Showing posts with label டயபடிக் உணவு. Show all posts
Showing posts with label டயபடிக் உணவு. Show all posts

Thursday, May 11, 2017

ஓட்ஸ் வெஜிடபிள் உப்மா

தேவையான பொருட்கள் 
ஓட்ஸ் - 1 கப்
தண்ணீர் -11/2 கப்
கேரட் -1
பீன்ஸ் - 5
பச்சை பட்டாணி (ஃப்ரோஸன்) - ஒரு கைப்பிடி
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -3 (காரத்துக்கேற்ப)
கறிவேப்பிலை -கொஞ்சம்
கொத்துமல்லி இலை - கொஞ்சம்
கடுகு -1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு -தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு

செய்முறை
ஓட்ஸை வெறும் கடாயில் வாசம் வரும்வரை வறுத்து ஆறவைக்கவும்.
ஒண்ணரை கப் தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் ஓட்ஸை சேர்த்து வேகவைக்கவும். தீயை குறைத்து வைத்து வேகவைக்கவேண்டும், ஓட்ஸ் சேர்த்ததும் பொங்கும். ஓட்ஸின் வகைக்கேற்ப சில நிமிடங்களில் வெந்துவிடும். குழையாமல் வேகவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைக்கவும். [தண்ணீர் அளவாக இருக்கும், வடிக்கத் தேவையில்லை]

கேரட் பீன்ஸை கழுவி நறுக்கி, கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மைக்ரோவேவ்-ல் 2  நிமிடங்கள் வேகவைக்கவும். அதனுடன் பட்டாணியையும் சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் வேகவிட்டு எடுத்துவைக்கவும்.

வெங்காயம், பச்சைமிளகாய் நறுக்கிவைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளிக்கவும். க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமானதும், கறிவேப்பிலை - நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் தேவையான உப்பு, வேகவைத்த காய்கறிகள் (தண்ணீரை வடித்துவிட்டு) சேர்க்கவும். எல்லாம் நன்றாக வதங்கியதும் வெந்த ஓட்ஸை கொட்டி கிளறிவிடவும். [ரொம்பவும் கிளறக்கூடாது..காய்கள் ஓட்ஸுடன் கலந்தால் போதும்]

ஓட்ஸ் காய்களுடன் கலந்து சூடானதும் அடுப்பிலிருந்து இறக்கி, நறுக்கிய கொத்துமல்லி இலை சேர்த்து சூடாக பரிமாறவும். 

Tuesday, March 22, 2016

ராகி சேமியா

ராகி சேவை, கோதுமை சேவை, தக்காளி சேவை, கம்பு சேவை என தமிழகத்தில் விதவிதமாக கிடைத்தாலும், இங்கே ராகி "சேமியா" கிடைத்தது இதுவே முதல் முறை.  மேகி நூடுல்ஸ் இருக்கும் பக்கம் இந்த "அணிலாரை"ப் பார்ததும் வீட்டுக்கு கூட்டிவந்துவிட்டேன். இப்படியான சேமியாவை நான் (மட்டுமே) செய்வது முதல்முறை. ஊரில் அம்மாவோ அக்காவோ செய்வார்கள், பக்கத்தில் நின்று பார்த்ததோடு சரி. கொஞ்சம் பயந்துகிட்டே செய்தேன், ஆனா அவ்வளவு கடினமில்லை..சூப்பரா இருந்தது. நீங்களும் செய்து பாருங்க. 

தேவையான பொருட்கள்
ராகி சேமியா - 2கப் 
வெங்காயம்- பாதி
பச்சைமிளகாய் - 4 (காரத்துக்கேற்ப)
வரமிளகாய் -1 
தக்காளி -1
கடுகு -1/2டீஸ்பூன்
கடலைப்பருப்பு -1டீஸ்பூன்
உளுந்து பருப்பு -1டீஸ்பூன் 
எண்ணெய்
உப்பு 

செய்முறை
2 கப் சேமியாவுக்கு சுமார் 4 கப் தண்ணீர் (சூடாக்க தேவையில்லை, பச்சைத்தண்ணீரே போதும்) எடுத்து தேவையான உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும். 

உப்பு கரைந்ததும் ராகி சேமியாவை தண்ணீரில் போட்டு 3 நிமிடங்கள் வைக்கவும். 

*மூன்று நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரை வடித்துவைக்கவும். 

இட்லிப் பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, ஊறிய ராகி சேமியாவை வைத்து 5-6 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும்.
 சேமியா வெந்ததும் எடுத்து ஆறவைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, க.பருப்பு-உ.பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம்-ப.மிளகாய், கிள்ளிய வர மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் **உப்பு சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் ஆறிய ராகி சேமியாவை உதிர்த்துப் போட்டு கிளறவும்.
 சேமியா வெங்காயத்துடன் நன்கு கலந்து சூடேறியதும் அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.
குறிப்பு
* தண்ணீரில் ஊறப்போடும் சேமியாவை 3 நிமிடங்களுக்கு மேல் ஊறவைக்கவேண்டாம்..அதிக நேரம் ஊறினால் கூழ் போல் ஆகிவிடும், கரெக்டா 3 மினிட்ஸ் மட்டும் வைங்க. (இது அந்த சேமியா பாக்கட்டிலயே போட்டிருக்காங்க..நான் பயமுறுத்தலை!! ஹிஹி...)
** சேமியாவை ஊறவைக்கும்போதே உப்பு கலந்த தண்ணில தானே ஊறவைக்கிறோம் என தவறாக நினைக்கவேண்டாம். எனக்கென்னவோ அந்த 3 நிமிட ஊறவைத்தலில் உப்பு சேமியாவில் பிடிக்கிற மாதிரி தெரியவில்லை. நீங்க பாத்து போட்டுகுங்க. :)

Wednesday, October 7, 2015

கம்பு தோசை

தேவையான பொருட்கள்
கம்பு மாவு -2 கப்
உளுந்து - 1/2கப்பிற்கும் கொஞ்சம் குறைவாக
உப்பு

செய்முறை
ரெடிமேட் கம்பு மாவு(தான்) இங்கே கிடைக்கிறது. அதனை தயாராக எடுத்துக்கொள்ளவும்.

உளுந்துப் பருப்பை நன்கு அலசி 2-3 மணி நேரம் ஊறவைக்கவும். கடைசி அரை மணி நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைத்தால் நலம். :)  
ஊறிய உளுந்தை மிக்ஸியில் அரைக்கவும். கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
அதனுடன் கம்பு மாவு மற்றும் தேவையான உப்புச் சேர்த்து அரைக்கவும்.
கம்பு மாவு சேர்த்ததும் தேவையான அளவு தண்ணீர் விட்டு சில நிமிடங்கள் மிக்ஸியை ஓடவிட்டால் கட்டிகளில்லாமல் மாவு கலந்துவிடும்.
வேறு பாத்திரத்துக்கு மாற்றி 8 மணி நேரம் புளிக்க விடவும்.
நான் கொஞ்சம் லேட்டா பாத்ததால மாவு பொங்ங்ங்ங்ங்....கி கீழ வழியட்டுமா? என்ற நிலையில் இருந்தது. கரெக்ட்டாப் புடிச்சட்டமுல்ல...ஹிஹி..ஃபோட்டோவத்தான்!! ;) :)
கம்பு தோசை மாவுக்கு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கரைத்து தோசைகளாக வார்க்கவும்.
சுற்றிலும் எண்ணெய் விட்டு தோசைக்கல்லை மூடி வைத்து...
எடுத்தால் தோசைகள் சூப்பராக வரும். காரசாரமான சட்னியுடன் பரிமாறவும்.  படத்திலிருக்கும் சட்னியின் லிங்க் இங்கே.  
பி.கு. இந்த கம்பு தோசையின் முன்னோடி ராகி தோசை..ஆமாங்க!! அறுசுவை.காம் -தளத்தில் பகிரப்பட்டிருந்த ராகி தோசையை முயற்சித்து பார்த்ததில் நன்றாக இருந்தது. அடுத்த முறை கடைக்குப் போயிருக்கையில் கம்பு மாவு கண்ணில் படவும் வாங்கிவந்து கம்பு தோசை சுட்டுப் பார்த்து ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுத்ததால் கம்புதோசை முதலில் கடைக்கு வந்துருச்சு...சாப்புட்டுப் பார்த்து எப்புடி இருந்துச்சுன்னு சொல்லீட்டுப் போங்க...நன்றி!  

Monday, April 27, 2015

கொள்ளு தோசை/ கொள்ளு-ப்ரவுன் ரைஸ் தோசை

தோசையில் உளுந்துக்கு பதிலாக கொள்ளு சேர்த்து செய்த தோசை, இட்லி அரிசி/புழுங்கல் அரிசிக்கு பதிலாக "கைக்குத்தல் அரிசி"/ப்ரவுன் ரைஸ் சேர்த்து செய்தது இந்த தோசை. எப்படியும் இட்லி தோசைய நம்ம டயட்-ல இருந்து விலக்க முடியாது என்று இருப்பதால.. அட்லீஸ்ட் கில்ட் ஃப்ரீயாச் சாப்பிடலாமே!! எங்க வீட்டில வாரத்துக்கொருமுறை இந்த தோசையும், கீன்வா-ப்ரவுன் ரைஸ் தோசையும் மாற்றி மாற்றி இடம் பிடிக்கின்றன இப்போது. நீங்களும் செய்து பார்த்துச் சொல்லுங்களேன்! 

தேவையான பொருட்கள்
ப்ரவுன் ரைஸ் - 2 கப்
வெந்தயம்-1டீஸ்பூன்
கொள்ளு-1/2கப்
உப்பு 

செய்முறை
1. ப்ரவுன் ரைஸ், வெந்தயம் இரண்டையும் நன்றாக 2-3 முறை களைந்து சுமார் 6 மணி நேரம் ஊறவைக்கவும்.
2. கொள்ளையும் நன்றாக களைந்து ஆறு மணி நேரம் ஊறவைக்கவும். 
3. க்ரைண்டரில் கொள்ளை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து அரைக்கவும். மாவு சும்மா பொங்கிப் பொங்கி வந்தது. க்ரீம் மாதிரி எப்படி நிற்குது பாருங்க கிண்ணத்தில்!! ;)  
 4. கொள்ளை சுமார் 20 நிமிடங்கள் அரைத்து எடுக்கவும்.
5. அரிசி-வெந்தயத்தையும் தேவையான தண்ணீர் விட்டு நன்கு அரைத்தெடுத்து கொள்ளுடன் சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து கலந்து புளிக்க விடவும்.
6. மாவு புளித்ததும் கொஞ்சம் மாவை எடுத்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து கலந்து தோசைகளாக வார்க்கவும்.
7. சுற்றிலும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
8. சுவையான கொள்ளு தோசை தயார். நல்ல காரசாரமான சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்பு
ஊறிய கொள்ளை அரை மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்தும் அரைக்கலாம்..நன்றாக மாவு காணும்.
இந்த மாவில் இட்லி செய்ய முடியாதா எனக் கேட்பவர்களுக்கு...நான் செய்து பார்க்கலை, அதனால் தெரியவில்லை. ;) :) 
இந்த தோசைக்கு தேங்காய்ச்சட்னியை விட, நல்ல புளிப்பான தக்காளிச் சட்னி, அல்லது காரசாரமான சட்னி, குழம்புவகைகள் நன்றாக இருக்கும். 

Tuesday, December 9, 2014

ஓட்ஸ் கஞ்சி

தேவையான பொருட்கள்
ரோல்ட் ஓட்ஸ் (Rolled oats/Old fashioned Oats)-1/2கப்
கேரட்- சிறியதாக 1
பீன்ஸ் - 2
பச்சைப் பட்டாணி - 1கைப்பிடி
நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 1
கறிவேப்பிலை
சாம்பார் பொடி-1/2டீஸ்பூன் (காரத்துக்கேற்ப)
சீரகம்-1/2டீஸ்பூன்
கடுகு-1/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
தண்ணீர் - 21/2கப்
செய்முறை
வெங்காயம், பச்சைமிளகாய், கேரட்-பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, கேரட்-பீன்ஸ் -பச்சைப்பட்டாணி, சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து 21/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்கு கொதி வந்ததும் ஓட்ஸை கொட்டி கிளறிவிடவும்.
மிதமான தீயில் சுமார் 5 நிமிடங்களில் ஓட்ஸ் வெந்துவிடும்.
கஞ்சியை அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து இளம் சூட்டில் (அதாங்க..serve warm!! :)) பரிமாறவும்.
குறிப்பு
கஞ்சி அடுப்பிலிருந்து இறக்கும் போது கொஞ்சம் தண்ணீர் போல தெரிந்தாலும் ஆறும்போது கெட்டியாகி கஞ்சி பதம் வந்துவிடும். மிகவும் ஆறவிட்டால் கஞ்சி "களி" ஆகும் அபாயம் உள்ளது, அதனால பாத்து பதமான சூட்டில பரிமாறுங்கோ! :)
quick cooking oats என்றால் தண்ணீர் அளவு குறைத்துக்கொள்ளவும். விரைவாகவும் வெந்துவிடும்.

Thursday, July 3, 2014

ப்ரெட் உப்புமா / ரொட்டி உப்புமா

தேவையான பொருட்கள்
ப்ரெட் ஸ்லைஸஸ்/ ரொட்டித் துண்டுகள் - 8
வெங்காயம்-1
பச்சைமிளகாய்-3 (காரத்துக்கேற்ப)
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு-தலா 1டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்-2டேபிள்ஸ்பூன்
உப்பு-வெங்காயம் வதங்கும் அளவு
எண்ணெய்

செய்முறை
வெங்காயம்-பச்சைமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம்-பச்சைமிளகாய்-கறிவேப்பிலை(நான் சேர்க்கவில்லை) சேர்த்து வதக்கவும். வெங்காயம் சீக்கிரம் வதங்க உப்பை சேர்த்து வதக்கவும். 
ப்ரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு உதிர்த்துக்கொள்ளவும். [புது ப்ரெட்-ஐ விட மீதமான ப்ரெட் அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்த ப்ரெட் ஈஸியாக அரைபடும். நான் ஃரெஷ் ப்ரெட்தான் உபயோகித்திருக்கிறேன். ;)] 
உதிர்த்த ப்ரெட்-ஐ வதங்கிய வெங்காயத்துடன் சேர்த்து பிரட்டவும்.
ப்ரெட் ஓரளவு சூடேறியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான உப்புமா தயார். சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு
உப்பு வெங்காயம் வதக்க மட்டுமே, ரொட்டியில் ஏற்கனவே உப்பு இருக்கும்.
நாங்கள் எப்போதும் கோதுமை அல்லது மல்ட்டிகிரெய்ன் ப்ரெட் தான் வாங்குவது வழக்கம்.  வெள்ளை ரொட்டியும் உபயோகிக்கலாம்.
உதிர்த்த ரொட்டி சேர்த்த பின் அதிக நேரம் வதக்கினால் உப்புமா வறவற-வென ஆகிவிடும்.
சூடாகச் சாப்பிட்டால் சுவை அதிகம்! :)
ரெசிப்பி கிடைத்தது இங்கே.

Thursday, October 31, 2013

அவல் மிக்ஸர் (டயட் வர்ஷன்)

இந்த மிக்ஸர் சுடச்சுடச் செய்து ஈவினிங் டீ-யுடன் கொறிக்க சரியான ஜோடி! இங்கே கொடுக்கப்பட்டுள்ளது மிகக் குறைந்த அளவில் செய்த பேஸிக்  ரெசிப்பி. இதனுடன் உங்கள் விருப்பப்படி வேர்க்கடலை-முந்திரி-திராட்சை-கறிவேப்பிலை-பூண்டு இவற்றையும் சேர்த்து செய்யலாம். மிளகுத்தூளுக்குப் பதில் மிளகாய்த்தூள்-பெருங்காயமும் சேர்க்கலாம். ஷாலோ ஃப்ரை செய்வதற்கு பதிலாக டீஃப் ஃப்ரையும் செய்துகொள்ளலாம். உங்கள் தேவை மற்றும் வசதிப்படி செய்து ருசித்துப் பாருங்க. :)
தேவையான பொருட்கள்
கெட்டி அவல்-1/2கப்
பொட்டுக் கடலை-1டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள்-1/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்-2டீஸ்பூன்
செய்முறை
மிதமான தீயில், கடாயில் எண்ணெய் காயவைத்து அவலைச் சேர்த்து வறுக்கவும்.
அவல் கருகாமல் பொரியும் வரை கவனமாக கை விடாமல் கிளறிவிட்டு வறுக்கவும்.
 அவல் மொறுமொறுப்பாக பொரிந்ததும் பொட்டுக்கடலை சேர்க்கவும். [வேர்க்கடலை-முந்திரி-கறிவேப்பிலை சேர்ப்பதாக இருந்தால் இந்நிலையில் சேர்த்துக்கொள்ளவும்]
 மிளகுத்தூள், தேவைக்கு உப்பு சேர்த்து கலக்கவும். [மிளகாய்த்தூள்-பெருங்காயத்தூள்-உப்பு சேர்ப்பதாக இருந்தால் இப்போது சேர்க்கலாம்.]
எல்லாப் பொருட்களும் நன்றாக கலந்து சூடேறியதும் அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.
நிறையச் செய்து காற்று புகாத டப்பாக்களில் ஒரு வாரம் பத்து நாட்கள் வரை வைத்துக்கொள்ளலாம். நினைத்த நேரம் குற்ற உணர்ச்சி இல்லாமல் கொறிக்க ஒரு கறுக் மொறுக் ஸ்னாக்ஸ் இது. ரெசிப்பி கர்ட்டஸி என் மாமியார். படமெடுத்தது மட்டுமே நான்! :) 

Saturday, September 21, 2013

கீன்வா-ப்ரவுன் ரைஸ் பணியாரம்


தேவையான பொருட்கள்
கீன்வா(Quinoa)-1/2கப்
ப்ரவுன் ரைஸ்-1கப் 
வெந்தயம்-1/2டீஸ்பூன் 
உருட்டு உளுந்து-1/4கப்
உப்பு
எண்ணெய்
 செய்முறை
அரிசி, கீன்வா, வெந்தயம் இவற்றை 2-3 முறை நீரில் களைந்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். 
மூன்று மணி நேரம் கழித்து, உளுந்துப் பருப்பையும் இரண்டு, மூன்று முறை கழுவிவிட்டு, அரிசி-கீன்வாவுடன் சேர்த்து ஒன்றரை மணி நேரம் ஊறவிடவும்.
அளவு கொஞ்சமாக இருப்பதால் எல்லாவற்றையும் ஒன்றாக ஊறவைத்து அரைத்திருக்கிறேன். அதிகமாகப் போடுவதாக இருந்தால், அரிசி-கீன்வா இவற்றை 4 மணி நேரங்களும்,  உளுந்தைத் தனியே 11/2 மணி நேரமும் ஊறவைத்துக்கொள்ளலாம். 

கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்துக்கு மாவை அரைத்து, உப்பு சேர்த்து கலந்துவைக்கவும்.

8 மணி நேரங்கள் கழித்து மாவு பொங்கி வ(ழி)ந்திருக்கும். ;) 

[அரைத்த மாவை கன்வென்ஷனல் அவன் -ல்  விளக்கைப் போட்டு  உள்ளே வைத்தேன், காலையில் பொங்கி வழிஞ்சிருந்தது..ஹிஹிஹ்ஹி! :) நல்லவேளையா பேக்கிங் டிரேயில கிண்ணத்தை வைச்சேனோ, தப்பிச்சேன்! இல்லன்னா சிந்திய மாவைச் சுத்தம் செய்யறதுக்குள்ள ஒரு வழியாகிருப்பேன். அவ்வ்வ்வ்வ்வ்! ;) ]

பணியாரக் கல்லை காயவைத்து கொஞ்சமாக எண்ணெய் விட்டு சூடாக்கவும். கல் சூடானதும் மாவை ஊற்றி வேகவிடவும்.
ஒரு புறம் வெந்ததும் திருப்பி விட்டு வேகவிடவும்.  
 சூடான, சுவையான, ஸாஃப்ட்-ஆன பணியாரம் ரெடி. 
 பணியாரம்-மதுரை சட்னி-கொத்துமல்லி சட்னி
இதே மாவை கீன்வா-ப்ரவுன் ரைஸ் தோசையாகவும் செய்யலாம்.

தோசை சீக்கிரம் சிவந்துவிடும், கவனமாக கருகவிடாமல் எடுக்கவேண்டும்.

பணியாரத்தை வைத்து என்னவர் செய்த இன்னொவேட்டிவ் ப்ரேக்ஃபாஸ்ட் அடுத்து வரும் கொலாஜில்! :)
பணியாரத்தை இரண்டாக நறுக்கி, ஒரு புறம் கொத்துமல்லி சட்னியைத் தடவி, மறுபுறம் நறுக்கிய அவகாடோ துண்டுகளை வைத்து, பக்கத்தில் மதுரை சட்னியை வைத்துச் சாப்பிட்டார், விரும்பினால் நீங்களும் முயற்சிக்கலாம் என்பதற்காக இந்த கொலாஜ்!
:)))
~~~

LinkWithin

Related Posts with Thumbnails