Saturday, May 8, 2010

கீரைப் பொரியல்


கீரைப் பொரியலுக்கு ஒரு போஸ்டிங்கான்னு பார்க்காதீங்க..:) ஒரு முன்கதையோட சொல்லப்போறேன்.

இந்த
வாரம் கடைக்கு போயிருந்தப்போ இந்தக் கீரையைப் பார்த்தேன்.முருங்கை கீரை மாதிரியே இருந்தது.ஊர்ல இருந்து வந்த இந்த ரெண்டரை வருஷமா முருங்கைக் கீரைய கண்ணால கூட பார்க்கலை! கொஞ்சநாள் முந்தி பார்த்தப்ப எல்லாம் (அதாவதுங்க, நாங்க ரெண்டு வருஷம் முன்பு சில காலம் இருந்த இடத்துக்கே இப்ப மீண்டும் வந்திருக்கோம். :) ) இதை வாங்கலாமா,வேணாமான்னு டைலமா-லயே வாங்காம வந்திடுவேன்..இந்த முறை சுரிதார் போட்ட ஒரு அக்கா ( நாங்க இருந்தது இண்டியன் ஸ்டோர் இல்லை) இதை எடுத்துட்டு போனாங்க.அப்பவே வாங்கிடலாம்னு ஒரு தைரியம் வந்துடுச்சு.

"அங்கேயே நின்னு என்ன ஆராய்ச்சி பண்ணறே?"-ன்னு கேட்டுட்டே வந்த இவரிடம் கீரையைக் காட்டினேன்.இவருக்கும் தெரில...முருங்கை கீரை நல்லா வாசனையா இருக்குமேன்னு,இலைய எடுத்து முகர்ந்து பார்த்தால் ஒரு வாசமும் இல்லை. நாங்க இந்த ஆராய்ச்சி பண்ணும்போது, கூட வந்த நண்பர்கள் பில் போட்டுட்டு எங்களுக்காக வெயிட்டிங்! சரி, எப்படின்னாலும் சாப்பிடறமாதிரி:) இலையாத்தானே இருக்கும்னு தைரியமா வாங்கிட்டு வந்தாச்சு.

முருங்கைக் கீரை மாதிரியே இலைகளை மட்டும் எடுத்து செய்தேன்...சுவை அருமையா இருந்தது..அகத்திக் கீரை & முருங்கை கீரை ரெண்டோட டேஸ்ட்டும்தெரிஞ்சது. டேஸ்ட் சூப்பரா இருந்ததால சப்பாத்திக்கே வைச்சு சாப்ட்டுட்டோம்.

முருங்கை வாசம் இல்லாததால் இது 'முருங்கை'கீரை பொரியல் இல்ல..'ஏதோ ஒரு'கீரை பொரியல்-னுதான் பேர் வைச்சிருக்கேன். :)

தேவையான பொருட்கள்
கீரை -1 கட்டு
வெங்காயம் - பாதி
காய்ந்த மிளகாய் -4அல்லது காரத்துக்கேற்ப
தேங்காய்த் துருவல்-1 1/2ஸ்பூன்
கடுகு-1/2ஸ்பூன்
கடலைப்பருப்பு,உளுந்துப் பருப்பு-தலா 1/2ஸ்பூன்
உப்பு-சுவைக்கேற்ப
சர்க்கரை - ஒரு சிட்டிகை

செய்முறை
கீரையை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.


வெங்காயத்தை நறுக்கிகொள்ளவும்.மிளகாயை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய வைத்து கடுகு,க.பருப்பு,உ.பருப்பு தாளித்து, வெங்காயம்,மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் கீரையைச் சேர்க்கவும்.


ஒரு
சிட்டிகை சர்க்கரை சேர்த்து கிளறிவிட்டு, தண்ணீர் தெளித்து வேக விடவும்.
கீரை வெந்ததும் தேவையான உப்பு சேர்த்து கலக்கி தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும்.


இது சப்பாத்திக்கும் நன்றாக மேட்ச் ஆகும்..சாதத்துடனும் சாப்பிடலாம்.

குறிப்பு
சர்க்கரை சேர்ப்பதால் கீரையின் பசுமை மாறாம இருக்கும்னு ஒரு புத்தகத்தில படித்திருக்கேன்.கீரை வகைகள்னு இல்லை, பச்சை நிறத்தில இருக்கற காய்கறிகள் எல்லாத்துக்கும் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து சமைத்தால் நிறம் மாறாமல் இருக்குமாம்.

நான் வாங்கிய கீரையில் Malunggay -என்று எழுதிருந்தாங்க..அதுவும் இமா சொன்னமாதிரி முருங்கை குடும்பம்தான்..பிலிப்பைன்ஸ்ல இந்தப் பெயர்.(நான் வாங்கியது சைனீஸ் மார்க்கட்ல..:)) இமா,உங்கள் தகவலுக்கு நன்றி!

Wednesday, May 5, 2010

காளான் குழம்பு

மொட்டுக்காளான்(பட்டன் மஷ்ரூம்) அல்லது சிப்பி காளான்(ஆய்ஸ்டர் மஷ்ரூம்)தான் இதுவரை வாங்கியிருக்கிறேன்.இந்த வாரம் ஒரு சைனீஸ் மார்க்கெட் போயிருந்தோம்.அங்கே இருந்த விதவிதமான காளான்களில் என் கணவர் செலக்ட் பண்ணியது இந்த ட்ரம்பெட் மஷ்ரூம். ஆசியாக்கா ஸ்டைல்-ல சொல்லணும்னா, ஒரொரு காளானும் நல்லா வாட்டசாட்டமா இருந்தது.:) சுவையும் அருமையா இருந்தது.

தேவையான
பொருட்கள்
காளான் - 300 கிராம்
வெங்காயம் - 2 (மீடியம் சைஸ்)
தக்காளி -2
மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
கொத்துமல்லி விதை(தனியா) - 1 ஸ்பூன்
சீரகம் -3/4 ஸ்பூன்
சோம்பு -1/2 ஸ்பூன்
பட்டை-2 இன்ச் துண்டு
கிராம்பு-2
ஏலக்காய் -2
காய்ந்த மிளகாய்-5 (அ) காரத்துக்கேற்ப
தேங்காய்-கால் மூடி
எண்ணெய்
உப்பு
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை

செய்முறை
ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.தக்காளியையும் நறுக்கவும்.

கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் காயவைத்து தனியா,சீரகம்,பட்டை,கிராம்பு,சோம்பு,ஏலக்காய் போட்டு பொரிந்ததும் வெங்காயம்,காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
தக்காளி மசிந்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி ஆறவைக்கவும்.
ஆறியதும் மசாலாவை நைசாக அரைத்துக்கொள்ளவும்.

காளானை நன்கு கழுவி, நீரில்லாமல் துடைத்து சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கி ஒரு ஸ்பூன் எண்ணெயில் வதக்கி எடுத்து தனியாக வைக்கவும்.

மீதமுள்ள இன்னொரு வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கடுகு,வெங்காயம் கறிவேப்பிலை தாளித்து, அரைத்த மசாலா, மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு நன்றாக கொதி வந்ததும், வதக்கி வைத்த காளான் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்துமல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

இந்த குழம்பு சாதம்,தோசை,இட்லி இவற்றுக்கு பொருத்தமாய் இருக்கும்.

Monday, May 3, 2010

மலையும்,மலை சார்ந்த இடமும்..

ஒரு முன்மாலைப் பொழுதில்,இந்த பனி படர்ந்த மலைகள் சூழ்ந்த அழகான ஊரிலிருந்து கிளம்பி..


இந்த ஆப்பிள் தோட்டங்களைக் கடந்து..



மேற்கில் புதையும் சூரியனின் மஞ்சள் ஒளியில் நனைந்த இந்த மலைக்குன்றுகளையும் கடந்து..


இரவு இங்கே தங்கி..


மறுநாள் காலை,ஹைவேயில் கார்களின் வேகத்தைக் குறைத்த மோட்டார் சைக்கிள்களோடு மெதுவே ஊர்ந்து..

மீண்டும் ஒரு முன்மாலைப் பொழுதில்..


மீண்டும் ஒரு மலையும்,மலை சார்ந்த இடத்தை அடைந்துவிட்டோம்.


ஹோம்
..ஸ்வீட் ஹோம்!

Saturday, May 1, 2010

பால் காய்ச்சியாச்சு..


அனைவருக்கும் வணக்கம்..புது வீட்டுல இன்று காலை பால் காய்ச்சிட்டோம்..:)
காபி குடிக்கலாம்,வாங்க!!

Friday, March 26, 2010

நன்றி,விரைவில் சந்திப்போம்.






குலாப் ஜாமூன்

காலா ஜாமூன்

மில்க் பவுடர் குலாப் ஜாமூன்

இத்தனை ஸ்வீட் எதுக்குன்னு பார்க்கறீங்களா? ஜஸ்ட் ஒரு ஸ்வீட் பார்ட்டிதான்! எடுத்து சாப்பிடுங்க..

ஆசியா அக்காவும் விஜியும் மகி'ஸ் கிச்சனுக்கு சன்ஷைன் ப்ளாக்னு அவார்ட் குடுத்திருக்காங்க..அதனை இனிப்புடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இருவருக்கும் நன்றி! (ரெண்டுபேரும் ஒரே அவார்ட குடுத்துப் போட்டீங்களே? இப்போ எனக்கு ஒரு அவார்ட் தான் கிடைச்சிருக்கா? ;) ) ஒரு அவார்டுதான் கிடைத்திருக்கான்னு நான் காமெடியா கேட்ட அன்றே, மேனகா அவர்கள் எனக்கு இந்த அவார்டை குடுத்திருக்காங்க..மிக்க நன்றி மேனகா!


ஸாதிகா அக்கா இந்த ராணி கிரீடத்தை குடுத்திருக்காங்க..மிக்க நன்றி ஸாதிகா அக்கா! :)


இதுவரை நான் பகிர்ந்துகொண்ட ரெசிப்பிகளை/எழுதுகிறேன் பேர்வழி என்று நான் போட்ட மொக்கைகளை தவறாமல் வந்து பார்த்து, பின்னூட்டம் தந்து ஊக்கப்படுத்திய அனைத்து அன்புள்ளங்களுடனும் இந்த விருதுகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர் மகி கிச்சனில் புதிய குறிப்புகள் தொடரும். ஆதரவளிக்கும் அன்புள்ளங்களுக்கு நன்றி.. விரைவில் மீண்டும் சந்திப்போம்!

Thursday, March 25, 2010

சுரைக்காய்-தட்டைப்பயறு குழம்பு


தேவையான பொருட்கள்
தட்டைப்பயறு -1/4கப்
சுரைக்காய் -100கிராம்
புளிக்கரைசல்-1/4கப்
தேங்காய் விழுது-3ஸ்பூன்
தக்காளி-1
வெங்காயம்-பாதி
பூண்டு-3பல்
பச்சைமிளகாய்-௧
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை-சிறிது
எம்.டி.ஆர்.மெட்ராஸ் சாம்பார் பவுடர்-1 1/2ஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
கடுகு-1/2ஸ்பூன்
சீரகம்-1/2ஸ்பூன்

செய்முறை
தட்டைப்பையறை 8 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் மூன்று விசில் வைத்து(பயறு குழைந்து போகாமல்) வேக வைக்கவும்.

சுரைக்காயை தோல்நீக்கி சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கிவைக்கவும்(காய் இளசாக இருந்தால் தோலுடனே போடலாம்).

வெங்காயம்,மிளகாய்,தக்காளியை நறுக்கிவைக்கவும். பூண்டை தோல் உரித்து (பெரிய பற்களாய் இருந்தால்)நறுக்கிக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு,சீரகம் தாளித்து வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை,பூண்டு,தக்காளி மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சுரைக்காய்,புளிக்கரைசல்,தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

காய் வெந்ததும் வேக வைத்த தட்டைப்பயறு, தேங்காய் விழுது,சாம்பார் பொடி சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்கவிடவும்.

லேசாக எண்ணெய் மிதக்க ஆரம்பித்ததும் சர்க்கரை சேர்த்து,கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். இந்தக் குழம்பு சுடு சோற்றுடன் சாப்பிட சுவையாய் இருக்கும். தோசைக்கும் நன்றாக மேட்ச் ஆகும்.




குறிப்பு
தேங்காய் விரும்பாதவர்கள் தவிர்த்து விடலாம்.
தேங்காய் அரைத்து ஊற்றுவதற்கு பதில், பல்லுப்பல்லாக நறுக்கிப் போட்டாலும் நன்றாக இருக்கும்.

Wednesday, March 24, 2010

பரோட்டா


பரோட்டா...பலமுறை முயற்சி செய்து ஓரளவிற்கு செய்து பழகிட்டேன்.அதிலிருந்து ப்ரோசன் பாராட்டா வாங்கறதில்ல..மொத்தமா செய்து பிரீஸ் பண்ணிடுவேன்.

பரோட்டா செய்யும்போது ஆல் பர்ப்பஸ் மாவு யூஸ் பண்ணறதுக்கு பதிலா இண்டியன் ஸ்டோர்ல கிடைக்கும் 'மைதா மாவு' யூஸ் பண்ணினால் பரோட்டா ஸாஃப்ட்டா இருக்கு..ஆல் பர்ப்பஸ் ப்ளோர்ல செஞ்சா கொஞ்சம் ரப்பர் மாதிரி ஆயிடுது..இது ஒரு இணைய தளத்துல பாத்த டிப்ஸ்..ரெண்டு மாவுலயும் செய்து பார்த்தப்போ நல்லாவே வித்யாசம் தெரியுது. ஸோ, வெளிநாடுகள்ள இருக்கறவங்க நம்ம ஊர் கடைல கிடைக்கும் மாவுல ட்ரை பண்ணுங்க.

இது கடந்த முறை ஆல் பர்ப்பஸ் மாவுல செய்த பரோட்டா..



இந்த முறை திருமதி. அப்சரா அவர்கள் கொடுத்திருந்த ரெசிப்பியைப் பார்த்து, மைதா மாவுல செய்தேன்..அவங்க சொல்லியிருந்த அளவுக்கு பேக்கிங் பவுடர் சேர்க்க பயம்ம்மா :) இருந்ததால, அரை ஸ்பூன்தான் சேர்த்தேன்.பரோட்டா சூப்பரா வந்தது!! என் கணவர் எனக்கு 'பரோட்டா மாஸ்டர்'னு பட்டமே குடுத்துட்டார் போங்க. :D


அப்சரா,ஈசியான ரெசிப்பி தந்ததற்கு நன்றிங்க! :)

Tuesday, March 23, 2010

சேனை கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள்
சேனைகிழங்கு - 350கிராம்
அரைக்க
தேங்காய் - கால் மூடி
பூண்டு -3பல்
பட்டை,பிரிஞ்சி இலை - சிறிது
கிராம்பு - 2 (சிறியது)
சோம்பு - 1/2 ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
தனியா - 1ஸ்பூன்
தாளிக்க
எண்ணெய் -2ஸ்பூன்
கடுகு -1/2ஸ்பூன்
சீரகம் -1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4ஸ்பூன்
சர்க்கரை -1/2ஸ்பூன்
உப்பு
கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை - சிறிது

செய்முறை
சேனைக் கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கி குழையாமல் வேக வைத்துக் கொள்ளவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை
கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மைய அரைத்துவைக்கவும்.
எண்ணெய் காயவைத்து கடுகு,சீரகம்,கறிவேப்பிலை தாளித்து அரைத்த மசாலாவை சேர்த்து மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் சர்க்கரை சேர்த்து வேக வைத்த கிழங்கையும் சேர்த்து பிரட்டிவிடவும்.
மிதமான சூட்டில் மசாலாவின் தண்ணீர் சுண்டும்வரை கிளறி கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சுவையான சேனைக் கிழங்கு வறுவல் ரெடி.

LinkWithin

Related Posts with Thumbnails