Friday, May 10, 2013

தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்
உதிரியாக வடித்த சாதம்-11/2கப்
தேங்காய்த் துருவல்-1/4கப்
தேங்காய் எண்ணெய்-2டீஸ்பூன்
சமையல் எண்ணெய்-2டீஸ்பூன்
கடுகு-1/2டீஸ்பூன்
கடலைப் பருப்பு , உளுந்துப் பருப்பு-தலா 1டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை-1டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய்-2
வரமிளகாய்-2
சர்க்கரை-1/2டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

செய்முறை
சாதத்தை உதிரியாக செய்து ஆறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் + தேங்காயெண்ணெய் காயவைத்து கடுகு, க.பருப்பு, உ.பருப்பு, வேர்க்கடலை என்ற வரிசையில் தாளிக்கவும். 
பருப்புகள், கடலை வறுபட்டவுடன் கீறிய பச்சைமிளகாய், கிள்ளிய வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
சர்க்கரை-உப்பு சேர்த்து, கடாயை அடுப்பிலிருந்து இறக்கி தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.
நன்றாக கலந்து விட்டு, சாதத்தை கட்டிகளில்லாமல் உதிர்த்து சேர்க்கவும்.
தேங்காய்க் கலவையுடன் சாதத்தை கலக்கி விட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
சாதம் லேசாகச் சூடேறியதும் அடுப்பை நிறுத்திவிட்டு மேலும் சில நிமிடங்கள் கடாயை அடுப்பிலேயே வைத்திருக்கவும். 

சுவையான தேங்காய் சாதம் தயார். விருப்பமான பக்க உணவு(களு)டன் சாப்பிடலாம். படத்தில் நீங்கள் பார்ப்பது பருப்புச் சட்னி, கேரட் ப்ரோக்கலி பொரியல் மற்றும் அவித்த முட்டை. 
பொதுவாக தாளித்த சாதத்துக்கு வெங்காயம் சேர்க்காமல் செய்வது எங்க வீடுகளில் வழக்கமில்லை. எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளி சாதம் போன்றவற்றில் வெங்காயம் சேர்க்காமலே செய்யலாம் என்று எனக்கு இணையத்தைப் பார்த்த பிறகே தெரிய வந்தது. [ஆரது அங்கே? சத்தமில்லாமச்  சிரிக்கிறது?? கர்ர்ர்ர்ர்ர்!!]  ஆனாலும் வெகு நாட்களுக்குப் பிறகே எலுமிச்சை-தேங்காய் சாதங்கள் மட்டும் வெங்காயம் இல்லாமல் செய்கிறேன். சுவையும் எங்களுக்குப் பிடித்திருக்கிறது, வேலையும் குறைவு. ;) :) வெங்காயம் சேர்த்த தே.சாதம் ரெசிப்பி இங்கே.
ப்ரோக்கலி-கேரட்-துவரம்பருப்பு-தேங்காய் என்று கலர்ஃபுல் பொரியல்.  பொரியலுக்கு பெருங்காயம் தாளிப்பது எனக்குப் புதிதாக இருந்தது. செய்து பார்த்தேன், சூப்பரா இருந்தது பொரியல். ஸ்டெப்-பை-ஸ்டெப் படங்களுடன் ரெசிப்பியைக் காண இங்கே க்ளிக்குங்க.

ரெசிப்பி கர்ட்டஸி : நாங்களும் சமைப்போமில்ல? வலைப்பூ. 
பின்குறிப்பு 
கடந்த பதிவு நீளம் கொஞ்சம் ஓவராக இருந்ததாக மேலிடத்தில் இருந்து (எங்க ஊட்டுக்காரர்தேன்! ;)) புகார் வந்தது. இந்தப் பதிவு சுருக்கமாப் போடணும் என நினைச்சு அதையும் இறுதியில் கொஞ்சம் இழுத்துட்டேன், அஜீஸ்;) பண்ணிக்குங்கோ!! நன்றி!

Tuesday, May 7, 2013

உடும்புப் பிடி...

பிடிச்சா உடும்புப் பிடிதான் - என்று ஒரு பழமொழி உண்டு. உடும்பு என்ற பிராணி (பல்லி குடும்பத்தைச் சேர்ந்தது என நினைக்கிறேன். :)) எதையாவது வாயால் கவ்விப் புடிச்சதுன்னா அவ்வளவு சீக்கிரம் விடாதாம். அதனால் அந்தக் காலத்தில் திருடர்கள், எதிரி நாட்டினர்கள் உயரமான மதில்கள், கோட்டைச்சுவர்கள் மீது ஏற உடும்பைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். உடும்பின் வாலில்/உடலில்  பலமான கயிறு ஒன்றைக் கட்டி மதில் சுவரின் மீது வீசுவார்களாம். அதுவும் உச்சியில் விழுந்ததும் சுவற்றைப் பற்றிக் கொள்ளுமாம். அதன்பிறகு கயிற்றைப் பற்றிக்கொண்டு திருடர்கள்/எதிரிகள் மதில் மீது ஏறித்தாவி உள்ளே குதித்துவிடுவார்களாம். அதாங்க உடும்பு பிடி என்பது!! :)

சரி, அதற்கும் இந்தப் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்றால்...நான் ஒரு சம்பவத்தைச் சொல்றேன். அதுக்குமிதுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்களே கண்டுபிடிச்சுக்கலாம், சரியா?!
~~~
காட்சி: 1
நாள் : மார்ச் மாதக் கடைசியில் ஒரு சனிக்கிழமை மாலை
இடம்:  வீடுதேன்! :)
பாத்திரங்கள்: கணவர் & மனைவி
இண்டியன் ஸ்டோருக்குப் போய்விட்டு, கை நிறையப் பைகளுடன் வீடு திரும்பும் கணவர். "உஸ்...ஸப்பாடா!!" என்று பைகளை டைனிங் டேபிள் மீது வைக்கிறார். ஸோஃபாவில் மடிக்கணிணியுடன் ஹாயாக உட்கார்ந்திருக்கும் மனைவி உரையாடலைத் துவக்குகிறார்.

மனைவி: "நான் குடுத்த லிஸ்ட்ல இருந்த சாமான் எல்லாம் வாங்கிட்டு வந்தீங்களா?"
கணவர்: ஆமாம்மா..லிஸ்ட்ல ஒண்ணு விடாம எல்லாமே வாங்கிட்டேன் மா!
மனைவி(நம்பிக்கை இல்லாத குரலில்): கோதுமை ரவை?!!
க: வாங்கியாச்..(ஒரு 4பவுண்டு பேக்கட்டை எடுத்து காட்டுகிறார்)
ம: ஆஆ!! இதெதுக்கு இவ்ளோ பெரிய பேக்கட் வாங்கினீங்க? சின்ன பேக்கட் வாங்கிருக்கலாம்ல?
க: தேடினேன், சின்ன பேக்கட் இல்லம்மா..இதான் இருந்துச்சு. கோதுமை ரவை உடம்புக்கு நல்லதுதானே..அதான் பெரிய பேக்கட்டா இர்நுதாலும் பரவால்லன்னு வாங்கிட்டேன்.
ம: ம்ம்...அப்புறம் சேமியா? வறுத்ததான்னு பார்த்து  வாங்கினீங்களா?
க: டடா!!! இதோ, 2 பேக்கட் வாங்கிருக்கேன்! (2 சிறிய பேக்கட்டுகளை எடுத்து காட்டுகிறார்)
ம(டென்ஷனாக): இது பெரிய பேக்கட்டா வாங்க குடாது? குட்டி குட்டியா வாங்கிருக்கீங்க?
க(சுருதி குறைய): பெரிய பேக்கட் இல்லம்மா!
ம:ரஸ்க் வாங்க சொன்னேனே, வாங்கினீங்களா?
க:இதோ...
ம:--------- (அதுவும் ஒரு மெகா சைஸ் பேக்கட்...அவ்வ்வ்வ்)
க:கூடவே வேற என்ன வாங்கி வந்திருக்கேன் பாரேன்!!(ஆவலோடு ஒரு பேகை  எடுத்துக் கொண்டு சோஃபாவுக்கு கொண்டு வருகிறார்)
ம:இந்த ஸ்னாக்ஸ் வாங்கறத நிறுத்தவே மாட்டீங்களா நீங்க? இந்தக் கடைங்கள்ல இருக்கற எல்லாமே சிக்கு வாசம்தான் அடிக்கும். அதைப் போய் மறுபடி மறுபடி..(பார்வை பேகுக்குப் போகிறது)...அதுவும் ஒண்ணுகூட இல்ல...2 பேக்கட்டா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!கிர்ர்ர்ர்ர்ர்ர்!
க:கோவப்படாதம்மா..இது என்னன்னு பார்த்துட்டு அப்புறம் பேச்ச கண்டினியூ பண்ணேன்..(ஒரு பேக்கட்டை எடுத்து காட்டுகிறார்)
ம:ஐ...ஸ்வீட் பனானா சிப்ஸ்!! (மனைவியின் முகம் 1000வாட்ஸ் பல்ப் போட்டது போல பிரகாசமாகிறது)
க:ஆமாம்..உனக்கு இது ரெம்ப புடிக்கும் இல்ல? கடைல இதையப் பார்த்ததுமே வாங்கிட்டு வந்துட்டேன்.
ம(கோபம், சிடுசிடுப்பு எல்லாம் மறைந்து போன இனிய குரலில்): நீங்க ரொம்ப ரொம்ப நல்லவருங்க. சிப்ஸ் பாக்கட்டை பிரிச்சுக் குடுங்களேன்..
க:ஒரு மனுஷன் எவ்ளோ கஷ்டப்பட்டு காரை எடுத்து, இண்டியன் ஸ்டோர் வரைக்கும் போயி, லிஸ்ட்ல இருக்க சாமான் ஒண்ணு விடாம வாங்கிட்டு வந்திருக்கான், அதைப் பாராட்டாம இது ஏன் பெரிய பேக்கட்? அது ஏன் சின்ன பேக்கட்? -நு தொணதொணத்துட்டு..
ம: சாரிங்க..கோவப்படாதீங்க..சிப்ஸ் பாக்கட்ட பிச்சு குடுங்களேன், ப்ளீஸ்!!
{மனைவி கிச்சன் சிஸர்ஸ் எடுத்து பேக்கட்களை கட் பண்ணுவதே வழக்கம். அதற்கு சோஃபால இருந்து எந்திருக்கணுமே!! அதான் இவ்வளவு ஐஸ்!! :) கணவர் பேக்கட்டை பிரித்து மனைவியிடம் கொடுத்துவிட்டு, லேப்டாப்பை வாங்கிக்கொள்கிறார். ஒரு சிப்ஸை எடுத்து வாயில் போட்ட மனைவி ஏமாற்றத்துடன்..}
ம: என்னங்க, இந்த சிப்ஸ் இனிப்பே இல்ல!!
க:அதெல்லாம் இருக்கும்மா..வேற ஒண்ணு எடுத்து சாப்பிட்டுப் பாரு
இன்னும் சில சிப்ஸ்களை அணில் போல கொறித்துப் போட்ட மனைவி..
ம:இல்லங்க...ஒண்ணு கூட இனிப்பே இல்ல..சாதா சிப்ஸ் மாதிரி உப்பாதான் இருக்கு. (பேக்கட்டை முன்னும் பின்னும் திருப்பி பார்க்கிறார்) ஸ்வீட் சிப்ஸ்னு தானே போட்டிருக்கு?
...என்னங்க, நான் சொல்லிட்டே இருக்கேன், நீங்க பேசாம இருந்தா எப்படி?
(லேப்டாப்பில் மூழ்கியிருக்கும் கணவர்..)
க:ம்ம்ம்...என்னம்மா? அப்ப டார்க் கலரா இருக்க சிப்ஸ்-ஐ டிரை பண்ணிப் பாரேன், அது கண்டிப்பா இனிப்பா இருக்கும்.
ம:ம்ம்..எல்லாம் டிரை பண்ணிட்டோம்..இனிப்பே இல்ல.
க:(கிண்டலாக) உனக்கு நாக்கு சரியில்லையோ? ஹஹா!
ம:(கோபத்துடன்) நீங்களே சாப்பிட்டுப் பாருங்க.. {சிப்ஸ் பாக்கட்டை நீட்டுகிறார். கணவரும் சாப்பிட்டுப் பார்த்துட்டு..}
க: அடடே!! ஆமாம்..இனிப்பே இல்ல!!
ம: ஹுக்கும்...இதுக்குத்தான்  சொல்றது!! இங்க இண்டியன் ஸ்னாக் வாங்காதீங்கன்னா கேக்கறீங்களா? ஒண்ணுக்கு ரெண்டா வாங்கிட்டு வந்திருக்கீங்க!! கர்ர்ர்ர்ர்ர்ர்!
 க: சரி போனாப் போகுது விடும்மா..டீ போட்டுக் குடேன்!
ம: நானே சிப்ஸ் இனிப்பில்லாம போச்சேன்னு ஏமாந்து போயிருக்கேன், டீ வேணுமா உங்களுக்கு? {கோபமாக பேக்கட்டை திருப்பி தேடுகிறார்}
க:அங்க என்னம்மா தேடறே?
ம: கஸ்டமர் சப்போர்ட்- மெயில் ஐடி இருக்கும்ல...அதுக்கு மெயில் அனுப்பப்போறேன். இத சும்மா விடப்போறதில்ல!
க:(சிரிப்பை அடக்கிக் கொண்டு)...என்னது?
ம:(சீரியஸாக)..ஆமாங்க..எவ்வளவு ஆசை ஆசையா சிப்ஸ் சாப்பிடப் போனேன்? ஸ்வீட் சிப்ஸுன்னு பேரப் போட்டுட்டு பேக்கட்ல சாதா சிப்ஸை போட்டு வச்சிருக்கானுங்க.
இத நான் சும்மா விடமாட்டேன். இப்பவே மெயில் அனுப்பப்போறேன்.
க: போனா போகுதுனு விட்டுட்டு வேலயப் பார்ப்பியா? அத விட்டுட்டு கம்ப்ளெய்ன் பண்ணப்போறேன்..காமெடி பண்ணப்போறேன்னுட்டு...
{மனைவி சிப்ஸ் பேக்கட்டை ஃப்ரண்ட் அண்ட் பேக் 2 படங்கள் எடுத்துவிட்டு, பாக்கட்டில் மேனுபாக்ச்சரிங் டேட்-எக்ஸ்பயரி டேட் தேடுகிறார். அதுவும் காணப்படவில்லை. கோபம் அதிகரிக்க, 2 படங்களையும் இணைத்து அந்த நிறுவனத்தின் கஸ்டமர் சப்போர்ட் பிரிவுக்கு மெயில் அனுப்பிவிட்டே ஓய்கிறார்}
~~~
காட்சி :2
காட்சி ஒன்றுக்கு அடுத்த நாள் ஞாயிறு காலை
மனைவி காலையில் காப்பியுடன் மெயில் பாக்ஸை செக் செய்துவிட்டு,
ம: ஏங்க..நேத்து நான் சிப்ஸுக்கு கம்ப்ளெய்ண்ட் மெயில் அனுப்பினேனே..
க: (கிண்டலாக)ஆமாம், அதுக்குள்ள பதில் வந்துருச்சா? பரவாயில்லயே!!
ம: இல்லங்க...மெயில் அந்த ஐடிக்கு போகவே இல்லன்னு ஃபெயிலியர் நோட்டீஸ் வ்ந்திருக்கு!
க: (இடி இடியென்று கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு) நாந்தான் அப்பவே சொன்னனே..இந்த ஆகாவழி வேலையெல்லாம் விட்டுட்டு ஆகற வேலையப் பாருன்னு!
ம:(ஏமாற்றத்துடன்)...என்னவோ போங்க..நம்ம காசு தண்டமானதுதான் பாக்கி!
.....
சிலமணி நேரங்கள் கழித்து, மறுபடி மெயில் பாக்ஸை செக் பண்ணும் மனைவி அந்த ஃபெயிலியர் நோட்டீஸ் மெயிலை பார்த்து மீண்டும் கடுப்பாகி, அந்த நிறுவனத்தின்  வலைத்தளத்துக்கே போகிறார். அங்கே "காண்டாக்ட் அஸ்" படிவம் மூலமாக, மெயிலில் அனுப்பிய அதே கம்ப்ளெயிண்டை மீண்டும் டைப் செய்து, "இனிப்பே இல்லாம இனிப்பு சிப்ஸ் செய்யும் உங்கள் நிறுவனத்தைப் பாராட்டுகிறேன்" என்று ஒரு சர்காஸ்டிக் பன்ச்சும் வைத்து அனுப்பிவைக்கிரார். மறந்தும் கூட இது பற்றி கணவரிடம் மூச்சு விடவில்லை.
~~~
காட்சி : 3
கம்ப்ளெயின்ட் மெயில் அனுப்பி 3வது நாள்..அந்த நிறுவனத்தில் இருந்து ஒருவர்(மேலாளர்) பதில் அனுப்பியிருக்கிறார். "தங்களுக்கு நேர்ந்த துரதிர்ஷ்ட வசமான அனுபவத்துக்கு வருந்துகிறோம். எங்கள் அலுவலகத்தில் இருந்து ஸோ&ஸோ உங்களைத் தொடர்பு கொள்ளுவார் என்ற ரீதியில் மெயில் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த ஸோ&ஸோ-வுக்கும் இதே மெயில் காப்பி அனுப்பப்பட்டுள்ளது.
மனைவிக்கு உற்சாகம் தாங்கமுடியவில்லை. உடனே இந்த மெயிலை கணவருக்கும் ஃபார்வர்ட் செய்து விடுகிறார். பிறகு போன் செய்து வேறு இது பற்றி பிரஸ்தாபிக்கிறார். கணவர் பொங்கும் சிரிப்பை மறைத்த படி மனைவியை உற்சாகப்படுத்துகிறார்.
~~~
காட்சி : 4
ஒரு வீகெண்ட்
க: ஏம்மா...சிப்ஸ் கம்ப்ளெயிண்ட் ஏதோ அனுப்பியிருந்தியே, பதிலெல்லாம் கூட வந்துச்சே..காம்பன்ஷேஷன் ஏதோ அனுப்புவோம்னு அந்த ஆள் சொல்லிருந்தார்னு சொன்னே..ஒண்ணும் காணமே?!
ம: அது...அவங்க பிஸியா இருப்பாங்களோ என்னமோ? ஒரு வாரம் தானங்க ஆச்சு? இந்த வாரம் ரிப்ளை வரும் பாருங்க.
க:மனைவிக்கு தெரியாமல் சிரித்துக்கொள்கிறார்.
~~~
காட்சி : 5
இன்னுமொரு வாரக்கடைசி
க: ஹலோ கம்ப்ளெயிண்ட் ஸ்பெஷலிட்..என்னாச்சு உங்க சிப்ஸ் விஷயம்?
ம: ஹும்ம்ம்..ஒரு பதிலுமே காணமேங்க?!
க: அதெல்லாம் அவ்வளவுதாம்மா..நான் அப்பவே சொன்னேன், நீ தான் கேக்கல. ஆ..ஊன்னு சீன் காமிச்சு மெயில் அனுப்பினே..அத்தோட சரி!  ஒரு விஷயம் எடுத்தா சீரியஸா முடிக்க வேணாமா..பேச்சுக்கு ஒரு மெயில் அனுப்பிவிட்டுட்டு அத்தோட அம்போனு விட்டுட்டியே?
ம: அதெல்லாம் இல்லங்க..நான் மறுபடி அவங்களுக்கு மெயில் அனுப்பி என்ன ஏதுன்னு கேக்கப் போறேன்.
க: (கிண்டலாக)கேளு..கேளு! அப்படியே ஒழுங்கா பதில் வரலன்னா கேஸ் போடுவேன்னும் சொல்லு!!
சிரித்தபடி போகிறார்.
~~~
காட்சி : 6
கணவரின் கிண்டலால் ரோஷத்துடன் எழுந்த மனைவி அந்த நிறுவனத்துக்கும், ஸோ & ஸோ-வுக்கும் சேர்த்து ஒரு மெயிலைத் தட்டிவிடுகிறார். "உங்களிடமிருந்து பதில் வந்தது கண்டு மகிழ்வுற்றேன். ஆனால் 2 வாரங்கள் கடந்தபின்னரும் உங்களிடமிருந்து வேறு ஒரு தகவலும் இல்லை. இப்பொழுதுதான் தெரிகிறது, உங்கள் பதில் கடிதம் ஒரு கண்துடைப்பு என்று. என் காசு போனது போனதுதான். கூடவே என் பொன்னான நேரத்தையும் வீணாக்கி "ஃபாலோ-அப்" மெயில் அனுப்ப வேண்டிய அவசியம் எனக்கில்லை. இனி மேலாவது உங்கள் பொருட்களின் தரத்தை கவனியுங்கள், வாடிக்கையாளர் சேவையயும் மேம்படுத்துங்கள். இதற்கு முன் நான் அனுப்பிய மெயில் "ஃபெயிலியர் நோட்டீஸ்" உடன் வந்துவிட்டது." என்று எழுதி, அந்த மெயிலையும் இணைத்து அனுப்பிவைத்து விட்டு விஷயத்தை அத்துடன் மறந்துவிடுகிறார்.
~~~
காட்சி : 7
காட்சி 6க்கு அடுத்த நாள், அந்த நிறுவனத்தின் "ஸோ&ஸோ"-விடமிருந்து ஒரு மெயில் வருகிறது. " தாமதத்துக்கு மன்னிக்கவும், நான் தான் தங்களுக்கு காம்பன்ஷேஷன் அனுப்ப மறந்துவிட்டேன். உங்கள் முகவரியைத் தந்தால் உடனடியாக சிப்ஸை அனுப்புகிறேன்" என்ற மெயில் வருகிறது. அதற்கடுத்த நாள் நிறுவனத்தின் மேலாளரிடமிருந்து இன்னுமொரு கடிதமும் வருகிறது. தடங்கலுக்கு வருந்துகிறோம். உங்கள் புகாரை சீரியஸாக எடுத்துக்கொண்டு எங்கள் பொருட்களின் தரத்தை மேம்படுத்துவோம். தயவு செய்து உங்கள் முகவரியை அனுப்பவும்.- என்று.

மனைவியும் முகவரியை அனுப்பிவிடுகிறார். மறக்காமல் நன்றியையும் தெரிவித்துக்கொண்டுதான்! ;) விஷயத்தைக் கேள்விப்பட்ட கணவர், நீ எதற்கு முகவரியை அனுப்பிவிட்டாய்? என்னுடைய லாயர் உங்களைக் காண்டாக்ட் பண்ணுவார் என சொல்லியிருக்கலாமில்ல? கேஸ் போட்டு ஒன் மில்லியன் டாலர் வாங்கியிருக்கலாம். இப்படி மிஸ் பன்ணிட்டியே என கடுப்பேத்துகிறார் மை லார்ட்! :) :)

அதற்கடுத்த வாரத்தில் அந்த நிறுவனத்திடமிருந்து பார்சல் அனுப்பப்பட்டதாய் மெயில் வந்துவிடுகிறது. கூடவே  "ஸ்வீட் பனானா சிப்ஸில் நாங்கள் அடிஷனல் சர்க்கரை ஏதும் சேர்ப்பதில்லை, பழங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து வாங்குகிறோம். சீஸனைப் பொறுத்து பழத்தின் இனிப்பு மாறுபடும், அதனால்தான் சிப்ஸின் இனிப்பும் மாறுபடுகிறது" என்ற விளக்கமும் நிறுவனத்தின் மேலாளரிடமிருந்து வருகிறது. ஏற்கனவே நொந்து நூடில்ஸ் ஆன மனைவி அமைதி காக்கிறார்.

சிலதினங்களில், யு.பி.எஸ்-ல் இருந்து வந்த பார்சலை எடுத்து வீட்டுக்குள் வைத்த கையோடு கணவருக்கு போனைப் போடுகிறார் மனைவி.
ம: என்னங்க..சிப்ஸ் காரங்க பார்சல் அனுப்பிட்டாங்க..வந்து சேர்ந்துருச்சு.
க: அப்படியா? பரவால்லயே..நிசமாவே அனுப்பிட்டாங்க?! ஹ்ம்ம்ம்..நீதான் மில்லியன் டாலரை மிஸ் பண்ணிட்டே! (சத்தமில்லாமல் சிரிப்பதால் மனைவிக்கு போனில் தெரியவில்லை)
ம:பெரிய பெட்டியாய் இருக்குதுங்க..உள்ள எதாச்சும் பாம்(வெடிகுண்டு) வைச்சு அனுப்பிருப்பானுங்களோ? பயமா இருக்குதே?
க: (சிரிப்பை அடக்க முடியாமல்..சிரித்துக்கொண்டே) ஏம்மா, நாங்கொஞ்சம் பிஸியா இருக்கேன், நீயே பிரிச்சுப் பாரு. இல்லன்னா நான் வந்தப்புறம் பார்க்கலாம்.
ம: சரிங்க. நீங்க வந்த பொறகே பிரிச்சுக்கலாம்.
ஒருவழியாக பெட்டியைப் பிரிக்கிறார்கள். உள்ளே இந்த சம்பவத்தின் கதாநாயகனான சிப்ஸ் பாக்கட் இல்லை!! ஹைதராபாதி மிக்ஸர் 2 பாக்கட்டும், கேரளா ஹாட் மிக்ஸர் 2 பாக்கட்டும் இருக்கிறது. அதனைப் படமெடுத்த மனைவி அந்த நிறுவனத்துக்கு படங்களையும் இணைத்து,  பின்வருமாறு மெயில் அனுப்புகிறார்.
"தாங்கள் அனுப்பிய காம்பன்ஷேஷன் ஸ்னாக்ஸ் கிடைக்கப் பெற்றேன், மிக்க நன்றி.மேலாளர் அவர்களுக்கு: தாங்கள் கூறிய பழங்கள்-இனிப்பு பற்றிய விளக்கத்துக்கு நன்றி.   நான் காசு கொடுத்து பொருளை வாங்குகிறேன். பேக்கட்டில் என்ன பெயர் எழுதியிருக்கிறதோ அதே பொருள் பேக்கட்டின் உள்ளே இருக்கவேண்டும் என்பதுதான் என் (போன்ற வாடிக்கையாளர்களின்) எதிர்பார்ப்பு.  இருந்தாலும், பழங்கள்-இனிப்பு பற்றிய தங்கள் பொறுப்பான விளக்கத்துக்கு நன்றி!" 


க: பாவம் அந்த சிப்ஸ் காரங்க...உனக்கு ஒரு பேக்கட்டுக்கு பதிலா 4 பேக்கட் அனுப்பியிருக்காங்க, அப்பவும் விடாம சிப்ஸ்-மாதிரியே பொரிக்கறியே அவங்கள!!??! 
ம: ஆமாம், உங்களுக்கென்ன தெரியும், பேசாம இருங்க..இவங்களுக்கெல்லாம் இப்படி சொன்னாத்தான் ஆகும். பழம் இனிக்குது, இனிக்கலன்னா அது அவன் பிரச்சனை, எனக்கென்ன வந்துச்சு? ஸ்வீட் சிப்ஸுன்னா இனிப்பா இருக்கணும், தட்ஸ் ஆல்!! 
--சுபம்!!--
ஹைதராபாதி மிக்ஸருங்கோ...தைரியமாச்;) :) சாப்பிடலாம்! ரொம்ப மோசமில்ல, சுமாரா இருக்கு! 
நன்றி, வணக்கம்!
By tha way, இது கதையல்ல, நிஜம்!! :) நாலு டாலர் குடுத்து ஒரு பேக்கட் ஸ்னாக்ஸ் வாங்கினாலும் வாடிக்கையாளர் வாடிக்கையாளர் தானங்க? பழம் இனிப்பில்லைன்னா அந்த சீஸன்ல ஸ்வீட் சிப்ஸ் போடாமல் இருக்கலாம் அல்லவா? அதை விட்டுட்டு இப்படி என் போன்ற அப்பாவிகளை ஏமாற்றுவது சரியா? நீங்களே சொல்லுங்க?!



பி.கு. முதல் படத்துக்கும் பதிவுக்கும் தொடர்பில்லைங்க..காமெடியா எதாச்சும் கார்டூன் படம் போடலாமேன்னு போட்டிருக்கேன். குழம்பிராதீங்க.

Friday, May 3, 2013

கேரஞ்ச் ஜூஸ்

தேவையான பொருட்கள்
கேரட் -1
ஆரஞ்சுப் பழம்(சிறியது)-2
சர்க்கரை-11/2டீஸ்பூன்
தண்ணீர்-1/2கப் அல்லது 3/4கப் 

செய்முறை
கேரட்டை கழுவி துண்டுகளாக்கவும். 
ஆரஞ்சுப் பழத்தைத் தோலுரித்து சுளைகளைப் பிரித்து வைக்கவும். [நான் உபயோகித்த பழங்களில் விதைகள் இருக்கவில்லை. எங்கேயோ ஒன்றிரண்டுதான் இருந்தது. :)]
கேரட் -ஆரஞ்சை மிக்ஸியில் இட்டு அரைக்கவும். 
நன்கு அரைபட்டதும் தேவையான [குளிர்ந்த] தண்ணீர், சர்க்கரை சேர்த்து இன்னும் சில நிமிடங்கள் அரைத்து வடிகட்டவும். கண்ணாடி டம்ளர்களில் தேவையான அளவு ஜூஸை ஊற்றி பரிமாறவும். 
குளிர்ந்த தண்ணீர் சேர்த்து செய்திருப்பதால் அப்படியே பருகலாம், அல்லது  ஐஸ்கட்டிகள் சேர்த்தும் பருகலாம். 
பி.கு. : பெயர்க்காரணம்
கேரஞ்ச் = கேரட் + ஆரஞ்ச் 
:) :)  

Monday, April 29, 2013

பர்ஃபெக்ட் ஊத்தாப்பம்

 
...செய்வது எப்படி? - என்பது பற்றித்தான் இன்றைய பதிவுங்க. :)))) ஹல்லோ...வெய்ட்..பின்னங்கால் பிடறியில் பட, பல பேர் ஓட்டம் பிடிச்சாலும், எனக்கு என்றென்றும் ஆதரவு தரும் ஒரு சில நல்ல உள்ளங்கள் கண்டிப்பாஆஆஆஆஆ இந்தப் பதிவைப் படிப்பீங்க என்ற நம்பிக்கையில், கன்டினியூ!! இஸ்டார்ட் மீசிக்! :))))) டன் டனக்கா..ஆ...டமுக்கு டக்கா!! :)))) 
தோசை சுடுவது எப்படி -- நூறு வகை, ச்சே,ச்சே..ஆறு வகை தோசை  என்று ஏற்கனவே எழுதிருந்தாலும் ஊத்தாப்பம் பத்தி இன்னும் நான் எழுதலங்க. அதான்! ஒரு நாள்...வீகென்ட்..காலை..தோசை  சுடலாம்னு சட்னி அரைச்சாச்சு. திடீர்னு மொறு-மொறு தோசைக்குப் பதிலா மெத்-மெத் ஊத்தப்பம் சுடலாமேன்னு தோணுச்சு. மெத் மெத் ஊத்தப்பம் ஒண்ணு வயித்துக்குள்ள போன அதே (பொன்)நேரம்(??!!!)  ஊத்தப்பம் சுடுவது எப்படினு ஒரு டுட்டோரியல் குடுத்தா எல்லாருக்கும் உபயோகமா இருக்குமேன்னு ஒரு ஞானோதயம் உருவாச்சு. 

ஸோ..இப்ப ஒருவழியா (நிஜமாவே) ஊத்தப்பம் செய்யப் போறோம். இட்லி மாவரைச்சா, முதல்நாள் இட்லி- அப்புறம் தோசை, இதான் நம்ம கான்சப்ட். ஸோ, தேவையான அளவுக்கு இட்லி மாவ கப்ல எடுத்து.. தோசைன்னா கொஞ்சம் தண்ணி தாராளமாவே விட்டு கரைக்கலாம், ஆனா ஊத்தப்பத்துக்கு அப்படி இல்ல, கொஞ்சமா தண்ணி விட்டு கரைச்சுக்குங்க. தோசைக்கல்ல மீடியம் சூட்டில காயவைங்க. பக்கத்தில ஒரு வெங்காயம்/கத்தரிக்காய்/உருளைக்கிழங்கு/வாழக்காய் ...குழம்பக்குடாது, இதெல்லாம் வச்சு சாம்பார் செய்யப் போறதில்ல, அப்பப்ப தோசைக்கல்ல மசாஜ் பண்ணிக்கறதுக்கு!! ஹிஹிஹ்ஹி! இல்லன்னா ஒரு பேப்பர் டவல்ல எண்ணெய் தொட்டு மசாஜ் பண்ணிக்கலாம், அல்லது ஸிலிகன் பேஸ்ட்ரி ப்ரஷ்ல மசாஜ் பண்ணிக்கலாம், அது உங்க வசதி! [ஊரில டீக்கடைகள்ல தென்னங்குச்சி துடைப்பம் வைச்சு மசாஜ் பண்ணுவாங்க, அது நமக்கு உபயோகப்படாது, விட்டுரலாம். ;)]

தோசைக்கல்லு ரெடியானதும் ஒரு கரண்டி மாவை ஊத்துங்க. லேசா, பட்டும் படாம, தொட்டும் தொடாம, அந்த வட்டத்தை கொஞ்சமே கொஞ்சம் பெரிசு பண்ணிவுடுங்க, போதும்! அரை ஸ்பூன் எண்ணெய எடுத்து ஊத்தப்பத்தை சுத்திவர ஊத்திருங்க. இப்ப சிலநொடிகள் காத்திருங்க...
ஊத்தப்பத்தில மேஜிக் ஆரம்பிக்கும்! :o) அதாவது, ஊத்தப்பத்தில அங்கங்க சின்னச் சின்ன துவாரங்கள்:) உருவாகும். அப்ப, ஸ்பூனை மறுபடி எண்ணெய்க் கிண்ணத்தில ஒரு dip பண்ணிட்டு எடுத்து, ஊத்தப்பத் துளைகள்ல ஓரொரு சொட்டா எண்ணெய் விடுங்க. இன்ட்ரஸ்டிங்கா இருக்கும், செய்து பார்த்தா உங்களுக்கே புரியும்!  :))) 
100% எல்லா துவாரங்களையும் கவர் பண்ணனும்னு இல்லை..முடிஞ்சளவு கவர் பண்ணுங்க. அதுக்குள்ள, ஊத்தப்பம் ஒரு பக்கம் பொன்னிறம் ஆகியிருக்கும். திருப்பிப் போடுங்க..
 ஒரு சிலர், திருப்பிப் போட்டதும் ஆர்வம் தாங்காம,  ஊத்தப்பதை தோசை திருப்பியால அழுத்துவீங்க...நோ!! தட் இஸ் நாட் எ குட் ப்ராக்டீஸ்! ஊத்தப்பம் மொறுமொறுன்னு ஆகிரும், ஸோ..தொந்தரவு பண்ணாம விட்டிருங்க. சில நொடிகள்ல இருபுறமும் பொன்னிறமான ஊத்தப்பம் ரெடியாகிரும். ஊத்தாப்பத்த மூடி வச்சு சுடுவதா இருந்தா இந்த "திருப்பி போடற" ஸ்டெப் ஆப்ஷனல்தான். மூடி வைப்பதால் ஊத்தப்பத்தின் 2 பக்கமுமே கரெக்ட்டா வந்துரும், ச்சே,ச்சே, வெந்துரும்! ;) எடுத்து தட்டில வைச்சு, விருப்பமான சைட் டிஷ்களுடன் வெளுத்து வாங்கலாம். மெத் மெத் ஊத்தாப்பம் சூப்பரா இருக்கும்.
தமிழ் கூறும் நல்லுலகத்தில் யாரும் இப்படி ஒரு மொக்கை பதிவ எழுதியிருக்க மாட்டாங்க என்ற பெருமிதத்துடன்..
நன்றி, வணக்கம்!
:) 

Tuesday, April 23, 2013

மதுரை சட்னி

 தென்னிந்திய வீடுகளில் பெரும்பாலான நாட்களில் காலை மற்றும் இரவுச் சிற்றுண்டிக்கு இட்லி-தோசை வகைகளே பிரசன்னமாகும். என்னதான் ரவா உப்புமா- சேமியா உப்புமா-பொங்கல்-பூரி-சப்பாத்தி என்று வேறு ஆப்ஷன்ஸ் இருந்தாலும் அவற்றுக்கும் தேவைப்படுவது ஒரு சட்னி!!  அதிலும், எங்க வீட்டில் இட்லிக்கு சட்னி என்பதில்லாமல் சட்னிக்கு இட்லி- என்பதாகத்தான் உணவுப்பழக்கம்! :))

தமிழ்-ஆங்கிலம் இரண்டு வலைப்பூக்களிலும் சேர்த்து ஒரு 25 வகை சட்னி ரெசிப்பிய நானே போஸ்ட் பண்ணியிருந்தாலும், ஒவ்வொரு முறையும் என்ன சட்னி செய்வது என மண்டையப் பிச்சுக்கிற மாதிரிதான் இருக்கும். நான் ஒரு டீஃபால்ட் சோம்பேறி என்பதால் இந்த சட்னி அரைப்பதில் எனக்கு ஸ்டார்டிங் ட்ரபுள். நிறைய சட்னி ரெசிப்பிகள் வெங்காயம்-தக்காளி நறுக்கி, வதக்கி, ஆறவைச்சு, அரைச்சு, தாளிச்சுக் கொட்டுவதா இருக்கும். இம்ம்ம்ம்மாஆஆஆம் பெரிய ப்ராஸஸா என மலைப்பா இருக்கும் எனக்கு!! அதனால அந்த கடேசி தாளிச்சுக் கொட்டற ஸ்டெப் பலநாள் ஆப்ஸெண்ட் ஆகிரும்! :))

தேங்காச் சட்னி சிம்பிளான சட்னி- ன்னு நீங்க சொன்னாலும் அத ஒத்துக்க மாட்டேன். தேங்காயை உடைச்சு, துருவி அல்லது  ப்ரீஸர்ல இருந்து தேங்காய எடுத்து, தேவையான பொருள் எல்லாம் கேதர் பண்ணி, அரைச்சு...அவ்வ்வ்! இட்ஸ் நாட் ஈஸி ஐ ஸே! அப்ப எது ஈஸியான சட்னின்னு கேப்பீங்களே நீங்க..என்னது, இல்லையா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நீங்க கேக்காட்டியும் நானே சொல்லுவேன். வேர்க்கடலை சட்னி தாங்க இருக்கறதிலயே சிம்பிள்ள்ள்ள்ள்! வறுத்த வேர்க்கடல எப்படியும் ஸ்டாக் வைச்சிருப்பீங்க, ரைட்? கடலை-வரமிளகா-புளி-கொஞ்சூண்டு கொத்தமல்லி(தனியா)-உப்பு எல்லாம் சேர்த்து தண்ணி விட்டு அரைச்சா சூப்பர் க்விக் அண்ட் டேஸ்ட்டி சட்னி ரெடி! ரெசிப்பிய ஆங்கிலத்தில பார்க்க இங்கே க்ளிக்குங்க.

கதை முடிஞ்சது, கத்தரிக்காய் காய்ச்சது..இனி இன்றைய ரெசிப்பிக்கு போகலாம். ஒரு சனிக்கிழம காலைல ப்ரெஷ்ஷா எந்திரிச்சு, ஃபுல் ஆஃப் எனர்ஜியோட என்ன சட்னி செய்யலாம்னு யோசிச்சுகிட்டே ப்ரவுஸ் பண்ணினப்ப "ஜிங்ங்ங்ங்ங்ங்"- ன்னு "குக்கிங் ஜிங்கலாலா"-ல இருந்து வந்து குதிச்சுச்சு இந்த மதுரை சட்னி. என்னதான் நான் சோம்பேறின்னாலும், இப்படி புதுசா முயற்சிப்பதில ஆர்வம் உண்டு என்பது உங்களுக்கே தெரியும். அதனால செய்து பார்த்தேன், சூப்பரா இருந்துச்சு. கொஞ்சம் வேலை அதிகம்னாலும், இட்ஸ் வொர்த் அ ட்ரை! நீங்களும் செய்து பாருங்க.

தேவையான பொருட்கள் 
வதக்கி அரைக்க 
வெங்காயம் - பாதி
வரமிளகாய்-5 (காரத்துக்கேற்ப)
புளி- சிறிது
எண்ணெய்
தாளிக்க
வெங்காயம்- மீதி! :) [அதான் பாதிய நறுக்கி வதக்கீட்டீங்கள்ல..அதில மீதியிருக்கும் அடுத்த பாதி]
தக்காளி-1
கடுகு -1/2டீஸ்பூன்
உளுந்து-1டீஸ்பூன்
கறிவேப்பிலை
எண்ணெய்

செய்முறை
எண்ணெய் காயவைத்து நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், புளி சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். ஆறியதும் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைசாக அரைத்து வைக்கவும். 
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து உளுந்து சேர்த்து பொன்னிறமானதும், கறிவேப்பிலை பொரியவிட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

தக்காளி குழைய வதங்கியதும், அரைத்த கலவையைச் சேர்த்து, உப்பும் சேர்த்து வதக்கிவிட்டு, அரைக் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 

5நிமிடங்கள் குறைந்த தீயில் கொதித்ததும் சட்னியை அடுப்பிலிருந்து இறக்கவும். காரசாரமான மதுரை சட்னி ரெடீஈஈஈ! இட்லி-தோசை-பணியாரம் இவற்றுக்கு பொறுத்தமான சட்னி இது. 

இந்தச் சட்னி செய்த அன்று பணியாரம்தான் செய்திருந்தேன். சட்னி ரெசிப்பி குடுத்த ஆளுக்கு அது எப்படியோ தெரிந்திருக்கு போல!  // Adutha murai kuzhi paniyaram kudunga.//  என்று கேட்டிருந்தாங்க..அவரது விருப்பம் நிறைவேற்றப்படுகிறது. மங்கள மீனாக்ஷி, என்ஜாய் குழிப்பணியாரம் அண்ட் மதுரை சட்னி!
படம்தான் கொஞ்சம் சரியில்லை, பசியில எடுத்தேனா, பொறுமையா க்ளிக்க முடில, அஜீஸ்;) பண்ணிக்குங்க!
~~~
இலவச இணைப்பு! :))) 
குரங்கு பொம்மையால முகத்த மறைச்சுகிட்டு ஒத்தக் கண்ண மட்டும் காட்டும் எங்க வீட்டுக் க்யூட் குட்டிப் பிசாசு! :))))

Friday, April 19, 2013

பட்டாணி குருமா


தேவையான பொருட்கள் 
அரைக்க
தேங்காய்-2டேபிள்ஸ்பூன்
புதினா இலைகள் -5
மிளகு-5
ஊறவைத்த பாதாம்-5
மல்லித்தூள்-11/2டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-1டீஸ்பூன்(காரத்துக்கேற்ப)
பட்டை-சிறுதுண்டு
கிராம்பு-1
சோம்பு-1/2டீஸ்பூன்
பிரியாணி இலை-1

குருமாவுக்கு
வெங்காயம்-1
தக்காளி-1
மஞ்சள் பட்டாணி/Dried Yellow Peas-1/4கப்
உப்பு
எண்ணெய் 
சீரகம்-1/2டீஸ்பூன்

செய்முறை
பட்டாணியை அலசி முதல்நாளிரவே (அல்லது 8 மணி நேரம்) ஊறவைக்கவும். தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வைத்து குழையாமல் வேகவைத்தெடுக்கவும்.
பாதாமை அரை மணி ஊறவைத்து தோலுரிக்கவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கி, அரைத்த மசாலாவைச் சேர்க்கவும். 
11/2கப் தண்ணீர் விட்டு, கொஞ்சமாக உப்பு சேர்த்து (பட்டாணியிலும் உப்பு இருக்கிறது, கவனம்!) நன்கு கொதிக்கவிடவும்.
மசாலா வாடை அடங்கி கொதிக்கத் துவங்கியதும் வேகவைத்த பட்டாணியைச் சேர்க்கவும், உப்பைச் சரிபார்த்து, தண்ணீர் அளவையும் சரிபார்த்துக்கொள்ளவும். 
குறைந்த தீயில் ஏழெட்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு, எண்ணெய் குருமாவின் மேலே மிதந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். 
சுவையான பட்டாணி குருமா ரெடி. சப்பாத்தி-பரோட்டா-பூரிக்கு பொருத்தமான குருமா இது. வெறும் சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
பட்டாணி குழையாமல் வேகவைக்க டிப்ஸ் : பட்டாணியை எட்டு மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் பட்டாணி வேகத் தேவையான அளவு தண்ணீர் விட்டு ஹைஹீட்டில் சூடாக்கவும். தண்ணீர் கொதி வந்ததும் பட்டாணியைச் சேர்த்து குக்கரை மூடவும். நீராவி வேகமாக வெளியேற ஆரம்பிக்கையில் குக்கர் விசிலை போட்டு, அடுப்பை மீடியம் சூட்டுக்கு குறைக்கவும். கரெக்ட்டாக ஒரு விசில் வந்ததும் குக்கரை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும். ப்ரெஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்தால் பதமாக வெந்த குழையாத பட்டாணி  தயார். :) 

Thursday, April 18, 2013

பூவே, பூச்சூடவா..

வசந்தம் வந்தாச்சு! வாங்க, எங்க வீட்டு பால்கனித் தோட்டத்தைப் பார்க்கலாம். ஒவ்வொரு வருஷமும் தவறாம 2 தக்காளி 2 பச்சமிளகாச்செடி வாங்கி நடுவேன், இந்த வசந்தத்துக்கு காய்கறி பக்கம் போகவேண்டாம் என நானே ஒரு முடிவெடுத்துகிட்டு அவை எதுவும் வாங்கலை. கொஞ்சமா வாங்கினாலும் பெரிய பூச்செடிகளா வாங்கியாச்சு! :) 

கீழிருக்கும் பூக்களில் மூன்று,  சிறப்பு  விற்பனைகளில் ஐம்பது பைசா - ஒரு ரூபாய்க்கு வாங்கியவை. அந்த வெள்ளைப் பூக்கள் (செவ்வந்திக்கு அருகில் இருப்பவை) மட்டும் கொஞ்சமே கொஞ்சம் காஸ்ட்லி! நல்ல நறுமணத்துடன் இருந்ததால் வாங்கிவந்துவிட்டோம்.  
அடுத்ததாக, இங்கே பக்கத்தில் இருக்கும் தோழி ஒருவர் காஸ்ட்கோ-வில் டேலியா bulbs வாங்கிவந்து நட்டிருப்பதாகக் கூற, நாங்களும் காஸ்ட்கோ போனபோது பார்த்து வாங்கிவந்தோம். எல்லாருக்கும் டேலியா பூக்கள் தெரியும் என நம்புகிறேன், இருந்தாலும் அது என்ன பூ என தெரியாதவங்க இங்கே போய் படம் பார்த்துட்டு வந்துருங்க. ஏன் இதை பர்ட்டிகுலரா சொல்றேன்னா, இங்கே சில தோழிகளிடம் சொன்னபோது, டேலியா-வா? அது என்னது? எப்படி இருக்கும் என்று ஆச்சரியமாக் கேட்டுப்புட்டாங்க...அவ்வ்வ்வ்வ்!

ஊட்டி-க்கு பக்கத்தில் இருப்பதாலோ என்னமோ..கோவையில் டேலியா பூக்கள் சாதாரணமா விற்பனைக்கு வரும். சீஸன் டைமில் காலை நேரங்களில் பூக்காரங்க சைக்கிளில் அகலமான தட்டக்கூடைகளில் பூக்களை கொண்டுவந்து ஒண்ணு ஒரு ரூபாய் என விற்பாங்க.  வீடுகளிலும்  டேலியா வளர்ப்பதுண்டு. பல நிறங்களில் அழகழகா இருக்கும் பூக்களை வீட்டிலேயே செடி வளர்த்துப் பார்க்கவேண்டும் என்ற ஆசை எனக்கு பலநாளா உண்டு. அந்த நாட்களில் எங்க சித்தி வீட்டில் டேலியா இருக்கும், அங்கிருந்து கிழங்கு கொண்டுவந்து நட்டு நட்டு பார்த்து ஏமாந்து போயிருக்கிறேன். ;) ..ஹ்ம்ம்! கொசுவர்த்தி பலமாச்  சுத்துது, அப்படியே அசந்து தூங்கிராதீங்க! கமான், வேக் அப்! :)

நாங்க வாங்கிய பேக்கட்டில் இரு வண்ணங்களில் டேலியா கிழங்குகள் இருந்தன, முதலே வாங்கிய தோழியிடம் வேறு இரு நிறங்கள்! அப்புறமென்ன?  எங்க வீட்டு கிழங்க அவங்களுக்கு கொஞ்சம் குடுத்து, அவங்க கலர் கிழங்க நாங்க கொஞ்சம் வாங்கி, நட்டாச்சு! ரெண்டு வீட்டிலும் செடிகளும் துளிர்த்து வளர ஆரம்பித்துவிட்டன, ஆனா எந்தத் தொட்டியில் எந்த நிறப் பூக்கள் வரும் என்பது  இப்ப பெரிய சஸ்பென்ஸா இருக்குதுங்க! :)
மீண்டுமொருமுறை கடைக்குப்  போனபோது " விண்டர் ஜாஸ்மின்" என்று ஒரு வகை செடி... அல்ல, கொடி! :) விற்பனைக்கு இருந்தது. எனக்கு அந்த செடி மேல பலகாலமா ஒரு கண்ணா இருந்துச்சா, அதையும் வாங்கிவந்துட்டோம். நம்ம ஜாதிமல்லிப் பூ போல நல்ல வாசனை!  முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி போல எங்க கொடிக்கும் தேர் கொடுக்க யாரும் வருவாங்களா என காத்திருக்கிறேன். ஹாஹ்ஹா! ;)  விரைவில் கொடியைப் படரவிட ஆவன செய்யணும்.
Patio Garden..ஒரு முழுத்தோற்றம்..ஒவ்வொரு படத்திலும் முகம் காட்ட மறுக்கும் ஜீனோ-வை திரும்பி நிக்க வைக்க முடிந்தளவு போராடிப் பார்த்துட்டேன், ஒர்க் ஆகலை, அதனால அட்ஜஸ்ட் பண்ணிகுங்க.

பின்குறிப்பா, முதல் படத்தில் இருக்கும் ரோஜா பூ ஜாடியில் வாங்கி வைத்து அழகுபார்த்தது, வீட்டில் வளர்ந்தது என ஏமாந்துவிடவேண்டாம்! ;) :)
Also, For a change, இந்த முறை டிஃபன் - டீ- காபி- ஸ்னான்ஸ் எதுவும் இல்லாம வெறுமனே ஒரு பதிவு. வெறுத்துப் போய் ஓடீராம கமெண்ட் போடுவீங்க என்ற நம்பிக்கையில்! ;) 

Friday, April 12, 2013

ஸ்ட்ராபெரி பெண்ணே!..

நீங்க மார்கெட் போகாமல் உங்கள் வாழ்க்கைத் துணைவரை தனியாக அனுப்பினால் என்ன ஆகும்?  நீங்க அனுப்பிய தேவையான பொருட்கள் லிஸ்ட்டை சுத்தமாக மறந்துபோயி, அவர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் அள்ளிக்கொண்டு, பச்சைமிளகாய்-இஞ்சி-கொத்துமல்லித் தழை போன்ற கொசுறுகளை ஒரு கணமும் நினைக்காமல், ஒரு மினி ஃப்ரூட்-வெஜிடபிள் மார்க்கட்டையே காரில் நிறைத்துக்கொண்டு வருவார்கள். :) அதையெல்லாம் விட முக்கியமான ஒன்று, ப்ளாகில் போட நமக்கு ஒரு பதிவு தேறும், ஹிஹி! :)

மினி மார்க்கெட்டைப் பார்த்து மயக்கம் போட்டுவிடாமல், எல்லாத்தையும் பத்திரமாக குளிர்சாதனப் பெட்டியில் வைச்சு உபயோகிப்பது உங்க பொறுப்பு! எங்க வீட்டில் நடந்த இப்படியாகப்பட்ட  நிகழ்வொன்றில் ஒய்யாரமாக கண்ணாடிப் பெட்டியில் செக்கச்செவேர் என்று வந்த ஸ்ட்ராபெரி பழங்கள் புளிப்புன்னா புளிப்பு, வாயில் வைக்க முடியாத அளவு புளிப்பு!! அதற்காக தூக்கி குப்பையில் போட  மனசு வருமா? இப்படி ஒரு ஸ்மூத்தியை மிக்ஸியில் அடிச்சு, ஒரு டால் க்ளாஸ் நிறைய ஊற்றி, ஸ்டைலா ஒரு பழத்தையும் கட் பண்ணி வைச்சு போட்டோ புடிச்சுட்டு, அக்கடான்னு உக்கார்ந்து குடிச்சும் முடிச்சுட்டேன்!
தேவையான பொருட்கள் 
ஸ்ட்ராபெரி பழங்கள் -5 (பெரிய பழங்கள்)
தயிர்-கால்கப்
தண்ணீர்-1/2கப்
சர்க்கரை(விரும்பினல்)-2டீஸ்பூன்

செய்முறை
ஸ்ட்ராபெரி பழங்களை நன்றாக கழுவி, அவற்றின் தலையில் இருக்கும் இலை மற்றும் தண்டுப் பகுதியை நீக்கவும்.
பழங்களை துண்டாக்கி மிக்ஸியில் போட்டு சிலநிமிடங்கள் அரைக்கவும்.
பிறகு அத்துடன் தயிர், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மேலும் சிலநிமிடங்கள் அரைக்கவும்.
ஜில் ஜில் ஸ்ட்ராபெரி ஸ்மூத்தி தயார். கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி சில்லென்று பருகவும்.
பி.கு. புளிப்பான பழம் என்பதால் போட்டோவில் இருக்கும் ஒரு ஒய்யாரக் கொண்டை ஸ்ட்ராபெரி அக்கா :) போட்டோ செஷன் முடிந்ததும் மீண்டும் குளிர்சாதனப் பெட்டிக்கே குடியேறிவிட்டார். புளிப்பில்லாத பழம் என்றால், ஸ்மூத்தி பருகும்போது இடையிடையே அந்தப் பழத்தையும் ஒவ்வொரு கடி கடிச்சு சாப்பிடலாம். :)

இது டயட்(!) வர்ஷன்..இதிலேயே கொஞ்சம் வேரியேஷன் வேணும்னா...ஸ்ட்ராபெரி பழங்கள், குளிர்ந்த பால், சர்க்கரை, ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம் சேர்த்து அரைத்தா..
ரிச் அண்ட் டேஸ்ட்டி ஸ்ட்ராபெரி மில்க்‌ஷேக் ப்ரேக்ஃபாஸ்ட்-டுக்கு ரெடி!  

இலவச இணைப்பு : மின்சாரக் கனவிலிருந்து ஒரு பாட்டு.. :) :)))



~~~
அனைவருக்கும் இனிய தெலுங்கு மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
~~~

Tuesday, April 9, 2013

புளிப் பொங்கல்

தேவையான பொருட்கள் 
பச்சரிசி (சோனா மசூரி அரிசி) -1 கப்
புளி - பெரிய நெல்லிக்காயளவு
வெங்காயம்-1
பூண்டு - 3 பற்கள்
வரமிளகாய்-8 (காரத்துக்கேற்ப)
கடலைப்பருப்பு, உளுந்துப் பருப்பு -தலா ஒரு டீஸ்பூன்
வெந்தயம்- ஏழெட்டு 
கடுகு-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை-கொஞ்சம் 
பெருங்காயம்-1/8டீஸ்பூன்
சர்க்கரை-1 டீஸ்பூன் (அ) சிறுதுண்டு வெல்லம்
உப்பு
நல்லெண்ணெய்-2டேபிள்ஸ்பூன் 

செய்முறை
அரிசியை அலசி, தண்ணீர் வடித்து அரைமணி நேரம் வைத்து, ஈரப்பதம் இருக்கையிலேயே மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். 
புளியை ஊறவைத்து கரைத்துக்கொள்ளவும். நான் உபயோகித்த அரிசிக்கு ஒரு கப் அரிசிக்கு 21/2 கப் தண்ணீர் தேவைப்படும். புளிக்கரைசலுடன் மீதிக்கு  தேவையான தண்ணீரையும் ஊற்றி தயாராக வைக்கவும். 
வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கவும். வரமிளகாயை கிள்ளிவைக்கவும். குக்கரில் எண்ணெய் காயவைத்து, கடுகு-பெருங்காயம் தாளித்து, வெந்தயம்-க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். பிறகு கறிவேப்பிலை-வரமிளகாய் சேர்த்து வதக்கி, வெங்காயம்-பூண்டையும் சேர்க்கவும்.
வெங்காயம் வதங்கியதும் புளித்தண்ணீரை குக்கரில் ஊற்றி கொதிக்கவிடவும்.
புளித்தண்ணீர் கொதி வந்ததும், தேவையான உப்பு-சர்க்கரை (அல்லது வெல்லம்) சேர்த்து அரிசி உடைசலையும் சேர்க்கவும்.
நன்கு கலந்துவிட்டு, குக்கரை மூடி 3 விசில் சத்தம் வரும்வரை வேகவைக்கவும். ஆவி அடங்கியதும்  குக்கரைத் திறந்து பொங்கலை கிளறிவிட்டு சூடாகப்  பரிமாறவும்.
நல்லெண்ணெய்-பெருங்காயம்-வெந்தய வாசனையுடன் புளிப்பொங்கல் தயார்.  இதனுடன் சிப்ஸ்-வடாம் வகைகள், தயிர் போன்றவை பக்க உணவாக பரிமாற பொருத்தமாக இருக்கும். அல்லது, தேங்காய ஒடச்சு, சின்னத் துண்டுகளா தோண்டி எடுத்து கடிச்சுக்குங்க! :) [ஜோக் இல்ல, சீரியஸ்! சூப்பரா இருக்கும்.]

அவசரமாக செய்ததால் இந்தமுறை அரிசியை தண்ணீர் தெளித்து அரைமணி வைத்தெல்லாம் பொடிக்கவில்லை, அப்படியே மிக்ஸில போட்டு  பொடிச்சுட்டேன்! ;) நீங்க நிதானமாச் செய்து பார்த்து சொல்லுங்க, நன்றி!

அரிசி பொடிக்க டிப்ஸும், ரெசிப்பி உதவியும் : காமாட்சி அம்மாவின் "சொல்லுகிறேன்" வலைப்பூவில் இருந்து. 

Tuesday, April 2, 2013

அன்னாசி, ஆரஞ்சு, மாதுளை

...இவற்றை சுலபமாக நறுக்குவது எப்படி என்று இன்றைய பதிவில் பார்க்கலாம். :)

ஊரில் அன்னாசியை முழுதாக வாங்கிவந்து வீட்டில் நறுக்குவது ரொம்பவே சிரமம். ஏனென்றால் அப்போது எங்க சமையலறைகளில் கத்தி புழக்கத்தில் வரவில்லை. அரிவாள்மனைதான் உண்டு. கத்தியால் காய் நறுக்குவோர் எல்லாம் அல்ட்ரா மாடர்ன் யுவதிகள் என்ற மாயை இருந்தது அப்போது! ;) வீட்டில் எங்காவதோர் மூலையில் ஒரு மொண்ணை கத்தி கிடக்கும், அந்தக் கத்தியால் பைனாப்பிளை நறுக்குவது என்பது மலையைக் குடைந்து எலி பிடிப்பது போல! :) ;)  அத்தனை பிரச்சனைகள் இல்லாமல் சுலபமாக ருசிக்க தள்ளுவண்டிகளில் அன்னாசிப் பழம் விற்பார்கள். பழத்தை நறுக்கி, துண்டுகளாக்கி, உப்பு-மிளகாய்ப்பொடி கலவையைத் தூவி தருவார்கள், முழுப்பழமுமே வேணும் என்றாலும் வண்டிக்காரரே தோல் சீவித் தந்துவிடுவார்.

அதுவும் இல்லாமல் பயணங்களில் ரயில்வே க்ராஸிங்-ல்  பேருந்து மாட்டும்போதும் வெள்ளரி-அன்னாசி இவை உப்பு-மொளகாப்பொடி அவதாரத்துடன் சுறுசுறுப்பாக விற்பனை நடக்கும். புகைவண்டிகளும் இதற்கு விதிவிலக்கில்லை. [இந்நேரம் உங்களுக்கு "வெள்ளரிக்கா..பிஞ்சு வெள்ளரிக்கா..என்னப் பாக்காமப் போறாளே சந்திரிகா"--காதல்கோட்டை படப்பாடல் நினைவு வரணுமே, வந்துச்சா? :)))]

கடந்தமுறை ஊருக்குப் போயிருந்தபோது பெங்களூர் சென்றுவிட்டு கோவை  திரும்புகையில் ட்ரெய்ன் தமிழகத்தை தொட்ட இடத்தில் இருந்து இப்படி பைனாப்பிள் துண்டுகள் கிடைத்தன. ஆனா  துரதிர்ஷ்டவசமாக என் மூக்கு நான்ஸ்டாப்பாக ஓவர்டைம் வொர்க் செய்து அருவியாக கொட்டிக்கொண்டிருந்ததால் என்னால் இவற்றை ருசிக்க முடியவில்லை. வழக்கம் போல சொல்லவந்ததை விட்டுப்புட்டு ஊர் சுத்தறேன் பாருங்க. ஹிஹ்ஹி!:) சரி, பேக் டு த ட்ராக்!

பைனாப்பிள்/அன்னாசி பழம் நறுக்குவது கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கும் வேலை. சிலருக்கு ஒவ்வாமை கூட வந்துவிடுமாம், இந்தத் தகவலை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அவ்வப்போது எடுத்துவைக்கும் படங்கள் கைகொடுக்க ஒரு பதிவும் உதயமாகிவிட்டது. :)

ஒருமுறை பைனாப்பிள் வாங்கிவந்தேன். நறுக்கலாம் என்று எடுத்தபோது அதன் தலைப்பகுதியில் தொங்கிட்டு இருந்த tag-ல் பழம் நறுக்குவது எப்படி? என டெமோ குடுத்திருந்தாங்க. ரொம்ப சுலபமா நறுக்கிரலாம் இந்த ஸ்டெப்ஸை ஃபாலோ  செய்தால்!
1.பழத்தின் தலையில் இருக்கும் தோகையை  நறுக்கிருங்க.
2. பழத்தை (தோலுடனே) இரண்டாக நறுக்குங்க.
3. பாதிப் பழத்தை நீளவாட்டில் துண்டுகள் போடுங்க.
4. இப்போ ஒவ்வொரு துண்டையும்  செங்குத்தா நிறுத்தி, பழத்தில்  நடுவில் இருக்கும் தண்டுப் பகுதியை நறுக்கிப் போட்டுருங்க.
5. பழத்துண்டை இடது கையில் வைத்துக்கொண்டு பழத்தின் சதைப்பகுதியை மட்டும் கத்தியால் நறுக்கி எடுங்க.
தட்ஸ் இட்..கையக் கடிக்காம பைனாப்பிள் நறுக்கிட்டோம். :)

சரி..பைனாப்பிள் எப்படி நறுக்க - என்று பார்த்தாச்சு, ஆனா வாங்கும் பழம் பழுத்திருக்கா, வாங்கிய உடனே நறுக்கி சாப்பிடலாமா அல்லது ஒரு சிலநாட்கள் பழுக்க வைக்கணுமா?  இவற்றை கண்டுபுடிக்க ஒரு ஈஸி ட்ரிக்..பைனாப்பிள் மேலே இருக்கும் தோகைப் பகுதியில் நடுவில் இருக்கும் ஒரு இலையைப் பிடித்து இழுங்க. (கடைக்காரன் பாத்துராம, பத்திரமா இழுக்கோணும், ரைட்?!;) ) ஈஸியா அந்த இலை கையோடு வந்தால் பழம் பழுத்திருக்கு, உடனே நறுக்கிச் சாப்புடலாம்!  அப்படி வராம அடம் புடிச்சா, பைனாப்பிள் இன்னும் பழுக்கலை. ஈஸின்ட் இட் சிம்பிள்?!!
~~~~~~~~~
ஆரஞ்சு
ஆரஞ்சை  தோலுரித்துச் சாப்பிடுவதை விட ஈஸி டெக்னிக் இது..இங்கே டிவி விளம்பரங்களில் பார்த்து இப்படி நறுக்க கற்றுகொண்டேன். :)
வட்டமாக நறுக்கிய ஆரஞ்ச் வில்லைகளின் ஒரு ஓரத்தில் கட் செய்துவிட்டு...
அழகாப் பிரிச்சா..டடா! ஆரஞ்சுப்பழம் சுவைக்கத் தயார்!
~~~
மாதுளை
 மாதுளையின் மீது கத்தியால் ஒரு கூட்டல் குறி கீறுங்க..அதை  அப்படியே பிடிச்சு இழுத்தா..
 பழம் நான்காகப் பிளந்துவிடும். அப்புறம் என்ன? மாதுளை முத்துக்களைப் பிரித்து எடுத்து..
ஸ்பூன் போட்டு சுவைக்கவேண்டியதுதான்!
~~~
இந்தப் பதிவு உங்களுக்கு உபயோகமா இருந்தால் மகிழ்ச்சி! :)

LinkWithin

Related Posts with Thumbnails