Showing posts with label குழம்பு. Show all posts
Showing posts with label குழம்பு. Show all posts

Thursday, October 6, 2016

அப்பளாம் போட்ட வத்தக்குழம்பு

தேவையான பொருட்கள் 
சுண்டக்காய் வத்தல் (அ) மணத்தக்காளி வற்றல் - கொஞ்சம் 
உளுந்து அப்பளாம்/அப்பளம் - 2 (அ) 3 
நறுக்கிய வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன் (அ) சின்னவெங்காயம் - 7 
புளி - எலுமிச்சை அளவு 
நசுக்கிய பூண்டு - 4 பற்கள் 
கறிவேப்பிலை கொஞ்சம்
வரமிளகாய் -1
வெந்தயம் -1 டீஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன் 
சாம்பார் பொடி -1 டீஸ்பூன்
ரசப்பொடி - 1 டீஸ்பூன் 
மல்லித்தூள் - 1டீஸ்பூன் 
பருப்பு பொடி -1 டீஸ்பூன் (நான் சேர்க்கவில்லை) 
அரிசிமாவு -1டீஸ்பூன் 
உப்பு 
சர்க்கரை அல்லது வெல்லம் - கொஞ்சம் 
நல்லெண்ணெய் 

செய்முறை 
வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். புளியை ஊறவைத்து நீர்க்க கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் நல்லெண்ணெய் காயவைத்து வத்தலை பொரித்து, தனியாக எடுத்து வைக்கவும்.
அதே எண்ணெயில் கடுகு தாளித்து, வெந்தயம் சேர்த்து கருகாமல் சிவக்க வறுத்ததும் க.பருப்பு -உ.பருப்பு சேர்க்கவும். 
அப்பளத்தை சிறு துண்டுகளாக உடைத்து சேர்க்கவும்.
அப்பளம் பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு,  உடைத்த மிளகாய் வத்தல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சாம்பார் பொடி - ரசப்பொடி - மல்லிப்பொடியை சேர்த்து, தேவையான உப்பும் சேர்க்கவும். (வத்தலில் உப்பு இருக்கலாம், கவனமாக உப்பைச் சேர்க்கவும்.)
புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
மிதமான தீயில் புளிக்கரைசல் பச்சை வாசம் போக கொதித்ததும், பொரித்து வைத்திருக்கும் வத்தலையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் (அ) சர்க்கரையையும் சேர்க்கவும்.
அரிசிமாவை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். (பருப்பு பொடி சேர்ப்பதாக இருந்தால் அரிசிமாவுடன் சேர்த்து கரைத்து சேர்க்கவும்)
குழம்பு நன்கு சுண்டி எண்ணெய் மிதந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான அப்பளாம் போட்ட வத்தக்குழம்பு தயார். பருப்பு உசிலி அல்லது பருப்புத் தொகையல் காம்பினேஷனுடன் சுவையாக இருக்கும்.
படத்தில்-- சோறு, வத்தக்குழம்பு, பீன்ஸ் பருப்புசிலி, பைனாப்பிள்-மேங்கோ சாலட். ரசமும் தயிரும் படத்தில் வரவில்லை. :)

குறிப்பு 
இந்த குறிப்பு காமாட்சி அம்மாவின் ப்ளாகைப் பார்த்துச் செய்தது. அவர்கள் மணத்தக்காளி வற்றல் சேர்த்து செய்திருந்தாங்க..என்னிடம் கைவசம் அந்த வத்தல் இல்லாததால் சுண்டவத்தல் சேர்த்தேன்.  அம்மா செய்த அளவு கலர் வரவில்லை..அடுத்த முறை மீண்டும் முயற்சித்துப்பார்க்கவேண்டும், மணத்தக்காளி வற்றலுடன். ;) நாமள்ளாம் ஆரு..கஜினி முகம்மது பரம்பரையில்ல? சீக்கிரமா செய்து அந்தப் படத்தையும் போடறேன் பாருங்க!! :D

Thursday, July 28, 2016

பாகற்காய் புளிக்குழம்பு / Bittermelon puli kuzhambu

தேவையான பொருட்கள் 
பாகற்காய் - 2 
வெங்காயம் - 1
பூண்டு - 5பற்கள்
கறிவேப்பிலை - கொஞ்சம்
கடுகு - 1/2டீஸ்பூன்
வரமிளகாய் -1 
மஞ்சள்தூள் - 1/4டீஸ்பூன்
சக்தி வத்தக்குழம்பு பொடி - 1டேபிள்ஸ்பூன் 
தக்காளி - 2
புளிக்கரைசல் - 1/4 கப்
தேங்காய்த் துருவல் - 1/4கப்
உப்பு
நல்லெண்ணெய் 
சர்க்கரை - 1டீஸ்பூன் 

செய்முறை
பாகற்காயை கழுவி, விதைகளை நீக்கிவிட்டு வட்டமாக நறுக்கவும்.
வெங்காயம், தக்காளி, பூண்டையும் நறுக்கிவைக்கவும். 
புளியை ஊறவைத்து திக்காக கரைத்து வைக்கவும். 
தேங்காயை கொஞ்சமாக தண்ணீர் விட்டு மைய அரைத்துவைக்கவும்.

1.பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து, கடுகு வரமிளகாய் தாளித்து நறுக்கிய பாகற்காயை சேர்த்து வதக்கவும். 
2. பாகற்காய் ஓரளவுக்கு வதங்கியதும் நறுக்கிய பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. வெங்காயம் வதங்கியதும் உப்பு மஞ்சள்தூள் சேர்க்கவும்.
4. தக்காளி சேர்த்து வதக்கவும். 
5. தக்காளி குழைய வதங்கியதும் வத்தக்குழம்பு பொடி சேர்த்து வதக்கி,
6. புளிக்கரைசலை சேர்க்கவும்.
7. தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
8. புளி பச்சைவாசம் போக கொதித்ததும் அரைத்த தேங்காய் விழுது, சர்க்கரை சேர்த்து, தேவையான தண்ணீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.
9. குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான பாகற்காய் புளிக்குழம்பு ரெடி.
சாதம், இட்லி-தோசை எல்லாவற்றுடனும் அருமையாக இருக்கும். குழம்பை செய்து ஒரு நாள் வைத்திருந்து சாப்பிட்டால் இன்னும் சுவை அதிகம்! ;) :) 

Friday, May 20, 2016

மொச்சைக் கொட்டை குழம்பு / Field Beans Kuzhambu

மழை விட்டும் தூவானம் விடாத கதையாக அவரைக்காய்.... தொடர்கிறது. :))) 
முற்றிய காய்களாகப் பொறுக்கி வந்து, உரித்து கர்நாடகா ஸ்டைல்ல குழம்பு வைப்போம் என மனக்கோட்டையுடன் வாங்கிவந்தேன். உரிச்சு, தண்ணீரில் 3-4 மணி நேரம் ஊறவத்த பிறகு, அடுத்த ஸ்டெப்புக்கு போவோம் என அடுத்த லேயர் தோலை உரிக்கப் பாத்தா....ஊஹூம்!! கை நகம்தான் வலிக்குதே தவிர வேற ஏதும் நடக்கலை!!! வெறுத்து போய் அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் குக்கரில் போட்டு வேகவைத்து எங்கூட்டு ஸ்டைல்ல குழம்பு வச்சேன், சூப்பரா இருந்துச்சு! ஒய் டோண்ட் யு டிரை??! ;) :) 


போன பாராவில் சொன்ன விஷயங்களுக்கு டெமோ, மேலே உள்ள கொலாஜ்!! ஹிஹி...!! :) சரி, இனி குழம்பு வைக்கப்போலாம் வாங்க!

தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் -1
கறிவேப்பிலை - கொஞ்சம்
பூண்டு - நாலைந்து பற்கள்
தக்காளி -2
உருளைக்கிழங்கு (சிறியதாக) -1
புளிக்கரைசல் -கால் கப்
கடுகு - 1/2டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை 
வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை நறுக்கி வைக்கவும். பூண்டையும் உரித்து நறுக்கவும். உருளைக் கிழங்கை நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போட்டுவைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து , கடுகு தாளித்து மேற்சொன்னவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் தக்காளி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி மசிந்ததும் வேகவைத்த மொச்சை, நீளவாக்கில் நறுக்கிய உருளைக் கிழங்கு சேர்த்து வதக்கவும்.
அதனுடன் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.
தேங்காயை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அரைத்துவைக்கவும். கிழங்கு வெந்தவுடன் தேங்காய் அரைத்ததைச் சேர்க்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும், அரை டீஸ்பூன் சர்க்கரை (விரும்பினால்) சேர்த்து இறக்கவும். 
இந்தக் குழம்பிற்கு நான் உபயோகித்த சாம்பார்பொடி! :) 
ஊரிலிருந்து மொத்தமாக சாம்பார்ப் பொடி, ரசப்பொடிகள் வாங்கி வந்து ஃப்ரீஸரில் ஸ்டோர் செய்துகொள்வேன். சமீபத்தில் சாம்பார் பொடி மட்டிலும் காலியாகிவிட்டது. கலிஃபோர்னியாவில் இந்தப்பக்கம் இன்னும் தென்னிந்திய மசாலாப்பொடிகள் அதிகம் வருவதில்லை. சக்தி மசாலாவின் சில பொடிகளும், ஆச்சி மசாலாவும் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. சக்தி சாம்பார் பௌடர் கிடைக்காததால் ஆச்சி வந்துட்டாங்க. சுவை நன்றாக இருக்கிறது. :))) 

Tuesday, March 15, 2016

அவசர சாம்பார் / இன்ஸ்டண்ட் சாம்பார்

பருப்பு இல்லாமல்,  தேங்காயும் தேவைப்படாத சாம்பார் இது. சும்மா இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாலைப்பொழுதில் இந்த ரெசிப்பி கண்ணில் பட சட்டென்று செய்து சாப்பிட்டாயிற்று. நீங்களும் செய்து பாருங்க..ஈஸி & டேஸ்ட்டி! 

தேவையான பொருட்கள்
வெங்காயம் - பாதி (அ) சின்ன வெங்காயம் - நாலைந்து 
பச்சைமிளகாய்-1
நறுக்கிய காய் - 1/2கப் [விருப்பமான காயைச் சேர்த்துக்கொள்ளலாம். நான் மஞ்சள்பூசணி/அரசாணிக்காய் சேர்த்திருக்கிறேன்]
கடுகு-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து, கொத்துமல்லித் தழை -கொஞ்சம் 
சர்க்கரை -1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
அரைத்துக்கொள்ள
பொட்டுக்கடலை -1டேபிள்ஸ்பூன்
நன்கு பழுத்த தக்காளி -2 
புளி - சிறுதுண்டு
சாம்பார்பொடி -2டீஸ்பூன் 
சீரகம்-1/2டீஸ்பூன் 

செய்முறை
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் எடுத்து,
அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை, தக்காளி இருப்பதால் அதுவே போதும்.
காயை சற்றே பெரிய துண்டுகளாகவும், வெங்காயம் பச்சைமிளகாயையும் நறுக்கி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் சூடாக்கி, கடுகைப் பொரியவிடவும். பிறகு கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய காயைச் சேர்த்து வதக்கவும்.
அரைத்த கலவையை குக்கரில் சேர்த்து,
தேவைக்கு தண்ணீர் மற்றும் உப்பு, சர்க்கரையைச் சேர்க்கவும். நான் சுமார் 1 கப் தண்ணீர் சேர்த்தேன், உங்களுக்கேற்ற கன்ஸிஸ்டன்சி-க்கு தண்ணீரை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
குக்கரை மூடி, ஒரு விசில் விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். நறுக்கிய மல்லித்தழை தூவி பரிமாறவும்.
பதிவின் முதல் படத்தில் இருப்பது ஓட்ஸ் பொங்கல் & சாம்பார்...இறுதிப் படத்தில் இருப்பது இட்லி & சாம்பார்.
குக்கரின் விசிலை கவனிக்காமல் 2-3 என்று போனதில் நான் சேர்த்த காய் சாம்பாரில் கரைந்துவிட்டது, ஹிஹி...ஆனால் சுவை அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி!

Recipe Link : HERE

Friday, October 30, 2015

முளைகட்டிய பச்சைப்பயிறு குழம்பு

தேவையான பொருட்கள்
முளை கட்டிய பச்சைப்பயறு -1/4கப்
உருளை கிழங்கு (சிறியது) -1
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் -1
பூண்டு - 5 பற்கள்
புளிக்கரைசல் -1/4கப்
வத்தக்குழம்பு பொடி - 11/2டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/8டீஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
கொத்துமல்லித் தழை -கொஞ்சம்
உப்பு
எண்ணெய்
அரைக்க 
தேங்காய்த்துருவல் - 3டேபிள்ஸ்பூன்
தக்காளி (சிறியதாக) -2

செய்முறை 
1.பச்சைப்பயறை 8 மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து மூடி வைக்கவும். 8 -10 மணி நேரங்களில் பயிறு முளைத்துவிடும்.
2.முளைத்த பயறை தேவையான தண்ணீர் விட்டு குழையாமல் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
3. பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து, கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். 
4.வெங்காயம் நிறம் மாறியதும் நறுக்கிய உருளைக் கிழங்கு, வத்தக்குழம்பு பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

5.சிறிது தண்ணீர் சேர்த்து கிழங்கை வேகவிடவும். வெந்ததும் புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
6. தேங்காய் தக்காளியை நைஸாக அரைத்துக்கொள்ளவும்.  
7.  குழம்பு நன்கு கொதித்து புளியின் பச்சை வாடை போனதும், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். 
8. வேகவைத்த பயிறை சேர்க்கவும். தேவைப்பட்டால் இன்னும் தண்ணீர் விட்டு மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
9. குழம்பில் எண்ணெய் தெளிந்து வந்ததும் 1டீஸ்பூன் சர்க்கரை (விரும்பினால்) சேர்த்து,  கொத்துமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும். 
சுவையான முளைப்பயிறு குழம்பு ரெடி. சாதம், இட்லி தோசை எல்லாவற்றுக்கும் நன்றாக இருக்கும்.

குறிப்பு
தேங்காய் சேர்க்க விரும்பாதவர்கள்(6-வது ஸ்டெப்பில் உள்ள) தேங்காய்க்கு பதிலாக 2 டேபிள்ஸ்பூன் வேகவைத்த முளைப்பயிறை தக்காளியுடன் சேர்த்து அரைத்துச் சேர்க்கலாம்.
உருளைக்கிழங்குடன் கத்தரிக்காயும் சேர்க்கலாம். கத்தரிக்காய் கைவசம் இல்லாததால் சேர்க்கவில்லை.
வத்தக்குழம்பு பொடி இல்லையென்றால் மிளகாய்த்தூள்+மல்லித்தூள் சேர்த்துக்கொள்ளலாம். 

Friday, March 20, 2015

காரக்குழம்பு

"சொல்லுகிறேன்"- காமாட்சி அம்மாவின் வலைப்பூவில் பார்த்து செய்த குழம்பு இது. செய்வதற்கு சுலபமாகவும் சுவையாகவும் இருக்கும் இந்தக் குழம்பை நீங்களும் செய்து பார்த்துச் சொல்லுங்களே! :)

தேவையான பொருட்கள்
வெங்காயம்-1
தக்காளி-1
பூண்டு-5 பற்கள்
மிளகு-8
புளிக்கரைசல்-1/2கப்
சாம்பார்பொடி-1டீஸ்பூன்
வெந்தயப்பொடி-1/4டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
வரமிளகாய்-2 (காரத்துக்கேற்ப)
நல்லெண்ணெய்
உப்பு
சர்க்கரை(அ) வெல்லம் - சிறிது

செய்முறை
1.வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகு இவற்றை மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
2.புளியை ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும்.
3.புளிக்கரைசலுடன் அரைத்த கலவையைச் சேர்க்கவும். சாம்பார்பொடி, வெந்தயப்பொடி மற்றும் தேவையான உப்புச் சேர்த்து கரைத்துவைக்கவும்.
4.கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை(கைவசம் இல்லை, அதனால் சேர்க்கலை!), வரமிளகாய் தாளிக்கவும்.
5. குழம்புக்கலவையை ஊற்றி தேவையான அளவு நீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.
6.குழம்பு நன்றாக கொதித்ததும் அடுப்பை குறைவாக வைக்கவும்.
7.தேவையான பக்குவத்துக்கு குழம்பு சுண்டி, எண்ணெய் மிதந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். 
8.சுவையான குழம்பு தயார்...
9.பரிமாறும் கிண்ணத்துக்கு மாற்றி பரிமாறவும்....ஹிஹி...படத்தில நம்பர் போட்டாச்சு...எதுக்குன்னு யோசிப்பீங்களேன்னு 9வது ஸ்டெப்பும் எழுதிட்டேன். ;) :) 
நாங்கள் கீன்வா-பிரவுன் ரைஸ் தோசையுடன் சாப்பிட்டோம். இந்தக் குழம்பு இட்லி தோசைக்கு சைட் டிஷ் ஆக ரொம்ப நன்றாக இருக்கிறது.  சாதத்துடனும் சாப்பிடலாம். நன்றாக இருக்கும். சப்பாத்தியும் இதற்கு துணை போகும் என்றே தோன்றுகிறது. செய்து சுவைத்துப்பார்த்துச் சொல்லுங்க. நன்றி! 

சுவையான குறிப்பைத் தந்த காமாட்சிம்மாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! 


Thursday, March 5, 2015

முள்ளங்கி குழம்பு

தேவையான பொருட்கள்
முள்ளங்கி-1(சிறியதாக)
வெங்காயம்-பாதி
பச்சைமிளகாய்-1
தக்காளி-1
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
கொத்துமல்லி இலை- கொஞ்சம்
எண்ணெய்
உப்பு
அரைக்க
தேங்காய்த் துருவல்-2 டேபிள்ஸ்பூன்
சோம்பு-1/2டீஸ்பூன்
வரமிளகாய்-3(காரத்துக்கேற்ப)

செய்முறை
முள்ளங்கியை கழுவி வட்டத்துண்டங்களாக நறுக்கவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மைய அரைத்துவைக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து வெங்காயம்-பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் லேசாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
முள்ளங்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அரைத்த தேங்காய்க்கலவையைச் சேர்த்து..
தேவையான நீரும் சேர்த்து கொதிக்கவிடவும்.
குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் தெளிந்து வந்ததும்,
கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான முள்ளங்கி குழம்பு தயார். இட்லி தோசைக்கு அருமையாக இருக்கும். சாதத்துடனும் சாப்பிடலாம். சோம்பு சேர்ப்பதால் லேசான இனிப்பு சுவையுடனும் நல்ல வாசத்துடனும் இருக்கும். 

Sunday, November 10, 2013

குடைமிளகாய் குழம்பு/(Red) Capicum Gravy

எங்க வீட்டுச் செடியில் காய்த்த குடைமிளகாயைப் பழமாக்கிப் பறித்து...
கடையில் வாங்கிய பச்சை மற்றும் மஞ்சள் வண்ணக் குடைமிளகாய்களுடன் சேர்த்து..
கலர்ஃபுல்லாக ஒரு குழம்பு வைத்து இந்த வாரஇறுதியில் ருசித்தாயிற்று. ருசித்ததை உங்களுடனும் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு. :) 
தேவையான பொருட்கள்
நறுக்கிய குடைமிளகாய்-11/2கப்
நறுக்கிய வெங்காயம்-1/4கப்
கெட்டியான புளிக்கரைசல்-1/4கப் 
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
பெருங்காயப்பொடி-1/8டீஸ்பூன்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி-கொஞ்சம்
எண்ணெய்
உப்பு 
வதக்கி அரைக்க
எண்ணெய்-1டீஸ்பூன்
வெந்தயம்-5
உளுந்துப் பருப்பு-1டீஸ்பூன்
கொத்தமல்லி (தனியா)-1 டேபிள்ஸ்பூன்
வறுத்த நிலக்கடலை-1டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள்ளு-1டீஸ்பூன்
தேங்காய்த்துருவல்-2டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்-5 (காரத்துக்கேற்ப)

செய்முறை
குடைமிளகாய்களை கழுவி, விதைகளில்லாமல் பெரிய துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.
எண்ணெய் காயவைத்து வதக்கி அரைக்க வேண்டிய பொருட்களை கருகாமல் வதக்கி ஆறவைக்கவும்.
ஆறியதும் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துவைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். பிறகு நறுக்கிய குடைமிளகாய்த்துண்டுகளைச் சேர்க்கவும்.
அடுப்பில் தீயை அதிகரித்து, குடைமிளகாய் ஓரளவு வதங்கியதும் புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
ஒரு கொதி வந்ததும் அரைத்த மசாலாவைச் சேர்க்கவும்.
தேவையான உப்பு மற்றும் தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவிடவும்.(தண்ணீர் சேர்ப்பது உங்கள் விருப்பம்,    திக்கான க்ரேவியாக வேண்டுமென்றால் கொஞ்சமாகத் தண்ணீர் விடலாம், நான் கொஞ்சம் தாராளமாகவே தண்ணீர் சேர்த்து செய்திருக்கிறேன்.)
குழம்பு நன்றாக கொதித்து மசாலாவின் வாசம் அடங்கியதும் தீயை ஸிம்-மில் வைத்து கொதிக்கவிடவும்.
குழம்பு விரும்பிய பக்குவத்திற்கு சுண்டி எண்ணெய் மிதந்து வந்ததும்,  நறுக்கிய கொத்துமல்லித் தழை, சர்க்கரை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான கலர்ஃபுல் குடமிளகாய் குழம்பு தயார்.  குழம்பு செய்து ஒரு மணி நேரம், 2 மணி நேரம் கழித்து பரிமாறினால் புளிப்புச் சுவை நன்றாகச் சேர்ந்து சூப்பராக இருக்கும். :)
இந்தக் குழம்பு ஆறியதும்  கொஞ்சம் கெட்டியாகும் வாய்ப்பு உண்டு, எனவே தண்ணீர் அளவை பார்த்து வைத்துக்கொள்ளவும்.
இந்த கலர்ஃபுல் குடைமிளகாய் குழம்பு புலாவ், பிரியாணி, இட்லி, தோசை, சப்பாத்தி எல்லாவற்றுக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். இந்தக் குழம்புடன் எங்க வீட்டில் ஜோடி சேர்ந்தது மைல்ட் வெஜிடபிள் புலாவ். :) 

LinkWithin

Related Posts with Thumbnails