரட்டி வைத்து அடுத்த நாள் காலையில் வெங்காயம் மிளகாய் மற்றும் இன்ன பிற வகைகளுடன் தாளித்து சூடாகச் சாப்பிடுவதும் உண்டு. சில நாட்கள் முன்பு தோழிகளுடன் பேசுகையில்(வாட்ஸாப்-புகையில் என்று படிக்கவும் ;)) இந்த புளிசாதம் விவகாரம் வந்தது...எல்லாரும் " என்ன...புளி சாதத்தில் வெங்காயமா? " என்று மூக்கில் விரலை வைத்தார்கள். சரி..ஒரு முறை வெங்காயம் இல்லாமல் செய்து பார்ப்போம் என்று முயற்சித்தது இது. தோழி ஒருவர் யூடியூப் லிங்க் கொடுத்தார்..அந்த லிங்க் பார்த்து செய்ததுதான் இந்த புளிக்காய்ச்சல் & புளிச்சாதம். தேங்க்யூ காயத்ரி!! :)) 
புளியை குக்கரில் வேகவிடுவதும் யுடியூபில் இன்னொரு வீடியோவில் பார்த்ததுதான். 

என்னிடம் இருக்கும் வரமிளகாய் கொஞ்சம் டூமச் காரம்..மொத்தமாகவே 5 மிளகாய் (பொடிக்க 3, தாளிக்க 2) மட்டுமே சேர்த்தும் காரம் கொஞ்சம் தூக்கலாக இருந்தது. உப்புமா, தோசை, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிடவும் ரொம்ப சூப்பராக இருந்தது. நீங்களும் செய்து பாருங்க.  நன்றி! 

14 comments:

  1. //உப்புமா, தோசை, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிடவும்// ம், அப்போ செய்து வைக்கலாம்.

    படம் எல்லாம் பார்க்க நா ஊறுது. இப்ப ப்ளாக் புகை! :-)

    ReplyDelete
    Replies
    1. :) செய்து பாருங்கோ!! நன்றி!

      Delete
  2. Thanks Mahi for the credits :-) Pulikachal arumaiya vandhurukku

    ReplyDelete
  3. விளக்கமான குறிப்புகளுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி அண்ணா!

      Delete
  4. பார்க்கும் போது இப்பவே செய்யனும் ஆசையை தூண்டுகிறது...அருமை ..

    வறுத்து பொடிப்பதில் கொஞ்சமா மிளகு சேர்ப்போம் நாங்க..

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை மிளகும் சேர்த்துட்டா போச்சு! :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனு!

      Delete
  5. சாதாரணமா புளி கொதிநீரில்தான் ஊறவிடுவேன். குக்கரில் வேகவிடுவது புதுசு. எனக்கும் படம் பார்க்க நா ஊறுது.

    ReplyDelete
    Replies
    1. அவசரமா செய்யறதுனா சுடுநீரில் ஊறவைப்பேன்..இல்லன்னா நார்மல் தண்ணில தான்!! குக்கரில நல்லா வெந்துடுது அம்முலு..டிரை பண்ணி பாருங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

      Delete
  6. நல்லாருக்கு ரெசிப்பி. நானும் புளியை குக்கரில் வேக விட்டுச் செய்வது வழக்கம்.

    மிள்காயை நல்ல சிவக்க அதாவது கறுப்பு நிறமாக மாறும் சமயம் தான் கடுகு தாளிப்பது அந்த மிளகாய்தான் புளிக்காய்ச்சலுக்கு டேஸ்ட் கொடுக்கும் என்பதால்

    நான் தனியா சேர்ப்பதில்லை. திருநெல்வேலி முறையில் செய்வது வழக்கம். ஆனால் மாமியார் வீட்டில் தனியா அண்ட் மிளகும் சேர்ப்பாங்க வறுக்கும் பொடியில். அப்படியும் செய்திருக்கேன் என்றாலும் பொதுவாக நான் சேர்ப்பதில்லை.

    அப்புறம் புளிக்காய்ச்சல் செய்யும் போது என் பாட்டி தாளிப்பது செய்தாலும் தாளிக்கும் பருப்பு மிளகாய் இவற்றில் பாதியை எடுத்து வறுத்து பொடி செய்து கொண்டு விட்டு கடைசியில் சேர்ப்பது வழக்கம். ஸோ புளிக்காய்ச்சல் கொஞ்சம் காணும்படி அதாவது கொஞ்சம் கூடுதலாக வரும் என்று.

    வெந்தயத்தையும் பெருங்காயத்தையும் எண்ணை விடாமல் வறுத்து பொடி செய்து கடைசியில் பொடித்துப் போட்டு நல்ல ஃப்ளேவர் வரும் வரை கிளறி இறக்குவோம்...

    புளியோதரைக்கு வெந்தயம் பெருங்காயம் ஃப்ளேவர் முக்கியம் என்பதால்...

    உங்கள் செய்முறை ரெசிப்பி குறிப்புகள் எல்லாம் அருமை மகி

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...விளக்கமா கருத்து சொல்லிருக்கீங்க கீதாக்கா...நன்றி! :) :) நான் பொதுவா பொடி எதுவுமே சேர்க்கமாட்டேன்..கூடவே பூண்டு, வெங்காயமும் சேர்த்துத்தான் செய்வோம். உங்க டிப்ஸ் எல்லாம் செய்து பார்க்கிறேன்..என்ன ஒண்ணு..வருஷத்துக்கு ஒரு முறை தான் மனசு வந்து புளிக்காய்ச்சலே செய்வேன்..அவ்வளவு சோம்பேறி..ஹிஹி...!!

      Delete
    2. //புளி சாதம் வெங்காயம் போட்டுதாந் செய்வோம்// - பூண்டு, வெங்காயமும் சேர்த்துத்தான் செய்வோம்//

      என்னாது? புளிசாதமா இல்லை புலாவா?

      Delete
    3. புளி புலாவ்- ந்னு வேணா பேர் வைச்சுக்கலாங்க!! :) எங்க வீட்டு வழக்கம் இப்படித்தான்..இப்போ வேற மாதிரி நான் செய்து பார்க்கிறேன்..நீங்க ஒரு சேஞ்சுக்கு வெங்காயம் பூண்டு சேர்த்து புளிசாதம் செய்து பாருங்களேன்.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! :)

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails