Thursday, August 22, 2013

வெள்ளெருக்கம் பூ

நம்மிடம் இருக்கும் ஒரு பொருள் நம்மிடமே இருக்குமட்டும் அதனை கண்டுகொள்ளாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருப்போம். அதுவே இன்னொரு ஆளிடம் சென்றுவிட்டு மீண்டும் நம்மிடம் வரும்போது ஒரு கூடுதல் கவனிப்பு கிடைத்துவிடும் அதற்கு! :) என்னங்க, ஓவரா குழப்புறேனா? :) 

அது ஒண்ணுமில்லை, அந்தப் "பொருள்" என்னோட சாவிக்கொத்து! வீட்டுச்சாவியுடன் மெயில் பாக்ஸின் சாவி, அபார்ட்மெண்ட் கேட் சாவி மற்றும்  ஒரு thumb drive-ஐக் கோர்த்து வைத்திருப்பேன். (thumb drive-ல் ஊரில் எடுத்த படங்கள் மொத்தமும் இருக்கு)...ஸ்ஸ்ஸ்,, பொறுமை! தலையச் சுத்தினாலும் கடைசில கரீக்ட்டா மூக்கைத் தொட்டுடுவேன்னு தெரியுமில்ல, அப்புறம் எதுக்கு டென்ஷன் ஆகறீங்க? வெயிட்!!

வீட்டில் இருக்கும்வரை சாவி வீடு திறக்க பூட்ட மட்டுமே உபயோகம்! நேற்று என்னவர் சாவியை மாற்றி எடுத்துப் போய்விட்டார். அப்பதான் சாவிக்கொத்தை அவ்வ்வ்வ்வ்வளவவவவு மிஸ் பண்ணேன்என்பது புரிந்ததுன்னா பாத்துக்குங்களேன்! ;) தபால் வந்திருக்கான்னு செக் பண்ண முடில, ஒரு வாக் போக அபார்ட்மெண்ட்டை தாண்டி வெளில போக முடில. கை ஒடஞ்ச மாதிரி இருந்தது. மாலையில் இவர் வீடு வந்ததும் சாவியைக் கைப்பற்றிட்டேன். அப்ப thumb drive கண்ணில் படவே, சுடச்சுட ஒரு பதிவும் ரெடி! :)) 
~~~
கடந்த அக்டோபரில் பெங்களூருக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அங்கே விநாயகர் சதுர்த்தி ஊர்லவங்கள் நடைபெற்றவண்ணம் இருந்தன. ஒருநாள் நாங்கள் ஊர் சுற்றிவிட்டு வீடு திரும்புகையில் கடந்து சென்ற அழகான விநாயகர்..
உச்சிக்கொண்டை எல்லாம் போட்டுக்கொண்டு வெகு அழகாக இருந்தார். அவரைக் கண்டு ரசித்தவாறே வீட்டில் நுழையத் திரும்பியபோது பாதையின் இருபுறமும் எருக்கஞ்செடிகள் தலையாட்டின. வெள்ளெருக்கு என்றால் விநாயகர்-தான் என் டிக்‌ஷனரியில்! சிறு வயதில் இருந்தே நேரம் கிடைக்கையில் வெள்ளை எருக்கஞ்செடிகள் தேடி பூப்பறித்து மாலை கோர்த்து அருகிலிருக்கும் விநாயகர் கோயிலுக்கோ, வீட்டிலிருக்கும் படங்களுக்கோ சாற்றுவது வழக்கம். இத்தனை வருஷங்கள் கழித்து கண்டுகொள்வாரில்லாமல் வெள்ளெருக்கு பூத்திருக்கையில் என் கை கம்மென்று இருக்குமா? :) எல்லாருமாகச் சேர்ந்து பூக்களைப் பறித்துவந்து மாலையாக்கினோம். :) 
வெள்ளெருக்கு 
எருக்கு- குடும்பத்தில் சுமார் 9 வகையான எருக்கஞ்செடிகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். வெகுசாதாரணமாக நம் கண்ணில் படும் கத்தரிப்பூ நிற எருக்கம் பூச்செடி ஒன்று, அதிக இடங்களில் தலைகாட்டாமல் ஆங்காங்கே ஒளிந்து இருக்கும் வெள்ளெருக்கு இவையே எனக்குத் தெரிந்தவை. எருக்கு விஷத்தன்மை வாய்ந்தது என்றாலும் இந்த வெள்ளெருக்கு அதற்கு விதிவிலக்கு. பல்வேறு மருத்துவகுணங்கள் கொண்டதாம், இதனை வீட்டில் வளர்க்கலாம், விநாயகர் மற்றும் சிவனுக்கு உகந்த பூ என்றும் சொல்கிறார்கள்.  12 ஆண்டுகள் மழை இல்லாவிட்டாலும் சூரியஒளியினைக் கொண்டே உயிர் வாழும் சக்தி கொண்டாதாம் எருக்கஞ்செடிகள். வெள்ளெருக்கின் வேரில் செய்யப்படும் பிள்ளையார் சிலைகள் மிகவும் பிரபலமானவை. வெள்ளெருக்கின் பட்டையை விளக்கேற்ற திரியாகப் பயன்படுத்தலாமாம். இது பற்றிய இன்னும் மேலதிக தகவல்கள் வேண்டுவோர் இங்கே பாருங்கள். பல ஆன்மீக விவரங்கள் தரப்பட்டுள்ளன. 

வெள்ளெருக்கின் மொட்டுக்கள். கோடை விடுமுறை நாட்களில் கண்ணில் படும் எருக்கம்மொட்டுக்களை டப்-டப் என அமுக்கி உடைத்து "பாஸா-ஃபெயிலா?" விளையாடிய நினைவு வருகிறதா?! :) ;)  முற்றிலும் மலர்ந்த எருக்கம் பூ என்றில்லாமல், ஓரளவு முதிர்ந்த மொட்டுக்களையும் பறித்து மாலைகோர்க்கலாம். 
முழுவதும் மலர்ந்த வெள்ளெருக்கு மலர். பறிக்கையில் கைகளில் எருக்கம்பால் படும், கவனமாகப் பறித்துவந்து கையாளவேண்டும். 
இந்த செடியில் எதிரிலேயே சாதாரண  எருக்கஞ்செடி ஒன்றும் இருந்தது. படங்களைப் பார்த்தாலே வண்ணங்களின் வேறுபாடு தெள்ளென விளங்கும்.  விநாயகர் சதுர்த்தி நேரங்களில் இந்த வயலட் எருக்கம்பூவும் மாலையாகி பூமார்க்கெட்களில் இடம்பிடித்திருக்கும். இந்தப் பூக்களை கடவுளுக்கு படைக்கலாமா எனத்தெரியவில்லை. 

சரி..எருக்கம்பூக்கள் பறிச்சாச்சு, இனி அவற்றை சுத்தம் செய்து மாலையாக்கலாம். முதிர்ந்த மொட்டுக்களையும் பறிக்கலாம் என சொன்னேன் அல்லவா? அவற்றை கைகளால் உடைத்து பிரித்தபிறகும் 2-ஆம் எண் உள்ள பூப்போல இருக்கும். முதலில் பெரிதாக இருக்கும் அந்த 5 இதழ்களையும் பூவின் காம்புடன் பிரித்து எடுக்கவேண்டும். எண்3-ல் உள்ள பூ மட்டிலும் தனியே வரும். 
அந்த மலரின் தலையில் இருக்கும் சிறு கொண்டை போன்ற பகுதியையும் பிய்த்து எடுத்த பின்னால் (எண்-4) மாலை கோர்க்க வெள்ளெருக்கம்பூ தயார். ஒரு சிலர் இப்படியெல்லாம் பூவுக்கு சிசுருஷைகள் செய்யாமல் 'அப்படியே' கோர்த்தும் போடுகிறார்கள். ஆனால் இப்படிச் செய்வதுதான் என் பெரியம்மா எனக்குச் சொல்லிக்கொடுத்த வழக்கம். 
கொஞ்சம் வேலை அதிகம் போல இருந்தாலும் எனக்குப் பிடித்தமான வேலை இது! :) இனி பூக்களை ஊசி-நூல் கொண்டு கோர்த்தெடுக்கவேண்டும்.
உதவிக்கு பல கைகள் இருந்ததால் வெள்ளெருக்கு மாலை விரைவில் தயார் ஆகிவிட்டது.
முதலில் வீட்டிலேயே இருந்த விநாயகருக்கே சாற்றிவிடலாமா என யோசித்தோம். பிறகு அருகிலேயே பிள்ளையார் கோயில் ஒன்று இருப்பதாகத் தெரியவும், அடுத்தநாள் காலையில் கோயிலுக்குச் சென்று பிள்ளையாரை தரிசித்து மாலையையும் சாற்றிவிட்டு வந்தோம். 
கோயிலில் ஹாய் சொன்ன அணில் பிள்ளை! நல்லா பார்த்துக்குங்க, நம்மூரு அணிலுக்கு முதுகில 3 கோடு எப்படி பளிச்சுன்னு தெரியுது என! :)
விநாயகர் இந்தப் பதிவினை ஆக்ரமித்துவிட்டதால், அவருக்குப் பிடித்தமான கொழுக்கட்டையே அவருக்கு நைவேத்யமாகத் தயாரிக்கப்பட்டு, படிக்கும் உங்களுக்கும் பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. :)
காரக் கொழுக்கட்டை-சர்க்கரைப் பொங்கல்-கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்
~~~
இன்றைய(பதிவுக்கு சற்றும் சம்பந்தம் இல்லா)இணைப்பு : Geno playing Peekaboo! 
எங்க வீட்டுப் பால்கனியிலிருந்து  ஜீனோ வெளியே பார்க்க வசதியாக தரையோடு கொஞ்சம் இடமிருக்கிறது. அரையடி உசரத்தில் இருப்பதால் அந்த ஓட்டை வழியாகத்தான் மாடியிலிருந்து அவர் வெளியுலகைப் பார்க்கவேண்டும். :)
 அப்படிப் பார்த்துப் பார்த்தே கீழே போக வர இருக்கும் fellow friends-ஐப் பார்த்து வாள்-வாள் என கத்தி(!)ப் பேச்சுக்கொடுப்பது ஜீனோவின் வழக்கம்.
 ஒரு நாள் என்னவர் கேமராவுடன் கீழே போய் ஜீனோவைக் கூப்பிட்டபோது ஜீனோவின் போஸ்தான் மேலே! :)
 நமக்கு பேச்சு இருப்பது போல ஜீனோவுக்கு way of communication வாலாட்டுவது மற்றும் காதுகள் மூலம் எக்ஸ்பிரஷன் கொடுப்பது! சந்தோஷமாக இருந்தால் காதுகள் இரண்டும் முதுகோடு சேரும் வண்ணம் ஆகிவிடும். கூடவே தொண்டையில் இருந்து "ம்ம்ம்...ம்ம்ம்" என ஒரு விதமான சந்தோஷச்சத்தம்!! தாவிக் குதித்து அவ்வளவு அழகாக சந்தோஷத்தை வெளிப்படுத்துவார். அதுவே கோபம், என்றால் காதுகளிரண்டும் 90டிகிரி கோணத்தில் நேராக நிற்கும். புதிதாக ஏதாவது ஒன்றை பார்ப்பது, கேட்பது, புது ஆட்கள் யாராவது தன்னை அழைத்தால் respond செய்வது என்றால் இரு காதுகளும் மேலே உயர்ந்து அழகாக செங்குத்தாக மடங்கி நிற்கும். :) படத்தில் பாருங்களேன், Isn't he cute? :) 
~~~

17 comments:

  1. பிறந்த குட்டிப் பாப்பாக்களுக்கு முதலில் எருக்கஞ் செடியில் இருந்துதான் சிறு கயிறு மாதிரி திரித்து அரைஞாண் கயிறு கட்டுவாங்க. காத்து & கருப்பு அண்டாதாம், சொல்லுவாங்க.

    விநாயகருக்கு மாலை கோர்த்தல், பால் கண்ணில் படாதவறு மொட்டை டப்டப் என வெடிக்க விடுவது ____ இதெல்லாமே நாங்களும் செஞ்சோமே!! ஆனால் இப்படியெல்லாம் பிரித்துக் கோர்த்ததில்லை. மூன்றாவது படத்தின் பின்புலத்தில் உண்ணிப்பூ இருக்கு!

    "நல்லா பார்த்துக்குங்க, நம்மூரு அணிலுக்கு முதுகில 3 கோடு எப்படி பளிச்சுன்னு தெரியுது என!"____ படிச்சுட்டு தேடிப்பிடிச்சாச்சு. ஊரை ஒருதடவை போய் சுற்றிவிட்டு வந்த மாதிரி இருக்கு பதிவு.

    ஆமாம், கொள்ளை அழகுதான்!!

    ReplyDelete
  2. Nice photos and post. Geno looks cute.

    ReplyDelete
  3. I want a dogggggg.

    ReplyDelete
  4. வெள்ளெருக்கம்பூக்களை தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் ஒற்றைத்தலைவலி மற்றும் தலை பாரம் குணமாகும் ..

    ReplyDelete
  5. சித்ராக்கா, முதல் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி!

    //எருக்கஞ் செடியில் இருந்துதான் சிறு கயிறு மாதிரி திரித்து அரைஞாண் கயிறு கட்டுவாங்க. // இது நான் இப்போதான் கேள்விப்படறேன். எங்க வீட்டுப் பக்கம் வெள்ளை வேட்டியின் பார்டரை கிழித்துதான் அரைஞாண் கட்டுவோம்.

    // காத்து & கருப்பு அண்டாதாம்,// ஆமாம், வெள்ளெருக்கந்திரி போட்டு விளக்கேற்றினாலும் இதே பலன் உண்டு என சொல்றாங்க.

    //மூன்றாவது படத்தின் பின்புலத்தில் உண்ணிப்பூ இருக்கு!// படம் அப்லோட் பண்ணியபோதே நானும் கவனித்தேன். :)

    இப்படி போட்டோக்களைப் பார்க்கையில் ஒரு ஃப்ளாஷ்பேக் போட்டு, அப்படியே பதிவாகவும் போட்டு ஊர் நினைவுகளை ரிப்ரெஷ் பண்ணிக்குவோம், என்ன சொல்றீங்க? :)

    //ஆமாம், கொள்ளை அழகுதான்!!// தாங்க்யூ, தாங்க்யூ!
    ~~
    கே.பி.ஜனா சார், நன்றி!
    ~~
    நன்றி வானதி! ஜீனோ சார்பாகவும் நன்றி! :)
    ~~
    அனானி, இதை இதை, இதைத்தான் எதிர்பார்த்தேன்!சீக்கிரமே ஒரு நாய்க்குட்டிய வாங்கிருங்க! :)
    ~~
    இராஜேஸ்வரி மேடம், தகவலுக்கு மிக்க நன்றிகள்!
    ~~

    ReplyDelete
  6. விநாயகர் சதுர்த்தசி செப்டெம்பரில் தானே வருகிறது. அதற்குள் ரெடியாகி விட்டீர்களே !

    உங்கள் செல்ல ஜீனோ பதிவுலகத்திற்கும் செல்லமாகி விடும் என்று நினைக்கிறேன். அத்தனை க்யூட்!

    ReplyDelete
  7. நாங்க கூட சின்ன வயசுல எருக்கம்பூ வ அழுத்தி அதில் இருந்து வரும் சத்தம் கேட்டு விளையாடுவோம் . யாரு நெறைய வெடிக்கராங்க்னு. செம ஜாலி ஆ இருக்கும் .நல்ல பதிவு மகி.ஞாபகம் வருதே......

    ReplyDelete
  8. விநாயகர் சதுர்த்தி நெருங்கும் சமயம் அருமையான பொருத்தமான பதிவு மகி.. காதுகளை முதுகோடு ஓட்ட வைத்து ஜீனோ ரெஷ்பாண்ட் பண்ணுவது பார்க்க பார்க்க அழகா இருக்குமே மகி.. நீங்க பதிவில் குறிப்பிட்ட அனைத்தும் எங்க செல்லம் ஸ்கூபியும் செய்யும். வீட்டில் எங்க போனாலும் பின்னாடியே அலைவதுதான் பெரிய அன்புத்தொல்லை...:)

    ReplyDelete
  9. // Isn't he cute?// நிச்சயமா க்யூட்டா இருக்கார். இவர் போல ஆட்களுக்காத்தாம் அந்த இடைவெளி வைத்திருப்பார்களோ! அழகு.

    வெள்ளெருக்கு மாலை கோர்ப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இப்போதான் தெரியும். கோர்த்திருக்கும் போது பார்த்திருக்கிறேன், வெகு அழகாக இருக்கும்.

    ReplyDelete
  10. ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆஆ மகிட வலையுலக வாழ்க்கையிலயே இதுதான் மிகப் பெரீஈஈஈஈஈய பதிவூஊஊஊஊஊ:)..

    //தலையச் சுத்தினாலும் கடைசில கரீக்ட்டா மூக்கைத் தொட்டுடுவேன்னு தெரியுமில்ல,// இல்ல தெரியும் இல்ல:))

    ReplyDelete
  11. எருக்கம் பூ என இருக்கு ஊரில்.. அதுக்குக் கிட்டப் போகக்கூடாது, அதன் பால் பட்டால் அந்த இடம் சுட்டதுபோல புண்ணாகிடும் என வெருட்டி விட்டிட்டினம், அதனால கிட்டப் போவதில்லை. எதுக்கும் அதை உபயோகிப்பதில்லை.

    ஆடு மாடு கூட தொடாது. ஆனா அதில மாலை கட்டி பிள்ளையாருக்கு??????? வட் எ சேர்பிறைஸ்ஸ்ஸ்ஸ்... அவருக்கு ஒண்ணும் ஆகிடாதில்ல:))

    ReplyDelete
  12. ஜீனோவின் பிக்கபூ.. நல்லாத்தான் இருக்கு, ஆனா எனக்கென்னமோ பயமாயிருக்கு, ஆர்வக்கோளாறில காலையும் தூக்கி வைச்சு நுழைஞ்சாலும் நுழைவார் கவனம்.

    நல்லாத்தான் கவனிச்சிருகிறீங்க... ஜீனோவின் காதின் ரகசியம்:))..

    ReplyDelete
  13. எருக்கம் பூஊஊஊ.அதிரா சொன்னமாதிரி அருகில் விடமாட்டார்கள்தான்.ஆனாலும்
    பூவை பறித்து மாலைகட்டி நாங்களும் போட்டிருக்கோம்.நீங்க செய்தமாதிரி உடைத்து பாஸா!பெயிலா!எனப்பார்போம் (ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி).எங்களிடம் பேபிள் கலர்தான். வெள்ளைப்பூ பார்த்த ஞாபகமில்லை. அழகான பிள்ளையார்.அழகானபடங்கள்.
    சர்க்கரைப்பொங்கல்,கொழுக்கட்டை சாப்பிட ஆவலைத்தூண்டுகிறது.
    ஜீனோ காதின் ரகசியம் நன்றாகத்தான் ஆராய்ந்திருக்கின்றீர்கள்.குட்.நன்றி.

    ReplyDelete
  14. ராஜி மேடம், விநாயகர் சதுர்த்திக்கு இப்பருந்தே ரெடி ஆகிக்கலாமேன்னுதான் ஒரு அட்வான்ஸ் டிரையல்! :)
    ஜீனோவை ரசித்து கருத்து தந்ததுக்கு நன்றிங்க!
    ~~
    சௌமியா, நீங்களுமா? எல்லாருமா சேர்த்து க்ரூப் ஸாங் பாடிரலாம், வாங்க! "ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே!!" :)
    கருத்துக்கு நன்றிங்க!
    ~~
    ராதாராணி, //எங்க செல்லம் ஸ்கூபியும் செய்யும்.// :) க்யூட்! :) பொதுவாக இந்த மேனரிஸம் எல்லாப் பப்பீஸுக்கும் பொது போலும்!
    // வீட்டில் எங்க போனாலும் பின்னாடியே அலைவதுதான் பெரிய அன்புத்தொல்லை...:)// ஆமாங்க. ஆனால் நம்மோடு கூடவே ஒரு ஆள் இருக்கறது போல இருப்பதால் ஜாலிதான்! :)

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
    ~~
    இமா, //இவர் போல ஆட்களுக்காத்தாம் அந்த இடைவெளி வைத்திருப்பார்களோ!// அபார்ட்மெண்ட் டிஸைன் அப்படிதான் இருக்கு, ஒரு வேளை நீங்க சொன்னது போலவும் இருக்கலாமோ! :)

    //வெள்ளெருக்கு மாலை கோர்ப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா?// இது நேர்வழி! ஷார்ட்கட்ஸ் நிறைய்ய்ய்ய்ய்ய இருக்கு! :)
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இமா!
    ~~
    aதிராவ், //ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆஆ மகிட வலையுலக வாழ்க்கையிலயே இதுதான் மிகப் பெரீஈஈஈஈஈய பதிவூஊஊஊஊஊ:)..// நோஓஓஓஓஓஓஓஒ! அவசரப்பட்டு ஸ்டேட்மெண்ட் ரிலீஸ் பண்ணப்படாது, நெக்ஸ்ட் பதிவு சரவெடியா 10,000 தௌஸண்ட்வாலா!! இப்ப என்ன செய்வீங்க, இப்ப என்ன செய்வீங்க?! ;) :)

    //வட் எ சேர்பிறைஸ்ஸ்ஸ்ஸ்... அவருக்கு ஒண்ணும் ஆகிடாதில்ல:))// டோண்ட் வொரி! ஹி இஸ் ஜஸ்ட் ஃபைன்! :) வெள்ளெருக்கு மருத்துவ குணங்கள் நிறைந்தது அதிரா. உங்களை வெருட்டிய எருக்கு பர்ப்பிள் எருக்கு. அந்தப் பால்தான் கொப்புளம் வரும் என்பார்கள். ஆனா நம்மள்லாம் ஆரு, பாஸா ஃபெயிலா பார்க்காம விடமாட்டம்ல?! ;) :)

    //ஆர்வக்கோளாறில காலையும் தூக்கி வைச்சு நுழைஞ்சாலும் நுழைவார் கவனம். // அந்த இடைவெளி சில இன்ச் தான் அதிரா..அதனால் அவர் நுழைய வாய்ப்பில்லை! இருப்பினும் ஒரு பலகை வைச்சு மறைச்சுட்டோம்.

    //நல்லாத்தான் கவனிச்சிருகிறீங்க... ஜீனோவின் காதின் ரகசியம்:))..//ஹிஹீஹி...தேங்க் யூ, தேங்க் யூ! :)

    வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்!
    ~~~
    aம்முலு, கடகடன்னு எல்லா பாயின்ட்டையும் கவர் பண்ணிட்டீங்க, குட்! :) வெள்ளெருக்கு அதிசயமாக எங்காவதுதான் கண்ணில் படும். பர்ப்பிள் போல சாதாரணமாகக் காண முடியாது. நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க அப்போ!
    வருகைக்கும் அன்பான கருத்துக்கும் நன்றி அம்முலு!
    ~~!

    ReplyDelete
  15. உங்க ஜீனோ கொள்ளை அழகு.

    ReplyDelete
  16. //உங்க ஜீனோ கொள்ளை அழகு.// :) நன்றிங்க!

    ReplyDelete
  17. இப்ப திரும்பவும் இந்த போஸ்ட் படிச்சேன். 2 பாட்டு நினைவுக்கு வந்துது. :-)

    வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும் எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி!
    - கம்பராமாயணம்
    வேதாளஞ் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
    பாதாள மூலி படருமே-மூதேவி
    சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
    மன்றோரஞ் சொன்னார் மனை.
    - நல்வழி

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails