Sunday, March 27, 2016

ஈஸ்டர் 2016

ஈஸ்டர் - ஏசு பிரான் உயிர்தெழுந்த திருநாள். இங்கே ஈஸ்டருக்கு "எக் ஹண்ட்" மிக பிரபலம். "முட்டை" உயிர்த்தெழுதலின் அடையாளமாகக் கொள்ளப்படுகிறது. ப்ளாஸ்டிக் முட்டைகளுக்குள் குழந்தைகளுக்குப் பிடித்தமான தின்பண்டங்கள், சிறு பொம்மைகளை வைத்து ஆங்காங்கே ஒளித்து வைக்கப்படுகிறது. குழந்தைகள் கூடைகளுடன் சென்று முட்டைகளைச் சேகரிப்பார்கள். பொதுவாக சாக்லேட் அதிகளவு உபயோகிக்கப்படுகிறது. முட்டைவடிவிலேயே சாக்லெட்ஸ் தயாரித்து விற்கிறார்கள், அல்லது ப்ளாஸ்டிக் முட்டைகளுக்குள் அவை வைக்கப்படுகின்றன.  மேலும் தகவலறிய இங்கே கைய வைங்க! :) 

எங்க வீட்டு குட்டிப்பெண்ணுக்கு இந்த சர்ப்ரைஸ் எக்'ஸ் மிகப் பிடிக்கும் என்பதால், இந்த வருஷம் ஈஸ்டர் எக் ஹண்ட்-க்கு போகலாம் என்று நினைத்திருந்த நேரத்தில், பக்கத்தில் ஒரு எக் ஹண்ட் நடப்பது தெரியவர, நாங்களும் முட்டைகளைத் தயார் செய்துகொண்டு, முட்டை வேட்டைக்கு போய்வந்தோம்.  குழந்தைகளுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில் உணவுப்பொருட்கள் பிரச்சனையாகும் என்பதால் உணவுப்பொருட்களை ஸ்டஃப் செய்யவேண்டாம் என சொல்லியிருந்தார்கள். இணையத்தை நாடியதில், உணவுப்பொருட்கள் அல்லாத சிறு பொருட்கள் பற்றி ஒரு ஐடியா கிடைத்தது. 

கலர்ஃபுல் ப்ளாஸ்டிக் முட்டைகள், உள்ளே வைக்க பலூன்கள், குட்டி பந்துகள், டைனோஸர்கள், ஸ்டிக்கர், க்ளோ ஸ்டிக், எரேஸர் என எனக்குப் பிடித்த (!!) குட்டிப் பொருட்களை வாங்கிவந்தேன்..அடுத்து ஒவ்வொரு முட்டையிலும் குட்டீஸுக்கு ஆச்சரியங்களை ஸ்டஃப் செய்யும் வேலை...
ஒவ்வொரு முட்டையினுள்ளும் 2-3 குட்டிப் பொருட்களை நிறைத்து முட்டைகள் தயார். 
அருகே உள்ள ஒரு பூங்காவிற்கு சென்றோம். ஏழெட்டு குழந்தைகள், அனைவர் வீட்டிலிருந்தும் இப்படியான சர்ப்ரைஸ் முட்டைகளைக் கொணர்ந்து பூங்காவினுள்ளே ஒளித்து வைத்தாயிற்று. [ஒளிப்பதுன்னா, ரொம்பவெல்லாம் ஒளிக்கிறதில்லைங்க, குழந்தைங்க கண்டுபுடிக்கிற மாதிரி சும்மானாச்சுக்கு ஒளிச்சு வைச்சாச்சு.] எல்லாக் குட்டீஸும் வந்து, முட்டைகள் ஒளிக்கப்பட்டதும் துவங்கியது முட்டை வேட்டை!! :))) 
சற்றே பெரிய குழந்தைகள் சுறுசுறுப்பாக முட்டைகளைப் பொறுக்கி சேர்த்துவிட்டனர். ஒரு குட்டியர் வேட்டையாடிய முட்டைகள்..
லயாவும் நானுமாகச் சேர்ந்து கொஞ்சம் முட்டைகள் சேகரித்தோம். அதிலொன்று "தங்க முட்டை" :))) அது என்ன ஸ்பெஷல்னு கடைசில சொல்றேன். 

முட்டை வேட்டை முடிந்ததும் ஒரு சிறப்பு விருந்தினர் வந்தார். பெயர் Mr. Muffin !! நாலே மாதங்களான குட்டி முயலார்!!
கூட்டத்தைக் கண்டதும் மிஸ்டர் மஃபின் கொஞ்சம் பயக்க, அவரைக் கண்ட குட்டீஸ் கொஞ்சம் பயக்க என சற்று நேரம் கடந்தது. ஃபோட்டோஷூட் எல்லாம் ஓரளவு முடிந்ததும், முயலார் பூங்காவினுள் சற்று நேரம் உலாவினார். மஃபினும், அவரது உரிமையாளரும் அடுத்து வரும் படத்தில்.
இவைதான் லயா சேகரித்த முட்டைகள். தங்க முட்டையை திருப்பி வாங்கிகொண்டார்கள்! ;) :)

அந்த தங்க முட்டை விவகாரம்...!! :) ஸ்பெஷலாக 3 தங்க முட்டைகளை நிகழ்ச்சியை நடத்தியவர்கள் ஒளித்திருந்தார்கள். அதைக் கண்டுபிடித்தவர்களுக்கு ஒரு கிஃப்ட் கார்ட் கிடைத்தது. வரும் வழியில் காப்பியை வாங்கி குடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம். 

வீட்டிற்கு வந்து சர்ப்ரைஸ் எக்ஸ்-ஐ திறந்து பார்த்த போது...

பலூன்கள், சிறிய ரப்பர் முயல், டாட்டூ, ஜெல்லி பீன்ஸ் என இருந்தன. :))) மொத்தத்தில் நல்லதொரு அனுபவம்.  ;) :) 

Tuesday, March 22, 2016

ராகி சேமியா

ராகி சேவை, கோதுமை சேவை, தக்காளி சேவை, கம்பு சேவை என தமிழகத்தில் விதவிதமாக கிடைத்தாலும், இங்கே ராகி "சேமியா" கிடைத்தது இதுவே முதல் முறை.  மேகி நூடுல்ஸ் இருக்கும் பக்கம் இந்த "அணிலாரை"ப் பார்ததும் வீட்டுக்கு கூட்டிவந்துவிட்டேன். இப்படியான சேமியாவை நான் (மட்டுமே) செய்வது முதல்முறை. ஊரில் அம்மாவோ அக்காவோ செய்வார்கள், பக்கத்தில் நின்று பார்த்ததோடு சரி. கொஞ்சம் பயந்துகிட்டே செய்தேன், ஆனா அவ்வளவு கடினமில்லை..சூப்பரா இருந்தது. நீங்களும் செய்து பாருங்க. 

தேவையான பொருட்கள்
ராகி சேமியா - 2கப் 
வெங்காயம்- பாதி
பச்சைமிளகாய் - 4 (காரத்துக்கேற்ப)
வரமிளகாய் -1 
தக்காளி -1
கடுகு -1/2டீஸ்பூன்
கடலைப்பருப்பு -1டீஸ்பூன்
உளுந்து பருப்பு -1டீஸ்பூன் 
எண்ணெய்
உப்பு 

செய்முறை
2 கப் சேமியாவுக்கு சுமார் 4 கப் தண்ணீர் (சூடாக்க தேவையில்லை, பச்சைத்தண்ணீரே போதும்) எடுத்து தேவையான உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும். 

உப்பு கரைந்ததும் ராகி சேமியாவை தண்ணீரில் போட்டு 3 நிமிடங்கள் வைக்கவும். 

*மூன்று நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரை வடித்துவைக்கவும். 

இட்லிப் பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி, ஊறிய ராகி சேமியாவை வைத்து 5-6 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும்.
 சேமியா வெந்ததும் எடுத்து ஆறவைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, க.பருப்பு-உ.பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம்-ப.மிளகாய், கிள்ளிய வர மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் **உப்பு சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைய வதங்கியதும் ஆறிய ராகி சேமியாவை உதிர்த்துப் போட்டு கிளறவும்.
 சேமியா வெங்காயத்துடன் நன்கு கலந்து சூடேறியதும் அடுப்பிலிருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.
குறிப்பு
* தண்ணீரில் ஊறப்போடும் சேமியாவை 3 நிமிடங்களுக்கு மேல் ஊறவைக்கவேண்டாம்..அதிக நேரம் ஊறினால் கூழ் போல் ஆகிவிடும், கரெக்டா 3 மினிட்ஸ் மட்டும் வைங்க. (இது அந்த சேமியா பாக்கட்டிலயே போட்டிருக்காங்க..நான் பயமுறுத்தலை!! ஹிஹி...)
** சேமியாவை ஊறவைக்கும்போதே உப்பு கலந்த தண்ணில தானே ஊறவைக்கிறோம் என தவறாக நினைக்கவேண்டாம். எனக்கென்னவோ அந்த 3 நிமிட ஊறவைத்தலில் உப்பு சேமியாவில் பிடிக்கிற மாதிரி தெரியவில்லை. நீங்க பாத்து போட்டுகுங்க. :)

Tuesday, March 15, 2016

அவசர சாம்பார் / இன்ஸ்டண்ட் சாம்பார்

பருப்பு இல்லாமல்,  தேங்காயும் தேவைப்படாத சாம்பார் இது. சும்மா இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாலைப்பொழுதில் இந்த ரெசிப்பி கண்ணில் பட சட்டென்று செய்து சாப்பிட்டாயிற்று. நீங்களும் செய்து பாருங்க..ஈஸி & டேஸ்ட்டி! 

தேவையான பொருட்கள்
வெங்காயம் - பாதி (அ) சின்ன வெங்காயம் - நாலைந்து 
பச்சைமிளகாய்-1
நறுக்கிய காய் - 1/2கப் [விருப்பமான காயைச் சேர்த்துக்கொள்ளலாம். நான் மஞ்சள்பூசணி/அரசாணிக்காய் சேர்த்திருக்கிறேன்]
கடுகு-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து, கொத்துமல்லித் தழை -கொஞ்சம் 
சர்க்கரை -1/2டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்
அரைத்துக்கொள்ள
பொட்டுக்கடலை -1டேபிள்ஸ்பூன்
நன்கு பழுத்த தக்காளி -2 
புளி - சிறுதுண்டு
சாம்பார்பொடி -2டீஸ்பூன் 
சீரகம்-1/2டீஸ்பூன் 

செய்முறை
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் எடுத்து,
அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை, தக்காளி இருப்பதால் அதுவே போதும்.
காயை சற்றே பெரிய துண்டுகளாகவும், வெங்காயம் பச்சைமிளகாயையும் நறுக்கி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் சூடாக்கி, கடுகைப் பொரியவிடவும். பிறகு கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய காயைச் சேர்த்து வதக்கவும்.
அரைத்த கலவையை குக்கரில் சேர்த்து,
தேவைக்கு தண்ணீர் மற்றும் உப்பு, சர்க்கரையைச் சேர்க்கவும். நான் சுமார் 1 கப் தண்ணீர் சேர்த்தேன், உங்களுக்கேற்ற கன்ஸிஸ்டன்சி-க்கு தண்ணீரை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
குக்கரை மூடி, ஒரு விசில் விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். நறுக்கிய மல்லித்தழை தூவி பரிமாறவும்.
பதிவின் முதல் படத்தில் இருப்பது ஓட்ஸ் பொங்கல் & சாம்பார்...இறுதிப் படத்தில் இருப்பது இட்லி & சாம்பார்.
குக்கரின் விசிலை கவனிக்காமல் 2-3 என்று போனதில் நான் சேர்த்த காய் சாம்பாரில் கரைந்துவிட்டது, ஹிஹி...ஆனால் சுவை அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி!

Recipe Link : HERE

Tuesday, March 8, 2016

வானவில்

காலையில் கண் விழிக்கும்போதே இடியின் தாளத்துடனும் மழையின் ஜதியுடனும் மின்னலின் நடனத்துடனும் விடிந்த ஒரு நாள்..
மப்பும் மந்தாரமுமாய், சில நிமிஷம் வெயிலும் சில நேரம் கருக்கலுமாய்க் கழிந்து..
சூரியன் தன் வேலையை முடித்துக்கொண்டு கடல்மடியில் உறங்கச் செல்லுமுன் இந்த மனிதர்களுக்குச் சிலநிமிடங்கள் இன்னுமொரு அழகான சந்தோஷத்தைக் கொடுப்போமென 
கருமேகங்களுடன் கூட்டணி சேர்ந்து வானவில் தரிசனத்தைக் கொடுத்துச் சென்றது, நேற்று மாலை!

வயது வித்யாசமில்லாமல் அனைவரையும் அட்டாக் செய்து, தன் வண்ணவில்லால் சிரிப்பைச் சிதறவிட்டு, கையில் இருந்த கருவிகளால் புகைப்படமும் எடுக்கச் செய்து, பூமியில் நமது இருப்பை "Kid in a candy store"- ஆகக் கொண்டாடச் செய்யும் இயற்கைக்கு என்ன சொல்லி நன்றி சொல்ல??!!
மழைத்துளி மண்ணில் வந்து சிந்தச் சிந்த 
எழுகிறதே ஒரு வாசம்...
அது எனை வானவில்லில் கொண்டு
 சேர்த்து விடுகிறதே சில நேரம்!! 



அனைவரும் நலமாய் இருக்கிறீர்கள்தானே? சில நாள் வலைப்பூ பக்கம் வர இயலாது என்று நினைத்தது சிலமாதங்களாய் நீண்டுவிட்டது. இதற்கு மேலும் விட்டால் சரிவராது என்று கஷ்டப்பட்டு அப்படி இப்படீன்னு ஒரு நாலு ஃபோட்டோவை வச்சு ஒரு பதிவு தேத்தி அட்டனன்ஸ் போட்டாச்சு. இனி வழக்கம்போல அடிக்கடி சந்திக்கலாம்..என்ன சொல்றீங்க?
...
.......
..
..........அச்சச்சோ, பின்னங்கால் பிடரியில் பட ஓடாதீங்க..எப்பவும்போல, நிதானமாப் படிச்சுட்டு, படங்களைப் பாத்துட்டு, பாட்டும் கேட்டுட்டு, டைமிருந்தா ஒரு கமெண்ட்டும் போட்டுட்டு மறுபடி மறுபடி வாங்க! :)))) நன்றி, வணக்கம்! 

Thursday, November 19, 2015

கோயா குலாப் ஜாமூன்(Khoya Gulaab Jamoon)

தேவையான பொருட்கள் 
இனிப்பில்லாத பால்கோவா/கோயா/மாவா - 200கிராம் 
மைதா மாவு -1/4கப் 
ஆப்ப சோடா/ பேக்கிங் சோடா - 2சிட்டிகை 
பால் -1/4கப்
சர்க்கரை - 11/4கப்
தண்ணீர் - 11/4கப் 
ஏலக்காய்-2 
எண்ணெய் - பொரிக்க 

செய்முறை 
கோயா-வை 3-4 மணி நேரங்கள் முன்பாகவே ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வெளியே வைக்கவும். அறை வெப்பநிலைக்கு வந்தவுடன் அதனை கைகளால் உதிர்த்துக்கொள்ளவும். 
நான் காய்துருவியால் கோயாவை துருவி இருக்கிறேன். 

துருவிய கோயாவுடன் பேக்கிங் சோடா, மைதா மாவு சேர்க்கவும்.
கைகளால் நன்றாக பொடித்துவிட்டுக் கொண்ட பிறகு, கொஞ்சம் கொஞ்சமாகப் பால் தெளித்து பிசையவும்.
அழுத்திப் பிசையத் தேவையில்லை.. விரல்களால் மென்மையாக பிசிறி விட்டு மாவு ஒன்றாக சேர்த்து வந்ததும் 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். உருண்டைகள் விரிசல் விழாமல் ஸ்மூத்-ஆக இருக்கும்படி உருட்டிவைக்கவும்.
மிதமான தீயில் எண்ணெய் காயவைத்து குலாப் ஜாமூன்களை பொரிக்கவும்.
பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
சர்க்கரைப் பாகுக்கு :-
11/4 கப் சர்க்கையுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்..பாகு கொதி வர ஆரம்பித்த 5 நிமிடங்களில் இறக்கி வைக்கவும். ஏலக்காயைத் தட்டிப் போடவும்.

பாகும் சற்று சூடாக இருக்கவேண்டும், ஜாமூன்களும் சற்றே சூடாக இருக்கவேண்டும். ஜாமூன்களை சர்க்கரைப்பாகில் போட்டு ஊறவிடவும்.
இரண்டு மூன்று மணி நேரங்கள் ஊறியதும் சுவையான குலாப்ஜாமூன் ரெடி.

Wednesday, November 4, 2015

ஆப்பம் - தேங்காய்ப்பால்

தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1கப்
புழுங்கலரிசி -1 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உளுந்துப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பழைய சாதம் - 1/4 கப்
தேங்காய்த் தண்ணீர் 

செய்முறை
மறுநாள் ஆப்பத்துக்கு அரைக்க சில முன்னேற்பாடுகள் : 
அரிசிகள், வெந்தயம், உளுந்து இவற்றை நன்றாக 2-3 முறை அலசி 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
சாதத்தில் தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஃப்ரிட்ஜில் ஊறவைக்கவும்.
தேங்காய் வாங்கி வைத்துக்கொள்ளவும். :)

1.காலையில் அரிசிகளை தண்ணீர் வடித்துவைக்கவும். 
2.பழைய சாதத்தையும் ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து வைக்கவும்.
3.தேங்காயை உடைத்து கவனமாக தண்ணீரை எடுக்கவும்.அதனை வடித்து வைத்துக்கொள்ளவும்.
4.அரிசி, பழைய சாதம் இவற்றை கிரைண்டரில் போட்டு தேங்காய்த்தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும். [சில தேங்காய்களில் தண்ணீர் குறைவாக இருக்கும், அப்படியாயின், தேங்காய்த்தண்ணீருக்குப் பிறகு தேவையான தண்ணீரையும் சேர்த்து அரைக்கவும். நான் வாங்கிய தேங்காயில் நிறையத் தண்ணீர் இருந்தது. மாவரைத்தது போகவும் மீதமானது! :)]
5. மாவு நைஸாக அரைபட்டதும் கொஞ்சமாக உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
6. சுமார் 8-10 மணி நேரங்கள் புளித்ததும் மாவு நன்றாக பொங்கி மேலே வந்திருக்கும்.

தேவையான அளவு மாவை எடுத்து தண்ணீர் சேர்த்து கரைக்கவும். தோசை மாவை விடவும் கொஞ்சம் தண்ணீராக இருக்கவேண்டும்.
ஆப்பச்சட்டி அல்லது குழிவான தோசைக்கல்லை காயவைத்து மாவை ஊற்றி, ஆப்பச்சட்டி/தோசைக்கல்லை சுழற்றி மாவு வட்டமாக பரவச் செய்யவும். மூடி போட்டு வேக விடவும்.
ஆப்பம் வெந்ததும் கல்லை விட்டு எழும்பி வரும். சூடான ஆப்பத்தை தேங்காய்ப்பால் மற்றும் விருப்பமான சட்னி- குருமா- ஸ்டூவுடன் பரிமாறவும்.

தேங்காய்ப்பால் (ஷார்ட் கட்)
தேவையான பொருட்கள்
பசும்பால் - 1 கப்
தேங்காய்ப்பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன் 
சர்க்கரை - சுமார் 1/4கப் (சுவைக்கேற்ப)
ஏலக்காய் - 2 
செய்முறை
பாலை காய்ச்சவும்.
பால் பொங்கி வந்ததும் அடுப்பின் தணலை குறைத்து சர்க்கரை மற்றும் தேங்காய்ப்பால் பொடியைச் சேர்த்து கட்டியில்லாமல் கலந்துவிடவும்.
சர்க்கரை கரைந்து சில நிமிடங்கள் சூடானதும் அடுப்பிலிருந்து இறக்கி, பொடித்த ஏலக்காயைச் சேர்க்கவும். 

குறிப்பு 
தேங்காய்த் தண்ணீர் சேர்த்து அரைத்தால் அருமையாக இருக்கும், கிடைக்காத பட்சத்தில் டெஸிகேடட் தேங்காய்த்துருவல் 2 டேபிள்ஸ்பூன் சேர்த்தும் அரைக்கலாம். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை! :) 
நேரமும் வசதியும் பொறுமையுமிருப்பவர்கள் தேங்காயை அரைத்தே பால் எடுத்து சர்க்கரை ஏலக்காய் சேர்க்கலாம். :) 
பழைய சாதம் சேர்க்காமல் செய்தால் ஆப்பம் வறண்டு போன மாதிரி இருக்கும், அதனால் கண்டிப்பாக சோறு சேர்க்கவேண்டும். 

Friday, October 30, 2015

முளைகட்டிய பச்சைப்பயிறு குழம்பு

தேவையான பொருட்கள்
முளை கட்டிய பச்சைப்பயறு -1/4கப்
உருளை கிழங்கு (சிறியது) -1
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் -1
பூண்டு - 5 பற்கள்
புளிக்கரைசல் -1/4கப்
வத்தக்குழம்பு பொடி - 11/2டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/8டீஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
கொத்துமல்லித் தழை -கொஞ்சம்
உப்பு
எண்ணெய்
அரைக்க 
தேங்காய்த்துருவல் - 3டேபிள்ஸ்பூன்
தக்காளி (சிறியதாக) -2

செய்முறை 
1.பச்சைப்பயறை 8 மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து மூடி வைக்கவும். 8 -10 மணி நேரங்களில் பயிறு முளைத்துவிடும்.
2.முளைத்த பயறை தேவையான தண்ணீர் விட்டு குழையாமல் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
3. பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து, கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். 
4.வெங்காயம் நிறம் மாறியதும் நறுக்கிய உருளைக் கிழங்கு, வத்தக்குழம்பு பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

5.சிறிது தண்ணீர் சேர்த்து கிழங்கை வேகவிடவும். வெந்ததும் புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
6. தேங்காய் தக்காளியை நைஸாக அரைத்துக்கொள்ளவும்.  
7.  குழம்பு நன்கு கொதித்து புளியின் பச்சை வாடை போனதும், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். 
8. வேகவைத்த பயிறை சேர்க்கவும். தேவைப்பட்டால் இன்னும் தண்ணீர் விட்டு மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
9. குழம்பில் எண்ணெய் தெளிந்து வந்ததும் 1டீஸ்பூன் சர்க்கரை (விரும்பினால்) சேர்த்து,  கொத்துமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும். 
சுவையான முளைப்பயிறு குழம்பு ரெடி. சாதம், இட்லி தோசை எல்லாவற்றுக்கும் நன்றாக இருக்கும்.

குறிப்பு
தேங்காய் சேர்க்க விரும்பாதவர்கள்(6-வது ஸ்டெப்பில் உள்ள) தேங்காய்க்கு பதிலாக 2 டேபிள்ஸ்பூன் வேகவைத்த முளைப்பயிறை தக்காளியுடன் சேர்த்து அரைத்துச் சேர்க்கலாம்.
உருளைக்கிழங்குடன் கத்தரிக்காயும் சேர்க்கலாம். கத்தரிக்காய் கைவசம் இல்லாததால் சேர்க்கவில்லை.
வத்தக்குழம்பு பொடி இல்லையென்றால் மிளகாய்த்தூள்+மல்லித்தூள் சேர்த்துக்கொள்ளலாம். 

Sunday, October 25, 2015

நரி முகத்தில முழிச்சிருக்கீங்களா? :)


என்னங்க...ஏடா கூடமா டைட்டில் வச்சிருக்கனே பாக்கிறீங்களா? வேற என்னத்தச் செய்ய?! சும்மா கம்பு தோசையும், சட்னியும் , குழம்புமாவே ப்ளாகில எழுத போரடிக்குதுல்ல? அதனால என்னைய அடிச்ச போர உங்களுக்கும் அடிக்க வைக்கலாம் என்ற ஒரு நல்லெண்ணத்தில தலைப்ப வச்சுப்புட்டேன். ஹிஹிஹி...

தலைப்புக்கேத்த மாதிரி என்ன செய்யலாம்னு சோஃபால உட்கார்ந்து யோசிச்சதில சமீப காலமா எங்க ஏரியாவுக்கு வருகை தரும் விசிட்டர்ஸை உங்களுக்கும் அறிமுகப்படுதலாம்னு பல்பு எரிஞ்சுது.

எங்கள் வீடு இருக்கும் பகுதி ஊரின் ஓரம் என்பதால், வீட்டிற்கடுத்த படியாக மலைச்சரிவுகளும், ஒரு அவகாடோ தோட்டமும், காட்டுப்பகுதியுமாகத்தான் இருக்கும். எப்பொழுதாவது  "கயோட்டி" என்னும் மிருகம் எட்டிப்பார்ப்பதும்,  காட்டிற்குள் இருந்து இரவு நேரங்களில் சத்தமிடுவதுமாக இருக்கும். இங்கிருந்த 5 வருடங்களில், பலமுறை அவற்றின் சிரிப்பை (ஆமாங்க..அவை சத்தமிடுவது மனிதர் சிரிப்பதைப் போலவே இருக்கும்...அவ்வ்வ்வ்வ்)  நான் ஒரு முறை கூடப் பார்த்ததில்லை. ஆனால் கொஞ்ச நாட்களாகவே வீட்டெதிரே இருக்கும் சிறு குன்றின் சரிவிற்கப்பாலிருந்து ஒரு சில "கயோட்டி"-கள் குன்றின் மேலே ஏறி நடை பழக ஆரம்பித்திருக்கின்றன.

தனியாகவும், ஜோடியாவும், குடும்பத்தினருடனும் என்று மாலை மயங்கும் நேரங்களில் இவர்களது வருகை இருக்கும். ஜீனோ அவற்றை கண்டுகொண்டு "வள்..வள்..வள்ள்ள்ள்ள்" என்று வரவேற்பு கொடுப்பார். அவர்களுக்கு மனிதர் மற்ற விலங்குகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, நிதானமாக நின்று ஒரு லுக்கு விடுவார்கள். அவசரப்படாமல் 5-10 நிமிஷங்கள் நின்று "எதற்கு இந்த சின்னக் குள்ளன் (ஜீனோ! :) ) சித்திரக்குள்ளன் மாதிரி கத்தறான்? " என்று ஆலோசனை பண்ணிவிட்டு ஜாலியாக நடந்து போவார்கள்.

இப்படியாக இருந்தது..ஒரு வார இறுதியில் மாலை 3.30-4 மணி இருக்கும், காய்ந்த துணிகளை எடுத்து மடித்து வைத்துக்கொண்டிருக்கையில் வெளியே வந்த என்னவர், "ஏய்..அங்கே பார்" என எக்ஸைட்டட் ஆக சின்னக் குரலில் கத்த...எட்டிப் பார்த்தால்...

வீட்டெதிரே இருக்கும் பார்க்கிங் லாட்டில் கார்களுக்கப்பால் ஹாயாக ஒருவர் மேய்ந்து(!!?) கொண்டிருந்தார்..சட்டென்று கேமராவை எடுத்து வந்த படமெடுக்க, வழக்கம்போல "யாரிவர்கள்...எதற்கு நம்மை படமெடுக்கிறார்கள்?" என்று அசால்டாக சிறிது நேரம் பார்த்துவிட்டு, நிதானமாக ரோட்டில் இறங்கி நடந்து சென்று மறைந்தார்.
யார்ரா அது...நம்மளை போட்டோ புடிக்கிறது??
போட்டோ தான? புடிச்சாப் புடிக்கட்டும்...நமக்கென்ன? 
சரி..அப்படியே மேலே ஏறிப் போயிரலாமா?
இல்ல...கீழ இறங்கலாம்...
ஆச ஆசையாப் படம் புடிக்கறாங்க...அயகா:) ஒரு போஸ் குடுப்பம்..!!
ஓகே..கிளம்புறன்!
என்னய்யா இது? நடக்குறதையும் விடாமப் படம் புடிக்கிறாய்ங்க? நம்ம நடக்கத்தான ரோடு போட்டு வைச்சிருக்காங்க? ஹ்ம்ம்ம்ம்....
ஸ்பீட் லிமிட்டு 5 மைலாம்..கி கி கி!! நாங்கள்லாம் ஆரு? எங்களுக்கெல்லாம் நோ லிமிட்!! 
வந்ததுக்கு சாப்புட ஏதும் கிடைக்கலன்னாலும் நல்லாப் போஸ் குடுத்தாச்சு...வர்ட்டா?? பய்..பய்ய்ய்ய்ய்!! 
:))) 

பி.கு. இந்த கயோட்டிகள் நாய்க்குடும்பத்தைச் சேர்ந்த பிராணிகள். மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் புகுந்து குப்பைத்தொட்டிகளை ஆராய்ந்து உணவைத்தேடும் நிலைமைக்கு வந்துவிட்டன. மனிதர்கள்,  வளர்ப்புப் பிராணிகளையும் தாக்க வாய்ப்புண்டு..நாய்கள், பூனைகளை அடித்துத் தின்னும் என்றும் சொல்கிறார்கள். மேலதிக தகவலுக்கு விக்கிபீடியா லிங்க் இங்கே...(Coyote)

LinkWithin

Related Posts with Thumbnails